Quantcast
Channel: தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :)
Viewing all 27 articles
Browse latest View live

இருத்தலியம் (அ) சுயபீத்தல்கள்

$
0
0
வாங்கப்பு...

வருசம் ஒருக்கா தீவாளிக்கு எங்கூட்டுல இட்லிக்கு போட்டிருக்கோம்கற மாதிரி நீயும் வருசத்துக்கு ஒருக்கா ஒரே ஒரு ”உள்ளேன் அய்யா”பதிவெழுதறயே... உனக்கு வெக்கமா இல்லே இளவஞ்சின்னு தானே கேக்கறீங்க? எழுதுனா என்னங்க.. பதிவுகளைப் படிச்சா என்னங்க.. வலைப்பதிவரு பதிவரு தான். பதிவுலகமும் ஒன்னும் மாறிடலை. அப்படியே தானே இருக்கு! என்னதான் இருந்தாலும் பதிவு போடலாம்னு தோணினா எழுத மேட்டரு வேணாமா? அதான் நானே என்னை மேட்டராகி வழக்கம்போல... கொசுவத்தி.... ஹிஹி...

*****

போனவருசம் புத்தக கண்காட்சிக்குப் போய் 6 மணிநேரம் சுத்திசுத்தி வந்தேன். பெரியார் ஒரு பார்வைல இருந்து சாருவோட 10 புத்தகக்கட்டைத் தொட்டு சூனியம் வைச்சுக்காம ஜாக்கிரதைய தள்ளி நடந்து, நம்ப அய்யனார் புஸ்தகம் அட்டையை நின்னு ரசிச்சது வரைக்கும் செஞ்சு ஏறக்குறைய எல்லா பதிப்பகத்துலையும் பெரண்டு வந்தேன். துளசியக்கா பூனைக்குட்டி புத்தகத்தைக்கூட அங்கனயே நின்னு கால்வாசி படிச்சேன். கடைசியா என்ன வாங்குனேன்னா கேக்கறீங்க? வெளில கேண்டீன்ல சூடா மசால்தோசையும் காப்பியும்!

ஆனா ஏன் ஒரு புத்தகம்கூட வாங்கத் தோணலைன்னு பயங்கற ஃபீலிங்கப் போச்சுங்க. புத்தகம் வாங்க காசில்லாம இல்லைங்க! ஆனா எதை எடுத்தாலும் ஏனோ வாங்கி உடனே படிச்சாகனுங்கற பரபரப்பு வரவே இல்லை :( எங்க என்னோட புக்கு படிக்கற ஆசைக அப்படியே தேஞ்சு ஓஞ்ச்சுருச்சோன்னு பயங்கர வருத்தத்துல தோசை தின்ன வெரலை நக்கிக்கிட்டே யோசிச்சதுல அந்தக்கால என் வாசிப்பனுபவங்கள் எல்லாம் வரிசையா மண்டைக்குள்ள மார்ச்பார்ஸ்ட்! முத்து காமிக்ஸ் பின் பிரிக்காம அப்படியே 10 தடவை மோந்துபார்த்து ஏகாந்தமடைந்தது, பரிச்சைக்கு முந்தினநாள் பாடபுத்தகம் மாதிரி காக்கி அட்டைபோட்டு ”மனைவியைப் புரிந்துகொள்ளுங்கள்” படிச்சு கப்பு வாங்குனது, எங்கப்பாரு வாங்கி வைச்ச பழைய புத்தங்களையெல்லாம் எடுத்து அவரு எங்கெங்க அடிக்கோடு போட்டு அவரு கருத்தை வெளம்பி வைச்சிருக்காருன்னு  படிச்சு ரசிச்சதுன்னு யோசிச்சுக்கிட்டு நின்னதுல மண்டைல சடார்னு ஒரு பொறி!

நான் ஆறாப்பு படிக்கையில திருப்பூர்ல இருந்து ஈரோடு மாறுனப்ப லவட்டிக்கிட்டு வந்த கவருமெண்டு லைப்ரரி புக்கை ஆறுமாசம் கழிச்சு புத்திவந்து உள்ளார 10 ரூவா வைச்சு ஒரு மாப்பு கடிதமெழுதி திரும்ப லைப்ரரிக்கே அனுப்பிவைச்சேன். அந்த லைப்ரரிக்காரரு ஃபைன் கூட பிடிக்காம என் நேர்மைய பாராட்டி ரூவாய மணியார்டர் செஞ்ச அந்த அரிய நிகழ்வு!  உடனே ஒரு போட்டோ அட்ரஸ் ஃப்ரூப்போட 60 ரூவா கொடுத்து கன்னிமரால மெம்பரு ஆகிட்டேன்! 15 நாளைக்கு 3 புத்தகம்னு ஆறு மாசமா படிப்பு நல்லாத்தான் ஓடுது. வாசிப்பனுபம் ஒரு சுகம். அதுவும் தேடி வாங்கறதை விட தேடறப்பப்ப எதிர்பாராம கிடைக்கறதை படிக்கறது இரட்டிப்பு சுகம்! ஆமாங்க... இப்பத்திக்கி 16 வருசம் கழிச்சு மீண்டும் ஒருமுறை முற்றிலும் வேறொரு மனநிலையில் கும்பகோணத்து புழுதி பறக்கும் தெருக்களில் ( இந்தமுறை காமத்தை புரிந்துகொள்ள... ) பாபுவுடன் அலைந்து கொண்டிருக்கிறேன்  :)



*****


ன்பீல்ட் புல்லட்டுபத்தின கொசுவத்தி பதிவை மறந்திருக்க மாட்டீங்கன்னு நினைக்கறேன். அதுல புதுசா ஒரு புல்லட்டு வாங்கி புளங்காகிதம் அடையனும்னு ஆசைப்பட்டிருப்பேன். ஆனா என்னதான் புதுசு வாங்குனாலும் அது எங்கப்பாரு பைக்கு மாதிரி வருமான்னு ஒரே யோசனை. இதுக்கு பேசாம எங்கப்பாரு புல்லட்டையே புதுசா மாத்திட்டா?! இது ”பேசாம அவளையே நீங்க பொண்டாட்டி ஆக்கிக்கிட்டா?!” அப்படின்னு வடிவேலுகிட்ட கேட்டமாதிரியே இருக்கா? ஆனா அதான் நடந்தது. 34 வருசமா உழைச்ச வண்டியை ச்சும்மா ஜம்முன்னு புத்தம்புதுசா மாத்திக்கொடுத்த கோயமுத்தூரு மெக்கானிக் பாபுவுக்கு ( 98947 69155 ) நன்றி! இன்னமும் தமிழ்நாட்டுல ஆட்டோமொபைல் ஸ்பெஷலிஸ்டுகன்னா அது எங்கூருகாரருவகதான்! :)



இப்பத்திக்கு வறுத்தெடுக்கற சென்னை வெயிலெல்லாம் எனக்கு ஒரு மேட்டரே இல்லை! ச்சும்மா ராக்கெட்டாட்டம் ஈசியார் ரோட்டுல காத்தைக் கிழிச்சுக்கிட்டு ஆபீசு போய்வர்றதுல இருக்கற கெத்து...அடடா... இதுபோக இப்பவும் எங்கப்பாரு எங்கூடத்தான் அப்படீங்கறது மெயின் மேட்டரு! :)



*****


கொஞ்ச நாளைக்கு முன்ன எங்காபிசுல ஃபேசன் பெரேடு நடத்துனாய்ங்க. என்ற அழகுக்கும் நளினத்தும் கெம்பீரத்துக்கும் இதெல்லாம் தேவையான்னு நீங்க கேக்கலாம். இதெல்லாம் பார்த்தா அப்பறம் சரித்தரத்துல இடம் பெற்றது எப்படி? எதையுமே சீரியசாச் செய்ய தண்டி இல்லைன்னா அதை அப்படியே காமெடியா மாத்தி கல்லா கட்டுறதுங்கறது எனக்கு பாலபாடம்! பயபுள்ளைங்க எல்லாம் ச்சும்மா உடையா உடுத்தி நடையா நடந்து பழக எங்காப்பீசு பெருசுங்க மட்டும் Recession-2010ன்னு தீம் வைச்சுக்கிட்டு களமிறங்கிட்டோம். ஆளாளுக்கு காமெடி ஃபீசாகி அட்டகாசம் செய்ய நான் என் ”ஹேர்ஸ்டைலு”க்கு தோதாக சிவாஜி த பாஸ் வேலை போய் மொபைல் பெட்டிக்கடை நடத்தறதை எடுத்துக்கிட்டேன். ”அதிரடிக்கார மச்சான் மச்சான் மச்சானே”ன்னு பட்டையா எண்ட்ரி குடுத்து அப்படியே தலீவரு நடை நடந்து ரெண்டு கையையும் காத்துல விஷ்ஷுக்கி பின்னாடி பாக்கெட்டுல இருந்து பாக்கு ரீலை எடுத்து சுத்தி கழுத்துல போட அப்லாஸ் அப்படியே அள்ளிக்கிட்டது.


அதெல்லாம் நம்ப சூப்பர் ஸ்டாருக்குன்னாலும் ச்சும்மா 3 நிமிசம் வந்ததுக்கே மக்கா இப்படி கரகோஷம் எழுப்பி என்னை வைகுண்டம் போக வைச்சுட்டாங்களே... அப்ப அவருக்கு வாழ்க்கை முழுசும் எப்படி இருக்கும்னு யோசனை வராமலில்லை!

இதுபோக பொங்கலன்னைக்கு தமிழ்ல நல்லா மூச்சு விடாம ஒளர்ற திறமையைப் பாராட்டி காம்பயரிங் செய்ய மைக்குவேற கொடுத்தாய்ங்க... 4 மணிநேரம் சும்மா ரத்தம் வரவர தேமேன்னு சக்கரைப்பொங்கல் வைக்கற போட்டிக்கு வந்திருந்த அத்தனை பேரையும் வெளாரிட்டேன். அடடா.. மைக்மோகனே இப்ப ஓஞ்சிட்டாலும் அந்த செகண்டு நினைச்சதை நினைச்சபடி மைக்குல பேசிக்கிட்டு கும்பல்ல வளைய வர்றதுக்கு ஒரு மாதிரியான தினவுதான். IT வேலை போனாக்கூட எப்படியும் இசையருவி 10 மணி ஸ்லாட்டு வாங்கிடலாம்னு நம்பிக்கை வந்துருச்சுங்கப்பு! :)

எது எப்படியோ பலவருசம் கழிச்சு மீண்டும் கலைக்கூத்தாடியனதுல தாங்க முடியாத சந்தோஷம்! இதே சுகுர்ல அப்படியே அடுத்த வருசம் கோவை CIT Hormony கல்ச்சுலர்ஸுக்கும் எண்ட்ரி போட்டுற வேண்டியதுதான். ( என்ன... அந்தக்காலத்துல அடிவாங்கன மாதிரி இப்ப வாங்காத இருக்கனும்! வயசாவுதில்ல?! ஒடம்பு தாங்காது! ஹிஹி... )




*****

வயதில் இளையவர் ஆனாலும் என் மனைவி என்னைவிட எல்லா விடயங்களிலும் மிகத் தெளிவாக முடிவெடுக்கும் திறன் கொண்டவர் ( அவர் திருமணமே சாட்சி! ஹிஹி..)  ஆரம்பத்தில் என்னதான் நான் வாதப்பிரதிவாதத்தில் லாவகமாக கம்பு சுத்தினாலும் கடைசியில் திறமையான முடிவுகளால் அவரது சரியான ஆளுமையை அழுத்தம் திருத்தமாக உணரவைப்பவர். இப்பத்தின ஒரு சப்பை பிரச்சனை என்னவெனில் நான் பாலச்சந்தர் படங்களை பயங்கரமாக எதிர்ப்பவன். கவைக்குதவாத ஒரு கற்பனா உலகத்தினை நிறுவி முரண்பாடான கோட்பாடுகளை படம் முழுக்க வலியத்திணித்து சமூகத்தில் ஒரு புண்ணாக்குக்கும் உதவாத தீர்வுகளை பெண்ணிய புரட்சி என்ற சுகர்கோட்டிங்கில் அப்பட்டமான க்ளிஷேக்களாக காட்டியவர் என்பது தவிர அவரது படங்களின் மீது எனக்கு உணர்வுபூர்வமான ஒன்றுதல் வந்ததே இல்லை! ஆனால் என் மனைவி இதையெல்லாம் புறந்தள்ளி அவரது படங்கள் ( அதுவும் கல்கி! ) தனக்கு பிடித்திருக்கிறது என்கிறதோடு வாதத்தை முடித்துவிடுவார். சமூகம் மீதான மெச்சூரிட்டி என்னைவிட அவருக்கு அதிகம் என்பதில் எனக்கு முழுநம்பிக்கை உள்ளதால் இப்பொழுது நான் பாலசந்தர் படங்களை ஏற்றுக்கொள்வதா? வேண்டாமா? அல்லது மீண்டும் ஒரு முறை புதிய கோணத்தில் பார்க்க வேண்டுமா?!

ஒரே கொழப்பமுங்க!

*****
கையில கேமராவை வைச்சுக்கிட்டு கொஞ்ச வருசமா நானும் இங்கனயும் அங்கனயும் அல்லாடிக்கிட்டு இருக்கறது உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். இவ்வளவுநாளா காமெராவுல எப்படி சூப்பரா படமெடுக்கறதுங்கற புத்திதான் இருந்துச்சு. நாளாக நாளாக காமெரா அதன் சிறப்பம்சம் புதுப்புது டெக்னிக் இதெல்லாம் எப்படிங்கற புத்தியைத் தாண்டி நாம வெளிப்படுத்த நினைக்கறதை எப்படி செய்யறதுங்கற யோசனை வந்திருக்கு. அதாவது கருவி முக்கியமல்ல. அதன்மூலம் வெளிப்படுத்தற கலையே முக்கியங்கற மாதிரி. இப்பத்தின படங்கள் எனக்கு ஓரிரண்டு பாராட்டுகளை மட்டுமே பெற்றுத்தந்தாலும் நாம எடுக்க நினைக்கறதை புரிஞ்சுக்கிட்டவுங்கன்னு அப்படியே அவங்கமேல உள்ள இருந்து பொங்கிடுது. அதாவது கவிதையின் படிமங்களை புரிஞ்ச வாசகனை வாஞ்சையோடு பார்க்கும் கவுஜர் மாதிரி! என்னதான் பொழுதுபோக்குக்கு படமெடுத்தாலும் இந்த வகைதான் சரியான அடுத்தகட்ட நகர்வுன்னு மனசுக்கு தோணுது. இப்பத்திக்கு முழுசா நான் சரியா ஃபார்ம் ஆகலைன்னாலும் முயற்சி செஞ்சு இதுலயாவது நல்ல பேரு வாங்கனுங்கற ஆசை இருக்குங்க! :)

One Last Good-Bye! 


*****

இதுக்கே ரீலு அந்துருங்கறதால என் புராணத்தை இப்பத்திக்கு நிப்பாட்டிக்கறேன். இருந்தாலும் இனிமேல் மாசத்துக்கு ஒருக்காவாச்சும் ஏதாவது எழுதனும்னு எண்ணமிருக்குங்க.  எழுதறனோ இல்லியோ போட்டோவாச்சும் போட்டு ஒப்பேத்துவேன் என்று இன்றைய நாளிலே உளமார உறுதி கூறுகிறேன்! :)

ஸ்டேட் ஃபர்ஸ்ட்லெல்லாம் இங்கனதான் படிக்கறாங்க!

$
0
0
ஏழாப்பு C பிரிவு



கல்வியால் மட்டுமே.. இருளில் இருந்து வெளிச்சத்துக்கு...



என்னக் கொடுமை மணி இது!?



நான் வழக்கம் போல 12 மார்க்குதான்... நீங்க எவ்வளவு?


கூட்டாளி/சேக்காளி/க்ளாஸ்மேட்டு/பிரண்டு....


அது ஒரு கனாக்காலம்!




ஒரே வாரத்துல ரெண்டு பதிவுங்க... கையெல்லாம் நடுங்குது!

எனக்கென்ன?

$
0
0

இறக்கிப்போட்ட ஜீன்ஸின் மேல்
ஜாக்கி பட்டை உன்னுது
இறுக்கிப்போட்ட அர்ணாகொடியுள்
எலாஸ்டிக்போன சுடர்மணி என்னது

எல்லோபோர்டு பல்லவனுக்கு
மூணுரூவா மொய்யி
ஏசிபோட்ட வோல்வுக்குள்ள
”புல்ஸிட் ட்ராபிக்”குங்கற நீய்யி

வெறிக்க வெறிக்கப் பார்த்தே
பூத்த கண்கள் என்னுது
ரேபனை கழட்டுன ஒடனே
சுருக்கும் கண்கள் உன்னுது

”லதாவை நான் காதலிக்கறேன்”னு
இன்னம் செவுத்துலதான் எழுதறேன்
“ரெடி ஃபார் அ டேட்?”னு நீ
ஃபேஸ்புக்குல எழுதற

உனக்கும் எனக்கும்
மாசக்கடைசியில்
ரெண்டு சைபரே வித்தியாசம்

டேபிள் தொடச்சுப்போகையில்
நீ உதிர்க்கும் ”தாங்ஸ்”சில்
நிக்குது உன் மனிதாபிமானம்
கூடவே உன்தரத்தில் என் இடமும்

ஆனாபாரு...

நீயே உன் கம்ப்பூட்டரை
துண்டுதுண்டாய் தின்னும்வரை
உன் வெளிக்கியை ட்ராக்ட்ராப்பை
ட்ராஸ்பின்னில் போடும்வரை
நான் நானாகவே வேண்டுமுனக்கு

இன்னனும் தெளிவில்லை
சமூகத்துல தனிச்சுப்போவது
நீயா நானான்னு

நிச்சயம் தெரியுமெனக்கு
பதில் தெரியும் நாளில்
வெளிப்படுமென் வன்மம்
உனதுபோல பூசிமெழுகி
இருக்காது!

எனக்கென்ன...

ஏக்கம் எனக்கொன்னும் புதுசில்லை

*****

கதிர் இங்கே! - வேறென்ன?
பழமைபேசி இங்கே! - பிறகென்ன?
இளா இங்கே! - அதுக்கென்ன?

*****

நொந்தகுமாரன் வீடு திரும்புதல் (அ) நாற்பதின் நாய் குணங்கள் (அ) சீச்சீ இப்பழம் (அ) சூரமொக்கை (அ)...

$
0
0


உயிப்புடன் இருப்பதற்கும் உழைத்துக்கொண்டே இருப்பதற்கும் வித்தியாசம் இருக்குங்கப்பு. உழைப்பது பிழைப்பை ஓட்டவே என்றாலும் அதுவே 24 மணிநேரங்களை திண்ணும் போது உயிர்ப்புடன் இருப்பது என்பது பெருங்கனவு. கொஞ்ச நாளைக்கு முன்னால எனக்கொரு குழப்பம் வந்தது. நம்ப பீல்டுல எல்லாரும் இந்த ஓட்டம் ஓடறாங்களே. யாராச்சும் யாரையாச்சும் ஏறி மிதிச்சு முந்திக்கிட்டே இருக்காங்களே.. நான் அந்த இயக்கத்துல தான் இருக்கனா? இல்ல தன்முனைப்பே இல்லாம இருப்பதைக் கொண்டு மகிழ்ந்து அரைவேக்காடாக பொங்கித் தின்று வாழ்க்கையை ஓட்டறனான்னு. சரி இந்த எலி ரேஸ்ல நாமும் ஒரு தடவை ஓடித்தான் பார்ப்போம். பிடித்தால் அது இயல்பு. இல்லைன்னா முயற்சி செய்யலைங்கற குற்ற உணர்வாவது இல்லாம இருக்குமேன்னு முடிவு செஞ்சு தலை தெறிக்க ஓடுனேன் பாருங்க


ஒரு ஓட்டம். சுத்தி என்ன நடக்குதுன்னு தெளியறதுக்குள்ள மூணு வருசம் முடிஞ்சுருச்சு! இப்ப கண்ணை முழிச்சு பார்த்தா பொருளா பதவியா சிலது கெடைச்சிருக்கு. ஆனா அதுல ஓடுனத்துக்கான அர்த்தம்னு சொல்லிக்கிட பர்சனலா ஒன்னுமே இல்லை. இருக்கும் திறமைக்கும் தண்டிக்கும் ஆன்மாவை கலந்தடிக்கற மாதிரி ஒன்னு செஞ்சுட்டோம்னு சொல்லிக்கற மாதிரி ஒரு இளையராஜா கிடார் நோட்ஸோ அல்லது ஒரு வண்ணதாசனின் கண்களில் நீர்தேக்கும் ஒரு சின்ன நிகழ்வை கதையாக்கும் வித்தையோ அல்லது தாமுவின் நாவூரும் ஒரு நளபாக பதார்தத்தினையோ போல ஒரு உன்னதத்தின் உச்சியை அடைய முடியாட்டாலும் அதை உணரும் முயற்சியாகவாவது இருந்திருக்கலாம். செய்தது எதுவுமே எனக்காகவோ அல்லது எனக்குள்ளாகவோ இல்லைங்கறது ஏமாற்றத்தினை மட்டுமே தருகிறது. செய்யும் தொழிலே தெய்வம்கறதுல மாற்று கருத்தில்லை. ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே உயிர்ப்பும் வேலையும் ஒரே இடத்தில் கிடைக்கிறது போல.


பிழைப்புவாதத்திற்காகவும் இன்னும் பச்சையாக சொன்னால் கிடைக்கும் ஒரு எக்ஸ்ட்டா பூச்சியத்துக்காக மட்டுமே இன்னமும் இந்த துறையில் இருக்கிறேங்கறது தான் எனக்கு இப்போதைக்கு கிடைத்த தெளிவு. இதுல வருத்தப்படறதுக்கோ கேவலமாக நினைச்சுக்கறதுக்கோ ஒன்னும் இல்லைன்னாலும் நமக்கே நமக்கான வாழ்வின் சில கணங்களை எதற்கோ எங்கனையோ சிதறவிட்டுட்டு இருக்கறது உண்மைதான் போல. எலிகளுக்குள்ளான ஓட்டம் ஓடாமலேயே நமக்கான எல்லைகளையும் வாழ்க்கையும் வகுத்துக்கொள்ள முடியுங்கறதும் தெரியவந்த பொழுது வாழ்வில் எதற்கு முன்னுரிமை கொடுக்கனுங்கற லிஸ்டுல பயங்கர மாற்றம்! இழப்புகள் என்பது யாருக்காக என்பதைப் பொறுத்து அதன் மதிப்புகள் மாறித்தான் போகின்றன. மாறினால் தான் என்ன ஆகிவிடும்? குறைந்தபட்சம் எங்கப்பாரு வால்டரு வெங்கடசாமி போலவோ, நடேசன் வாத்தியாரைப் போலவோ, ஸ்டார் டைலரைப் போலவோ, சித்ரா ஸ்டோர்ஸ் ஓனரைப் போலவோ வேலையும் வாழ்க்கையும் இயைந்து வாழ்ந்து குடும்பத்தை நிமிர்த்திட முடியாதா என்ன? 











ஆகவே நான் ஓட ஓட ஓட ஓட்டம் என்னிக்கும் முடியாத ஓட்டப்போட்டியில் இருந்து நிதானிக்க போகிறேன்! ஆனால் எல்லா துறைகளையும் போலத்தான் எங்க பீல்டும்! கொஞ்ச நேரம் கண்ணை மூடிக்கிட்டு இருந்தம்னா கூட ஓடற வேகத்துல மக்கா நாலுபேருக்கு இங்கிட்டு ஒரு பொணம்னு ஒரு மெயில் தட்டி அதை நானூறு பேருக்கு பரப்பி ஓரமா ஒதுக்கி ஓய்ச்சிருவாய்ங்க. அதனால இனிமேலுங்காட்டி என் வாழ்வுக்கான மற்றும் குடும்பத்துக்கான நேரங்களிலும் தலைதெறிக்க ஓடாம ஆனா ஓடறமாதிரியே காலை மட்டும் ஆட்டிக்கிட்டே இருக்கப்போறேன். அதுபோக பிடிச்சதை செஞ்சு உயிப்புடன் வாழப்போறேன். என்னது பிடிக்குமா? அதைத்தான் தேடப்போறேன்! எங்கன தேடுவனா?! சரி விட்டுடுங்கப்பு. என்னாலயே இதுக்குமேல முடியலை! 

----

இந்தமுறை ஊருக்கு வந்தப்ப முத்திப்போன இளைஞர்கள் (அதாங்க.. அங்கிளுங்க...) 8 பேராக சத்தியமங்கலம் ரிமோட்ல 3 நாள் ஜாகை. இப்படி காட்டுக்குள்ளாக டேரா போட்டு தலைமறைவா இருக்கறது தினப்படி வாழ்க்கையில் இருந்து ஒரு எஸ்கேப்பிசத்துக்குதான்னு சொல்லிக்கலாம். ஆனா உண்மையில கிடைக்கும் இந்த சைக்கிள் கேப்புல அமுக்கி அடக்கிவைச்ச எல்லா எளவயசு கிறுக்குத்தனக்களையும் அவுதி அவுதியா செஞ்சிட்டு அப்பறம் சமுதாயத்துக்கான சட்டையை எடுத்து மறுபடியும் மடிப்புக்கலையாம மாட்டிக்கிட்டு மொகத்த அழுந்த தொடச்சிக்கிட்டு பேக் டு ஃபேமிலி கேம்னு கெளம்பிறனும்!


வெளங்காத எஞ்சினியரான என்னைத் தவிர மற்ற எல்லாரும் ஒருவாகா நல்லா படிச்சு மூளை இருதய டாக்டர்களாக வேலையாகி கண்ணாலம் முடிச்சு குட்டிகள் போட்டு கவுரவமா குடும்பம் நடத்தறோம்னு சமுதாயத்துல பிச்சரு வரைஞ்சவங்க. என்னதான் பழைய நண்பர்கள் என்றாலும் வேலையும் உறவுகளும் கொடுக்கும் அழுத்தங்கள் குணங்களையும் பண்புகளையும் திண்ண ஆரம்பித்திருக்கும் பருவம்றதால ஆரம்பத்துல யாரும் இயல்பா இல்லை. ஆரம்ப ஜோரான ஐபோன் மாடல், காரு டீடெல்ஸ்னு ஆம்பளைகளின் ஈகோக்களை எந்த அளவுக்கு நிவர்த்திக்கறோம்னு அலசி முடிச்சோம். அப்பறம் வேலைல அவனவன் எப்படி பகுமானமா பட்டைய கெளப்பிக்கறோம்னு பொய்பொய்யா அடுக்குனோம். அப்பறம் எப்படி அப்பாடக்கரா வாழ்க்கைல பிரச்சனைகளை ஹேண்டிலு செய்யறோம்னு வெளக்கிக்க இருக்கற இல்லாத சொந்தபந்த எதிரிகளையும், அவங்களுக்கான குணாதியங்களையும் ஏற்படுத்தி அதனால் ஏற்படும் குடும்ப சமூக பாதிப்புகளையெல்லாம் புட்டுப்புட்டு வைச்சு அவனவன் முதுகை அவனவனே கையை வாகாக வளைச்சு வளைச்சு சொறிஞ்சுக்கிட்டு இருந்த நேரம்.


நாந்தான் மொதல்ல விட்டிருக்க வேண்டும்! மசாலா ஆம்லெட்டுகளும், அரைவேக்காடு முட்டை கலக்கிகளும், கலர் கலராக பொறித்த சிக்கன் மட்டன்களும், இரத்தப்பொரியலும், மூளை வறுவலும், குடல்கறியும் வேகவைத்து தாளித்த கடலைகளும், மணப்பாறை முறுக்குகளுமாக சரக்குகளுக்கு நடுவால ஏத்திக்கிட்டே இருந்தா வயுறு என்னதான் செய்யும்? அதேதான். கொஞ்சம் பீல் லைக் ஹோமாக லெதார்ஜிக்கா இருந்த சமயத்துல சத்தமா டர்ர்ர்ருண்னுட்டேன். சடக்குன்னு அத்தனைபேரின் கண்களூம் நான் 20 வருடங்களுக்கும் முன்னால கண்ட கிண்டல் மின்னும் மின்மினிப் பூச்சிகளாயிற்று. ”அடக்கம் அமரருள் உய்க்கும். அடக்காமை அண்ட்ராயரை கிழித்துவிடும்” “பம்பம் பரிமளம் நாஸ்தி... பிப் பிப் மத்தியமம், கஸ் பிஸ் மஹா கோரம்... நிசப்தம் பிராண சங்கடம்”னு ஓட்ட ஆரம்பிச்சுட்டானுவ.



நான் விடுவனா? ( அதான் ஏற்கனவே விட்டுட்ட்டேனே!? ) “போங்கடா போக்கத்தவனுங்களா! பார்க்கலாம் நீங்க எம்புட்டு நேரம் நாகரீக கனவானுக்களா அமுக்கி நசுக்கி நடிக்கறீங்கன்னு... இத்தன வயசுல இதுகூட உங்களால இயல்பா விட முடிலைன்னா அப்பறம் என்னத்த நீங்க உங்களுக்காக வாழ்வை இயல்பா வாழ்ந்துருவீங்க?”ன்னு ஒரு பெரிய தத்துவபிட்டா எடுத்து விட்டுட்டேன். பயக ஒரு நிமிசம் கண்ணாமுழி திருவிட்டானுவ.. அப்பறம் என்ன? மத்த ரெண்டு நாளும் அவனவன் மேஸ்ட்ரோதான்! செட்டியார் டைப், சேட்டு டைப், குண்டுமாமி டைப், சபை டைப், கடுகெண்ணை டைப், மசால்வடை டைப், யெஜ்டி டைப், வெஸ்ட்டர்ன் எக்கோ டைப், கரடி டைப்னு மொத்தமா பல ஆராய்சிகள் செஞ்சி நான்ஸ்டாப் சிம்பொனிதான். அதுக்கப்பறம் ரெண்டுநாளுக்கு எங்களுக்குள்ள எந்த மனத்தடையும் பம்பலும் இல்லை. வரும்போது ஒரு மொடைல வந்தவனுங்க போகும்போது சிரிப்பா சிரிச்சோம்.

ஸ்ஸப்பா! லஜ்ஜை இல்லாமல் காற்று பிரிப்பதற்கே நாற்பதாயிருச்சே. இனி எப்ப நான் சுகம், துக்கம், பிறப்பு, பிணைப்பு, பந்தம், பொருள், பற்று எல்லாம் விட்டு கையில கரும்போட வீடுபேறு தேடிக்கெளம்பறது :(

----


அப்பாரு கூட கல்லூரி முடிக்கறவரைக்கும் அம்புட்டு சிறப்பா கம்யூனிகேசன் அமையலை. அவரக்கு வேலைன்னும் எனக்கு உலக அமைதிக்கான போராட்டகள்னும் பிசியா இருந்துட்டோம்! ஆனா நான் காலேஜ் முடித்த காலகட்டமான சில வருடங்களுக்கு வேலைக்குபோகாம வெட்டியா இருந்ததால அவருக்கு சாரதியாக இருந்ததுண்டு. எனக்கு வண்டியோட்டறதுல ரொம்ப இஷ்டங்கறதால பல கிலோமீட்டர் சளைக்காம அம்பாசிட்டரை உருட்டுவேன்.

தமிழ்நாட்டின் பல இடங்களுக்கு அவருக்கும் அவரது குழாமுக்கும் காரோட்டியிருக்கிறேன். அவருக்கு ஒவ்வொரு ஊருக்கும் அளாவளாவ சில நண்பர்களும் ஊரைப்பற்றி சிலாகிக்க சில காரணங்களும் இருந்ததுண்டு. ஊருக்குள் நுழையுமுன்பே “அப்டியே காந்திநகர் ரெண்டாவது லெப்டுல அரை அவர்டா குட்டி.. சண்முகம் சாரை பார்த்துட்டு போகலாம்”, “கருப்பண்ணா அண்ணாச்சி இந்நேரத்துக்கு கடைலதான் இருப்பாப்ல. நேர கடைல ஒரு எட்டு பார்த்துட்டு போலாம்”, “72 பேட்ச் நாராயணன் இப்ப இங்கதான் போஸ்டிங். நம்பள பார்த்தா சந்தோசப்படுவாப்புல”, “அரைகிலோ பால்கோவா வாங்கிக்கலாண்டா குட்டி..கோபி சாருக்கு புடிக்கும்” ங்கற மாதிரியான பேச்செல்லாம் சாதாரணம். அதேபோல சந்திக்கற ஒவ்வொருவரும் முகம் கொள்ளாத சிரிப்போட கட்டிக்கறதும் பலகாரமா விருந்தோம்பறதும்னு பார்க்கவே ஆத்மார்த்தமா இருக்கும்.



இவங்க சிரிச்சு சிரிச்சு பேசிக்கறத பரிமாறுன பலகாரமும் டீ தம்ளருமா ஒரமா இருந்து குசும்பனாட்டம் கவனிச்சுக்கிட்டே இருப்பேன். குடும்பத்துல அத்துணை பெயர்களையும் தனித்தனியா விசாரிச்சு தெரிஞ்சுக்குவாங்க. வேணுக்கற உதவியையோ தகவல்களையோ தயக்கமே இல்லாம கேட்டுப்பாங்க. செய்ய முடிஞ்ச உதவியை உறுதியாச் சொல்லி செஞ்சிருவாங்க. அதேபோல வருத்தமோ தயக்கமோ எதுவுமே இல்லாம சந்தோசமா விடைபெறுதல். தபால் கார்டுகளும் இன்லாண்டு லெட்டருகளும் எப்போதோ போட்டுப் பேசும் STD களும் எப்பொழுதும் அவர்களை விசாரித்ததாக சொல்லியனுப்பும் தகவல்களும் மட்டுமே எப்படி இந்த இணைப்புகளை பாராமரித்து உயிர்ப்புடன் வைத்திருக்கு முடியுங்கறது இன்னைக்கும் ஆச்சரியமா இருக்கு.


ஆனா அவங்க என்ன இழுத்தாலும் வாயத்திறந்து அவங்க போடற பொங்கல்ல கலந்துக்கவே முடிஞ்சதில்லை. பெரிசுங்க பேச்சுல பொடுசுக்கு எனக்கெதுமில்லைனாலும் “தம்பி, சரியாச் சாப்புடறீங்களா? இப்படி ஒடம்பு புடிக்காம இருந்தா எப்படி?” மாதிரியான சகஜமான கேள்விகளுக்கு கூட சிலுக்காட்டம் ஒக்கார்ந்த இடத்துலயே நெளிஞ்சுக்கிட்டு வாய்க்குள்ள மொணங்குவனே கண்டி போல்டா ஒரு வாக்கியம் பேசுனதில்லை. என்னமோ சின்ன வயசுல இருந்து கூச்ச சுபாவம் ஆட்டிப் படைக்குதுங்க. புதுசா ஒரு மனுசனை கண்டுபுடிச்சு பழகி செட்டவறதுக்குள்ள தாவு தீர்ந்துடுது. இதுல இழப்பு என்னவோ எனக்குதானாலும் நாமா முன்னாடி நின்னு பழக்கம் ஏற்படுத்திக்கறதுலயோ இல்லை தொடர்பை உயிரோட்டமா வைச்சுக்கறதிலையோ முனைப்பை விட தயக்கமும் கூச்சமுமே முன்னாடி நிக்குது. சின்ன வயசுல வீட்டுக்கு யாராவது புதுசா வந்தா கட்டிலுக்கு அடியில போய் ஒளிஞ்சுக்கிட்டன்னா வெளில வரவே மாட்டேன். அப்பறம் அவங்க போனப்புறந்தான் கொண்டுவந்த ஆரஞ்சையும் மில்க்பிக்கீசையும் பங்குகேட்டு வெளில வர்றது. 


வருத்தம் என்னன்னா இன்னமும் அப்படியே இருக்கறேன்னுட்டு தான் :( சில நாடுகள் பார்த்துட்டேன். பல ஊருகள் வாழ்ந்துட்டேன். உறவுகளும் நட்பும் இருக்கத்தான் செய்யறாங்க. ஆனா சொல்லிக்கற மாதிரி அதெல்லாம் சரியா எப்படி மெயிண்ட்டெயின் செய்யறதுன்னு தெரிய மாட்டேங்குது. தகவலும் தொடர்புமே வாழ்க்கையா இருக்கற இந்தகால ஒலகத்துல நூற்றுக்கணக்குல நண்பர்கள் லிஸ்டு ஆன்லைன்ல இருக்கறது மட்டும் ஒரு காலத்துக்கும் நம்மை வளப்படுத்தாதுங்க்ற உண்மை உறுத்துது. எங்கப்பாரு மாதிரி டைரி புல்லா நண்பர்களும் தொடர்புகளும் அவர்களுடனான ஆத்மார்த்தமான அளாவளாவலுக்கும் ஆசைப்படலனாலும் ஊருக்கு ரெண்டு பேருன்னு போய் நின்னு உரிமையோட பார்க்கறதுக்கு இருக்கனும்னு மனசு கெடந்து அடிச்சுக்குது. பழகத்தெரியாதுன்னு இல்லை.ஆனா ஆரம்ப ஐஸ்பிரேக் நடக்கறதுக்குள்ள ஜீன்ல ஒட்டிக்கிட்ட வெக்கமோ தயக்கமோ என்னைய மென்னு தின்னுருது.


இதும்போக இந்த ஐடில இருந்துக்கிட்டு யாரும் யாரையும் சார்ந்திருக்காம நமக்கான குறுகிய வட்டத்துல வாகா வாழ்க்கையை ஓட்டிற முடியுங்கறது இன்னும் கீழாக இழுத்துருச்சு போல. பார்க்கலாம் இந்த ரெண்டு கழுதை வயசுல இந்த தடைக்கல்லை எப்படி ஒடச்சு மேல வர்றேன்னு.


-----


கல்யாணம் கட்டி குழந்தைகள் பெற்று அவங்களும் பள்ளிக்கு போய்க்கொண்டிருக்கும் பருவத்தில் இருக்கும் வீட்டு ஆம்பளைகளுக்கு சம்போகம் என்பதே மாசத்துல என்னிக்காவது சில தடவை திடீர்னு கிடைக்கற லாட்டரி தான்! அதுவும் சூழ்நிலைகளை சரியா கணிச்சு நமக்கு தோதா மாத்தி அமைச்சு, பாவமா மூச்சை வைச்சு, நாமுச்சூடும் சுத்திவந்து ஏகப்பட்டு குறிப்புகள் காட்டி காரியத்துக்கு தளம் அமைக்கனும். இது போக கோடானுகோடி வானாதி தேவர்கள் பசங்களை சீக்கிரமா தூங்கவைச்சும் வீட்டம்மாவுக்கு தூக்கம் வரவிடாமலும் வரம் கொடுத்து நம்மையும் செத்தநேரம் சந்தோசமா தொலைஞ்சு போங்கடானு ஆதீர்வதிச்சா கிடைக்கும் அபூர்வ நேரக்கூறு அது. 


இதெல்லாம் போக நமக்கே நமக்குன்னு கெடச்ச அந்த நல்ல நேரத்துலயும் நம்ம நாறவாய் ஏதாச்சும் தத்துப்பித்துக்கா பேசி மூடைக் கெடுக்காம இருந்தா நடந்தாலும் நடந்துறக் கூடிய சமாச்சாரம்! ( இதை நம்பாதவங்கள்ல 99% பேரு தமிழ்படங்கள் கரைச்சு கரைச்சு கழுவி கழுவி ஊத்தும் காதல் படங்களில் காலத்தை ஓட்டிக்கொண்டு கல்யாணக் கனவுகளுடன் கால்கட்டுக்கு காத்திருக்கும் பேச்சுலரு மக்கள்ஸ்! மிச்சம் 1% எங்கனயோ ஏகப்பட்ட மச்சம் இருக்கற மஹா மஹானுபாவ பாக்கியவான்கள்!! கவனிக்கவும்! நான் வீட்டு சோற்றை உண்டுவாழும் அப்புராணி குடும்பிகளை மட்டுமே கணக்கில் வைக்கிறேன்!! )



என்ன இருந்தாலும் ஆம்பளைக உடம்பு இல்லையா? இயற்கையின் விதிப்படி நமக்கெல்லாம் மூடு வந்து சட்டுன்னு நட்டுவனார் ஆகறதுக்கு நேரங்காலமே தேவையில்லையல்லவா? அப்படியாப்பட்ட அசமஞ்ச நேரங்களில் தனிமைக்கு “கை” கொடுக்கறதுக்கு ஆயிரம் விசயங்கள் உள்ளங்கையில் உலகவலையென இருந்தாலும் அதெல்லாம் இப்பெல்லாம் சரியா தோதுப்படறதில்லை. சும்மா TAMIL HOMELY அப்படிங்கற கூளுளாண்டவர் தேடலில் கிடைக்கும் சில புகைப்படங்களே காரியமாற்ற ஏதுவானதாக இருக்கிறது. தன்மையும், வனப்பும், சிரிப்பும், நளினமும் பாந்தமுமே சரியான நியுரான்களை தூண்டிவிட போதுமானதாக இருக்கிறது. இந்த கிரியா ஊக்கிகள் கொண்டே கற்பனைக் குதிரைகள் பலகாதம் பாய்கின்றன. பலகாலமாக தேடியலைந்த பருத்த உருண்ட திரண்ட போன்றன வார்த்தைகளெல்லாம் சமீபகாலமாக எனக்கு அர்த்தமிழந்ததாக சொல்ல வரவில்லையெனினும் அதெல்லாம் அவ்வளவு கனகச்சிதமாக காரியமாற்ற உதவுவதில்லைங்கறேன். மிருகம், வெறி, தகிப்பு, அடங்காத்தாகம், ஆத்திரம் வரிசையிலிருந்த காமத்தை கனிவு, காதல், தன்மை, உயிப்பு வரிசையிலும் வைக்க இயலுமென மனம் எனக்கே தெரியாமல் நம்பி உணர ஆரம்பித்திருக்கிறது. வாலிப வயசுல தினத்தந்தியின் ஞாயிறு கவர்ச்சிபடம் படம் பார்க்கையில் இதெல்லாம் எந்தமூலைக்கு காணும்னு போடறாங்கன்னு சிரிச்ச காலத்துக்கான அசட்டுத்தனத்தினை கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்! 


இதுல இன்னொரு மேட்டரு என்னன்னா கல்யாணத்துக்கு முன்னால கைய வைச்சுக்கிட்டு சும்மா இருங்கடான்னு சித்தவைத்திய சிவராஜ் குடும்பம் என்னதான் பயமுறுத்துனாலும் ஒரு பாதிப்பயலுவ மட்டுமே பயந்து AAA சூப்பர் ஸ்பெஷல் செட் VVP ல வாங்க வாய்ப்பிருக்கு. ஆனா கல்யாணத்துக்கப்பறம் கரமைத்துனம் ஒரு கயவாலித்தனம்னு நொந்ததைச் சொல்லி நோகடிச்சு வியாபாரமடிக்க வழியில்லாததால அப்டியாப்டியே விட்டுட்டாய்ங்க போல! எனவே, மயக்கமும் இல்லை. கலக்கமும் இல்லை. வாழ்விலே நடுக்கமும் இல்லை! ஆகவே பிரபு குரல்ல கையை உயர்த்தி கட்டைக்குரல்ல சொல்லறேன் கேளுங்கப்பு. ”இது என் குஞ்சாமணி! என் உரிமை!!” :)


------

மேல படிக்கையில நாறவாயின்னு ஒரு வார்த்தை சொன்னேனில்லையா? லாஜிக்கவும் பிராக்டிக்கலாகவும் எல்லாத்தையும் பார்த்தும், தீர்த்தும் வெள்ளாடற வெளிவாழ்க்கையில கெடக்கற வெற்றி தோல்விகளும், கிரீடங்களும், அடிகளும், படிப்பினைகளும் நம் மூளையில் ஏற்படுத்தும் மடங்கள்களும் திறப்புகளுக்குமான விளைவு இது!




அதே தர்க்க ரீதியிலான வாதப்பிரதிவாதங்களை அப்படியே வீட்டுக்கு லாரி லாரியா கொண்டாந்து மனையாள் மக்கள் கேக்கறாங்களோ இல்லையோ எல்லா சின்ன பெரிய விசயத்துலயும் நடுவால பூந்து சொம்பு சொம்பா அள்ளி அள்ளி இந்த பஞ்சாயத்து மஞ்சதண்ணிய ஊத்து ஊத்துண்ணு ஊத்தவேண்டிய தினவு நாவுக்கு வந்துடுதுங்கறேன். விசயம் என்னவோ சப்பை மேட்டராத்தான் இருக்கும். என்னதான் பேசற நமக்கு ஒரு வாயி கேக்கற அவங்களுக்கு ரெண்டுகாது இருக்குதுன்னாலும் எம்புட்டு நேரம்தான் இந்த உறுப்புக தாங்கும்? சில நேரம் நம்ப காதுகளே நாம அளவில்லாம பெனாத்துறத தாங்க முடியாம மூளைக்கு “நிறுத்தித்தொலைடா மூதேவி!”ங்கற மெசேஜ் கொடுக்கும். ஆனா சும்மாவா பழகியிருக்கு இந்த நாக்கு! அதுபாட்டுல வார்த்தைக்கு வார்த்தை ஊசிகள் சொருகி, பழையன தொட்டு, புரட்டுகள் பிரட்டி, ஈகோக்கள் சீண்டி, இமேஜ்ல வெடி வைச்சு அதுக்கு தன்னால திரியும் பத்த வைக்கிற வேலைய முசுவாச் செஞ்சே தீருது.


அதுவா ஆடி அடங்கற நேரத்துல வீட்டுல எல்லாமே எல்லாருமே ஸ்வாகாதான்! “நாலணா பெறாத விசயத்துக்கு எதுக்கு இப்படி ஊரெல்லாம் சுத்தி வளைச்சு உருப்படாத தகவலாக்கொட்டி நாயாட்டம்/பேயாட்டம் கத்தறீங்களோ போங்க!”ன்ற அங்கலாப்புல முடிஞ்சாலே அன்னிக்கு நாள் அடியில்லாம தப்பிச்ச நல்ல நாள் தான்..

ஹஹா... ஆனால் பலநேரம் பின்விளைவுக ஒன்னும் பெருசா வெளீல சொல்லிக்கறமாதிரி இருக்காதுங்கப்பு! சில நாளைக்கு சோறு சரியா கெடைக்காது. நம்ப ஒவ்வொரு மூவுக்கும் மூஞ்சிலயே முறைப்பாலேயே அடி வுழும். ஊட்டுகுள்ளயேயே ஏதுனா முகமூடியோ அல்லது முக்காடோ போட்டுக்கிட்டு சுத்தவேண்டி வரும். பசங்க பார்வையிலயே “நெஜமாவே லூசாப்பா நீ?”ன்னு கேக்கும்! அப்பாலிக்கு அந்த கொஞ்ச நாளைக்கு வாலை காலுக்கு நடுவால வைச்சுக்கிட்டு மொகத்தில் மெரட்சி தெரிஞ்சும் தெரியாம சுத்திசுத்தி வரணும். அப்பறம் அப்படியே ஏதும் நடக்காதாப்புல ஆஃப் ஆகிற வேண்டியதுதான். மறதி தானே நம்பளை வாழவைக்குது? அது போக ஆம்பளைக்கு எப்பவும் ஒரு வீடுதானே? கோச்சுக்கிட்டு அப்பனூட்டுக்கா வண்டிய உடமுடியும்?





இருந்தாலும் இந்த சின்னத்தனத்தை எப்படிடா தீக்கறதுன்னு பலநாள் யோசிச்சததுல மறுபடியும் உதவுனது நம்ப கவுண்டபெல் தான்! இப்பவெல்லாம் வீட்டுல எப்பவும் நல்ல ஒரப்பா நெறைய கடலை, மசாலா பொறி, கறிவேப்பிலை, பெரிய பூந்தி, பெருங்காயம் போட்டுச் செஞ்ச நாட்டு மிச்சரு அரைக்கிலோக்கு கொறையாம இருக்கறாப்புல வாங்கி வச்சுக்கறது. எப்பவெல்லாம் நாக்கு தேவையில்லாத மேட்டருக்கு நாட்டாமை சொம்மை தூக்கிக்கிட்டு அசால்ட்டா வாயில அஞ்சாஸ்பவரு மோட்டரை ஸ்டார்ட் பண்ண சுவிச்சு போடறதுக்கு ரெடியாகுதோ அப்பவெல்லாம் கபால்னு அடுப்படிக்கு பாய்ஞ்சு மிச்சரு டப்பாவை வாரியணைச்சு ஓடியாந்துறது. அப்பறம் ஹால் சோபாவுல ஒரு ஓரமா காலை மடக்கி குத்தவச்சு பகுமானமா கை ரொப்பா மிச்சரை அள்ளி உள்ளங்கையில் குவிச்சு வாய எம்புட்டு முடியுமோ அம்புட்டு அகலமா தெரிந்து அப்படியே கொட்டிக்கிடுறது. அப்பறம் இறுக்கமா மூடுன வாய்க்குள்ள 32ம் வைச்சு அரைச்சுக்கிட்டே முதல் 10 நிமிசத்த ஒரு வார்த்தை வாயிலிருந்து செதறாம சமாளிச்சுட்டம்னா அப்பறம் மிச்சத்த ஓட்டிடலாம்.

மொதல்ல இத செய்யறதுக்கு செரமாமாத்தான் இருந்தது. நாக்கு மிச்சரு ஒரப்புக்கு பழகினப்பறம் பேசற தெனவு கம்மியாயிருச்சு போங்க! இப்பவெல்லாம் அவிங்களே “என்னாங்க/என்னாப்பா, இங்க இவ்வளவு அட்டகாசம் நடக்குது.. எதப்பத்தியும் கண்டுக்காம இப்படி ஓரமா ஒக்கார்ந்து மிச்சரு மொசுக்கறீங்களே?!”ன்னு சொம்பை வாலண்டியறா கையில திணிக்கற அளவுக்கு முன்னேறியாச்சு.


என்ன? இதுனால கொலஸ்ட்ரால் ஏறினாலும் இன்னும் 2 கிலோமீட்டரு நடந்துக்கலாம்! ஆனா வாயைக்குடுத்து கிடைக்கும் பின்விளைவுகளுக்கு மிச்சரு பார்ட்டியா இருக்கறது எம்புட்டோ தேவலாங்கறேன்!



கழிஞ்சது 40ஆ? இல்லை மிச்சமிருக்கறது 40ஆ? 

    இதுதான் நடுசெண்டரா? இல்லை ரெண்டுல மூனு ஏற்கனவே போயிருச்சா?

      இதுவரைக்கும் வளர்ந்தது அறிவா? இல்லை இதுக்குமேல வரப்போறதா?

        இதுவரைக்கும் ஏதாச்சும் கிழிச்சமா? இல்லை இதுக்குமேலதான் ஏதாச்சும் புதுசா கிழிக்க கண்டுபுடிக்கனுமா?

          அப்பாம்மா ரெண்டுபேருமே இல்லாதவங்க எல்லாம் அனாதைகளா? இல்லை அப்பான்னு ரெண்டு பசங்களும் கையப்புடிச்சு இழுத்துப்போக ஊட்டம்மாவும் இருக்கறவுங்க எல்லாம் பாத்தியப்பட்டவங்களா?

            இன்னும் அப்பனின் நினைவுக்குடையில இருந்தே மீட்சி நடக்கலையே, எப்படி பசங்களுக்கு நல்ல அப்பனாட்டம் வேடங்கட்டறது? அப்பனா தேறிட்டனா? இல்லை இன்னும் அப்பனுக்கான அனுபவத்தை கத்துக்கவே ஆரம்பிக்கலையா?

              நம்பியிருக்கற உசுருகளுக்கு ஏதாச்சும் உருப்படியா சேர்த்து வைக்கனுமா? இல்லை மீன்குஞ்சுகளுக்கு நீந்த கத்துக் குடுத்தாவே போதுமா? சள்ளப்பய நானே மூனுவேளை சோத்துக்கு நாளுபேருக்கு வழிபண்ண முடியும்னா பசங்களுக்கு இருக்கற மூளைக்கு தானா நல்லா வந்தற மாட்டாங்களா?

                பசங்களுக்கு இல்லைன்னாலும் நாளைக்கு கடைசில எனக்கு இழுத்துக்கிட்டு இருந்தா பார்க்க பொருள் வேணாமா? இல்லை குடுத்துவைச்ச அப்பாம்மா மாதிரி ஒரு கணத்துல பட்டுன்னு கெளம்பிருவமா?

                  வாழ்நாள் முழுக்க கஷ்டப்பட்டு அப்பங்கட்டுன ஊட்டுலயா நான் வாழறேன்? டேரா போட்ட ஊரெல்லாம் சொந்த ஊராப்போச்சே! அப்பறம் எந்த ஊருல நான் வாழறதுக்கு வீடு கட்டனும்?

                    இப்பத்திக்கு ஊருல வாழ்நாள் கனவாக கட்டிவச்ச வீடுகள்ல எல்லாம் பெருசுக தனிமைல காலத்தை கடத்தறதே கடமைன்னு இருக்காங்களே. நம்ப சோலியும் வாழ்க்கையும் ஒன்னுன்னு ஊரூக்கு செதறிக் கெடக்கமே. இதுல எந்தக் கனவின் மேல நாம நம்ப பசங்களுக்கும் சேர்த்து வீடு கட்டறது?

                      முற்பகல் செய்யின் இன்னும் 20 வருவத்துல பிற்பகல் விளையாதா?

                        ஊருல பெருசுங்க நெசம்மாவே பசங்க எங்கயோ நல்லா இருந்தா அதுவே சந்தோசம்னு இருக்கறாங்களா? இல்லை தனிமையின் துக்கத்த சொல்லி எங்கனயோ கஷ்டப்படற பசங்க நிம்மதிய சும்மா சின்னதா பொலம்பிக்கூட கெடுத்துறக்கூடாதுன்னு கேவல்களையெல்லாம் பேரப்பசங்களை தொலைபேசியில் கொஞ்சும் கெஞ்சுமொழியா மாத்திக்கறாங்களா?

                          “பாட்டிய சாப்புட்டையான்னு கேளுடா கண்ணூ”ன்ங்கறதுக்கு சரியான மொழிபெயர்ப்பு நமக்கு தெரிஞ்சிருக்கா? இல்லை ”பாட்டிக்கு சீக்கிரம் குட்நைட் சொல்லுடா குட்டி”ங்கற நம்ப பதில் அவங்களுக்கு தூங்கப்பண்னுமா?

                            கடைசிக் கட்டத்து தனிமைங்கறது கனவுக்குள்ள ஒளிஞ்சிருக்கும் நனவா?

                              வாழ்க்கைய முன்னால பட்டும் பார்த்து வண்டியோட்டுனா போதுமா? இல்லை பின்னாடி எதெல்லாம் கழட்டிவிடறோம்கற குற்றவுணர்சி மேல நுகர்வோர் இன்பத்தை ஜமுக்காளமா போர்த்தி கட்டி பெத்தவங்களும் பொழங்காத தாத்தாவின் ஓட்டு வீட்டு பரண்ல போட்டுடனுமா?

                                “எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது?”ங்கற கேள்வியை 1000பேரு தனித்தனியா கேட்டா அது தனிமனித கஷ்டமா? இல்லை சமுதாயப் பிரச்சனையா? 



                                  இப்படியெல்லாம் முதுகுரொப்பா கேள்விகளை மூட்டை தூக்கிக்கிட்டு சேக்காளிக கூட வாட்டர்ஸ்போர்ட்ஸ்சின் போது ஏதாச்சும் பொங்கல் போட்டா ஒரு தெளிவு கெடைக்கும்னு நினைச்சா அவங்கவுங்க ரெண்டாவது கேள்விக்கே கண்ணு உள்வாங்கி நெகத்த நோண்டறாங்க. அதுசரி பதிலா முக்கியம்? கேள்விகள் கேள்விகளாகவே இருக்கறவரைக்கும் வண்டி எப்படியாச்சும் ஓடிரும்போல! பதில் தெரிஞ்சுட்டா பாதிப்பயக பாதிலயே ஒடைஞ்சுருவோம்னுதான் நினைக்கறேன்!


                                  எனக்கெனமோ இப்பத்திக்கு ஒரு நல்ல ”செண்ட்டிமெண்டல் இடியட்” முகமூடி தான் வாழ்க்கைக்கு மிகப் பாதுகாப்பான ஒன்னுன்னு தோணுது. நம்பிக் கட்டுனா கஷ்டமோ நஷ்டமோ சிரிச்சும் அழுதுமே வண்டி ஓடிரும் போல. ஆனா இருக்கறதுலயே கஷ்டமானதும் இந்த வேசங்கட்டறதுதான்னு நினைக்கறேன்.


                                  உண்மையா சொல்லனும்னா இத்தனைநாள் நானும் எனக்கான ~600 ப்ளாக் சுட்டிகளும்னு கூகுள் RSS Reader ல சந்தோசமா படிச்சுக்கிட்டுதான் இருந்தனுங்க. நான் எழுதாததைப் பற்றி எந்தவித சொனங்களும் இல்லைன்னாலும் அறிஞ்சவங்க பிடிச்சவங்க பதிவை ரெகுலரா படிச்சுடறதுதான். கூகுளுக்கு என்ன ஆச்சோ RSS Readerயையே திடீர்னு இழுத்து மூடிட்டாங்க! அதையெல்லாம் இப்ப XMLலா பேக்கப்பும் எடுக்க முடியல. எப்பவும் ப்லாகர் சைட்டுக்குத்தான் வந்து ஒவ்வொன்னா படிக்க முடியுங்கறதுல பயங்கற கடுப்பு.


                                  அப்பறம் என்ன செஞ்சா கண்டினுசா நம்க மக்கா அக்கப்போரெல்லாம் படிக்கலாம்னு தேடுனா பாதிசனம் முகநூல்ல குழுமியிருக்கு. எனக்கென்னவோ ஒரு குறிப்பான மனநிலைல ஒரு முழு பதிவு படிக்கறது இன்னமும் திருப்தி தருவதாக இருப்பதால் எப்படி இழந்ததை மீக்கறதுன்னு தெரியாம முழிக்கறேன். ஹிட்லருக்கும் எனக்கும் ஒரே பிரச்சனைனு தெரிஞ்சதுல மட்டும் ஒரு அல்ப சந்தோசம்!




                                  யாராச்சும் RSS dataவை எப்படி எக்ஸ்போர்ட் செஞ்சு ஏதாச்சும் readerல இம்போர்ட் செய்யறதுன்னு தெரிஞ்சா சொல்லுங்கப்பு! உங்களுக்கெல்லாம் புண்ணியமாப் போகும். தெனம் நாளு பதிவு படிக்க முடியாம ஒடம்பு கொளம்பிப் போய்க்கெடக்கு! 


                                  ”அவனவன் டுவீட்டு, பேஸ்புக்குன்னு பிட்டுப் போட்டுகிட்டு பறக்கற காலத்துல இப்படி பழைய பிளாகருன்னு வந்து இம்மாம் பெரிய பதிவ நீட்டி மொழக்கி போட்டுக்கிட்டு வெக்கமில்லாம நிக்கறீயே? உனக்கெல்லாம் நெசமாவே நாட்டுல என்னா நடக்குதுன்னு தெரியாதாட கூமுட்டை?”னு திட்டாதீகப்பு. நெசமாலுமே முகநூல், கூகுள்+, ட்வீட்டெரெல்லாம் ஒன்னியும் புடிபடலை. முன்னாடி ப்ளாகரு சண்டைல யாரு கையில யாரு சட்டை யாரோட கொட்டை மாட்டியிருக்குன்னு ஒரு மார்கமாவாவது தெரிஞ்சுக்க முடியும். ஆது இதுகல்ல சுத்தம். 5 நிமிசம் பார்த்தாலே கண்ணு மயமயங்குது. நான் எப்ப புரிஞ்சி எங்கன தெளியறது? இப்பத்திக்கி ப்ளாகரே ப்ராப்த்திரஸ்த்து!!


                                  ஆகவே நின்னு பொறுமையா நாளைக்கு நாலு லைனுன்னு நாலு வருசத்துக்கு கூட படிச்சுக்கங்க. பொறவு எப்பத்திக்கி நான் மீண்டும் மீண்டு வந்து அடுத்தப் பதிவை போடுவனோ யாரு கண்டா?! ( போன முறை மாசத்துக்கு ஒன்னுன்னு வாயக் குடுத்து சொசெசூ வைச்சுக்கிட்டது இன்னும் வலிக்குதுங்கப்பு!! )

                                  ஜீவனே... ஜீவனே...

                                  $
                                  0
                                  0




                                  கானா பிரபா அவர்களின் மிகவும் டச்சிங்கான ”இளையராஜா எனக்கு இன்னொரு தாய்” என்ற பதிவினை படிக்க நேர்ந்தது. இளையராஜாவை பொறுத்தவரை மற்றவருக்கு தாயாகவும் தந்தையாகவும் தோழனாகவும் வழிகாட்டியாகவும் தெய்வமாகவும் பலபேருக்கு இருப்பது பெரிய விடயமல்ல. ஆனால் அந்த உணர்வினை பெற்றவருக்கே அது வாழ்க்கையில் எவ்வளவு பெரிய பிடிப்பையும் மாற்றத்தினையும் ஏற்படுத்துகிறது என்பது தெரியும். வலிகளை ராஜாவின் கரம்கொண்டு கடந்து வந்த கானா பிரபாவும் பொறாமைப்பட வைக்கும் ஒரு அதிர்ஷ்டசாலிதான்!






                                  இசை என்பது எனக்கு இங்கிலீசு மீடியம் படிக்கும் மேட்டுக்குடி மக்களால் அறிமுகப்பட்டது. இதையுங்கூடி ஒருமுறை எழுதியிருக்கிறேன்! ( பீட்டர் சாங்ஸ்சும் ஒரு தமிழ்மீடிய பையனும்... ) பேயடி அடிக்கும் ட்ரம்ஸ்சும், கதறக்கதற இழுக்கப்படும் லீட் கிட்டாரும் தான் பிடித்த வாத்தியங்கள். மெட்டாலிகா போலவோ மெகாடெத் போலவோ நீளமாய் முடி வளர்த்திக்கொண்டு வெறுங்கையில் கிடாரை காது கேக்கறதுக்கு தோதாக இழுத்தபடியே தலையை பரப்பிவிட்ட படி மாரியாத்தா ஆடவேண்டுமென்பது ஒரு அடையாளத்தேடல். ஆனால் அன்றைக்கு எனக்கிருந்த கம்பிமுடிக்கு வைத்த ப்ஃங்க் ஸ்டைல் பிரபுதேவா இந்து படத்தில் வைத்திருந்த தேன்கூடாட்டம் வந்ததே தவிர மெட்டல் ஸ்டார்னு சொல்லிக்கறமாதிரி இல்லை :( அன்றைக்கெல்லாம் ப்லிப்ஸ் பவர்ஹவுஸ் தான் பயங்கற செட்டு! அதுலயும் சில ஸ்பீக்கர்களை கழட்டி பானைமேல கவுத்தி அக்வெஸ்டிக் இஞ்சினியரிங்க் வயரிங்கெல்லாம் பார்த்து Bass ஏத்தி பாட்டு கேட்டுக்கிட்டு இருந்த காலம்.






                                  அப்பவும் சில விவரம் தெரிஞ்ச எதிர்கோஷ்டி மக்கள்ஸ் இளையராஜாவை கேட்டுக்கிட்டு இருப்பாங்க. அப்ப எனக்கு லவ்வு, பிரிவு, வேதனை, பெத்தவங்க பாசம், இறப்பு சோகம், பிறப்பு சந்தோசம்னு எதுவுமே மனதில தாக்காத பியூர் இம்மெச்சூரிட்டி பாய். அவனுங்க எங்களை “வாங்கடா பேயோட்டிகளா..”ன்னு கூப்பிடறப்ப நாங்க “போங்கடா தபலா தட்டிகளா..”ன்னு ஆரம்பிச்சு.. எப்ப பாரு ஒரு தபலாவ வைச்சுக்கிட்டு லொட்டு லொட்டுங்கறது தான் உங்காளு மூஜீக்காடான்னு வம்பிழுப்போம். அவனுங்க இந்த வயலின் தெரியுமா, இந்த கிடார் நோட்ஸ் புரியுமான்னு கொஞ்ச நேரம் பேசி ட்ரைசெஞ்சு பார்த்துட்டு தொலைங்கடா பீத்தரைகளானுட்டு ஆஃப்பாயுருவானுக.







                                  ஆனா எனக்கும் மொட்டையை புரிந்துகொள்ளும் ஒரு காலம் வந்தது. ஒரு நல்ல நண்பி மேல லவ்வு கெளம்பி விநாயக சதுர்த்திக்கு கடலை பருப்பு வெல்லமெல்லாம் போட்டு நெருப்புல வாட்டற தேங்காயாட்டம் வெந்து வெதும்பி திரிஞ்சேன் சில காலம். அப்பறம் ஒர் நல்ல நாள் பார்த்து சொல்லி பெரிய பழமா வாங்கினது தனிக்கதை. கோவைல பழம் வாங்கறதுன்னு பொண்னு பன்னு குடுத்துருச்சுன்னு அர்த்தம். அப்பறம் என்ன?! அதுக்குன்னே இருக்கும் பழம் வாங்கியோர் மீட்பு சங்கத்துல சரண்டர். சங்க வேலைகள் பெருசா ஒன்னுமில்லைங்க. எல்லாம் லோக்கல் மக்காதான். கைக்காசையெல்லாம் கலெக்ட் செஞ்சு லம்ப்பா ஒரு அமவுண்ட் தேத்துவானுக. பாகுபாடெல்லாம் இல்லை. நம்ப ஷேரும் பெருசாத்தான் இருக்கும். நியுஸ் சும்மா தீமாதிரி பரவிரும். பத்திருவது மக்கள்ஸ் சேர்ந்து அன்னிக்கு நைட்டு ஹட்கோல பேச்சுலர்ஸ் தங்கியிருக்கற சேவல் பண்ணைல தான் ஜமா. 






                                  என்னை நடுவுல ஒக்கார்த்தி வைச்சுட்டு எல்லா வேலையும் பரபரன்னு எப்பவும்போல நடந்தது. ரெண்டுபேரு பரோட்டா, சிக்கன் பிரியாணி, சில்லி ஐட்டங்கள்னு ராயப்பாஸ்ல இருந்து பார்சஸ்! சிலதுக பெரிய துணிப்பையா எடுத்துக்கிட்டு ஹோல்சேலா கூலிங் போகாம இருக்க பேப்பரெல்லாம் சுத்தி சில்பீரா ரொப்பிக்கிட்டு வருவானுவ. ரெண்டு பேரு வீட்டையெல்லாம் ஒழிச்சு நீட்டா ஹாலை ரெடிபண்ணி பாயைவிரிச்சு ஒக்கார்ந்தம்னா அது ஓடும் விடிய விடிய. அதாவது சங்கவிதி என்னன்னா பழம் வாங்குனவன் என்ன வேனா பேசலாம். கதறிக்கதறி அழலாம். திட்டலாம். மத்தவிங்க ஆறுதலா ஏதாச்சும் சொல்லலாம், காறிக்காறி துப்பலாம், அழறதுக்கு தோள்கொடுக்கலாம். இல்லைன்னா சும்மா ஊங்கொட்டலாம். இன்னும் அல்பையா சொல்லப்போனா எல்லாரும் கூடி கோழி ஆனவன கும்மியடிச்சுறனும். 






                                  மத்தியானம் வாங்குன பன்னுக்கு சாயந்தரம் வரைக்கும் பஸ்ஸ்டேடுலயே முகமெல்லாம் வெளிறிப்போய்தான் உட்கார்ந்திருந்தேன். அப்பறம் சாயந்தரமா தேடிவந்த ஈஸ்வரன் கிட்ட விசயத்தை சொல்லப்போக அது இப்ப எல்லாங்கூடி கொண்டாடத்துல வந்து நின்னிருக்கு! இதே அடுத்தவனுக்கு நடக்கறப்ப நானெல்லாம் சும்மா பூந்து பூந்து வெள்ளாடுவேன். மத்தவிங்களை ஓட்டறது முடிவெடுத்துட்டா என் நாக்கெல்லாம் நொடிநேரத்துல நைக்கி ஷூவெல்லாம் போட்டு ரெடியாகி நாறடிச்சுடும். ஆனா அன்னைக்கு எனக்குன்னு வந்தப்ப வாயத்தொறக்க முடியலை! பசங்க எப்படி எப்படியோ பேசிப் பார்த்தானுவ...கேட்டுப் பார்த்தானுவ...கெஞ்சிப் பார்த்தானுவ... திட்டிப் பார்த்தானுவ... ம்ம்ஹீம்.. நான் வாயத் தொறக்கனுமே?! என்ன சொல்லறதுன்னு தெரியலைங்கறதை விட எப்படி சொல்லறதுன்னுதான் தெரியலை! சோகமாகவோ சீரியசாவோ எந்தக் காலத்துலயாவது பேசியிருந்தா அது தன்னால வந்திருக்காதா? எதுகேட்டாலும் உர்ருன்னு மூஞ்சை வைச்சுக்கிட்டு மோட்டுவளைய பார்க்கறதும் கீழா வெறிச்சு பாய நோண்டறதுமாவே போய்க்கிட்டு இருந்தது. ”ஒன்னுமில்ல.. விடுங்கடா...” இதைத்தான் 4 மணிநேரமா நான் சொல்லிக்கிட்டு இருந்திருக்கவேண்டும். நடுவுல பரோட்டாவும் சால்னவும் மட்டும் பிச்சிப்போட்டு சொரணையா தின்னுமுடிச்சது ஞாபகம் இருக்கு. அவனுங்கெல்லாம் ஆளாளுக்கு ரெண்டுமூணு கவுத்துக்கிட்டு தின்றும் தீர்த்துட்டு பழகேசட்டை மட்டும் வாக்மேன்ல போட்டுவிட்டுட்டு எப்படியாச்சும் சாவுடா நாயேன்னு கெடைச்ச மூலைல உருள ஆரம்பிச்சுட்டானுவ. 







                                  பழகேசட்னா ஒன்னுமில்லைங்க.. லவ்பெயிலியரு பாட்டா இருவது புடிச்சு கேசட்டுல எழுதி சாமிபாட்டு கணக்கா போட்டுவிட்டு பழம்பெற்றானை காண்டாக்கும் வேலை! எல்லாம் தமிழ்தான் . நானும் மனசெல்லாம் எரிய அப்டியே சாஞ்சுக்கிட்டு ஒரு நாலு பாட்டு கேட்டிருப்பேன். நெஜமாலுமே இதுல ஏதாச்சும் பீலிங்கு கிடைக்குமானு ஒரு நப்பாசை. அஞ்சாவது பாட்டுன்னு நினைக்கறேன். “பாடிப்பறந்த கிளி... பாத மறந்ததடி..”ன்னு ஆரம்பிச்சது, முன்னாடி பலதடவை காதுல விழுந்த வரிகள்தான். ஆனா இந்தக்கணத்துல ஒவ்வொரு எழுத்தும் எனக்காகவே எழுதுனமாதிரி ஒரு தரிசனம். எப்பொழுதும் கிண்டலடிக்கும் அதே லொட்டு லொட்டு தாளகட்டு தான்... ஆனால் நான் அன்றைக்கு உணர்ந்தது வேறு மாதிரி... இழுக்கற வயலின் நேரா ஒரு காதுவழியா மண்டைக்குள்ள சொருவுது. ”ஒத்தையடிப்பாதையில நித்தமொரு கானமடி”ன்னா நான் எங்கோ ஆளவரமே இல்லாத தீவின் நடுவில் இருக்கறேன். ”கண்டகனவு அது கானாதாச்சு..”ன்னா மண்டை வெடிக்கற வலி! அதுக்கப்பறம் வந்துச்சுய்யா ஒரு வரி! ”வீணாசை தந்தவரு யாரு யாரு?” அப்படியே உள்ளுக்குள்ள நொறுங்கிட்டேன். அதுவரைக்கு உம்மனாங்கோட்டானா இருந்தவனுக்கு என்ன சொல்லி அழனும்னு தெளிவு வந்துருச்சு. வாய் கேவுது. கண்ணுல கரகரண்ணு கொட்டுது. ஒடம்பெல்லாம் நெகுநெகுன்னு ஆயிருச்சு... ”சொல்லில் அடிச்சா அது ஆறாது..”ங்கறப்பவெல்லாம் மொத்தமா சேதாரமாயிட்டேன். வாய்விட்டு கதறிக்கிட்டு ஒவ்வொருத்தனையே எழுப்புனேன். “மாப்ள.. தெரியாம ஆசைப்பட்டுடன்டா... எந்தப்புடா... எல்லாம் எந்தப்பு..” இதைத்தான் அடுத்த ரெண்டு மணி நேரத்துக்கு கதறிக்கிட்டு இருந்தேன். சத்தங்கேட்டு எழுந்திருச்சதே நாலுபேருதான். அவனுங்களும் நெஞ்சையும் கக்கத்தையும் கொஞ்ச நேரம் சொறிஞ்சுக்கிட்டே விட்றா.. விட்றான்னு சொன்னவனுங்க கொஞ்சநேரத்துலயே போடா மயிருன்னு சாஞ்சிட்டானுவ. ஹேவர்ட்ஸ் 10000னா சும்மாவா?!







                                  அன்னிக்கு நைட்டும் அதுக்கப்பறமும் அந்த ஒரு பாட்டையே தேயா தேச்சேன். வீணாசை வரிக்கு மட்டும் கேவிக்கேவி, அப்பறம் பொங்கி, அப்பறம் கண்ணுல நீர்மட்டும் முட்டி அப்பறமா ஒரு நிலைகுத்தும் பார்வைல முடிஞ்சு தெளியறதுக்கு ரெண்டு மாசம் ஆச்சு. ஆனா அந்தப்பாட்டு மட்டும் என்னிக்கும் எனக்குன்னு ஆயிப்போச்சு. இதுக்கப்பறம் பலதடவை பலபேரு பழத்துக்கு நானே தலைமையேத்து சங்கத்தை கூட்டி சிரிப்பா சிரிச்சும் ஆலோசனைகளும் ஆதரவுகளுமா அள்ளி விட்டிருக்கேன் ( அப்ப அதிதீவிர பாலகுமாரன் வாசகனல்லோ!! ) ஆனா தமிழ் பாட்டை நொட்டை சொல்லறதுங்கறது அத்தோட போச்சு.. இளையராசாவின் ஆதரவுக்கரங்கள் என்னைக்கும் என் தோளில்னு ஆயிருச்சு.






                                  ரசனை வேறு ரசிகன் வேறு. இன்னிக்கும் தமிழ்ல கருத்தம்மால இருந்து கடல் வரைக்கும்னும் ARR ல இருந்து சந்தோஷ் நாராயணன் வரைக்கும்னும் எல்லாரு பாட்டுகளையும் ரசிக்க கொண்டாட முடியுது தான். ஆனா உணர்தல்னா அது இளையராஜாவுக்குன்னு மட்டுமே இருக்கு முடியும்னு தோணுது. அவரு பாட்டுக்கு எல்லாப் பாட்டுகளையும் அடிச்சு வைச்சுட்டாரு. வாழ்க்கையில் நமக்கான நிகழ்வுகளும் அனுபவங்களுமே அப்பாடல்களுடன் நம்மை பிணைத்து விடுகிறது. என் வாழ்வின் எல்லா நிகழ்வுகளுக்கும் ஒரு பாட்டு பிடிச்சு வைச்சிருக்கறேன். 






                                  மாடவிளக்கை யாரோ ஏத்திவைச்சதில் இருந்து கொடியிலே மல்லிகைப்பூவைச்சு நீ பார்த்த பார்வைக்கு நன்றிசொல்லி பிச்சைப்பாத்திரம் ஏந்தவைத்தது வரை எனக்கே எனக்காக வயலின்களும் கிடார்களும் பியானோக்களும் போட்டியிடும் மாயத்தருணங்கள் . அவைகளை கேக்கும்போது அவற்றிக்கான அன்றைக்கான அந்த உலகத்திற்கு அப்படியே ஜம்ப்பிருவேன். 10 மணிநேரங்கள் சளைக்காமல் வண்டியோட்டுவேன். இரவுமுழுவதும் பஸ் ரயில் பயணங்களில் மாற்றிமாற்றி கேட்டுவிட்டு விடிந்தபின் வீடு வந்து நாள்பூராவும் தூங்குவேன். அந்த பாடல்கள் என்னை எங்கெங்கே அழைத்துச் செல்கின்றன என்பதில் இருக்கிறது என் வாழ்வின் சரடு. உன்னதம் என்றும் அப்பழுக்கற்றது என்றும் என் வாழ்வில் நான் கண்டடைந்த வெகு சிலதில் ராஜாவின் எனக்கான பாடல்களும் உண்டு. ரகுமானா யுவனான்னு கூட பாடல் கணக்கா படவாரியா ரெண்டு மணிநேரம் பேசிற முடியும். ஆனால் இளையாராஜாவா மத்தவங்களாங்கற பேச்சையெல்லாம் ஒரு சிறு புன்னகையால் புறந்தள்ளிப்போக மட்டுமே முடிகிறது. இத்தனைக்கும் கானாபிரபா மாதிரி ரகவாரியா ராகவரிசையா பிட்டுபிட்டா சிலாகிக்கும் உணரும் பாராட்டும் இசை நுண்ணறிவெல்லாம் எனக்கு இல்லை. ஆனா ராஜாவோட சிலது கேட்டு அதோடு என் வாழ்க்கையை பிணைச்சுக்க கூடிய உயிர்ப்புத்தன்மை இருக்கற வரையில் இன்னுமிருக்கும் 30 வருடங்களையும் அந்த 30 பாடல்களை கொண்டே எளிதில் தாண்டிருவேன்னு ஆழ்ந்த நம்பிக்கை இருக்குங்கப்பு! :)







                                  இதோ இன்றைக்கு ராஜா எனக்குன்னு இன்னொன்று கொடுத்திருக்கப்ல. கேட்ககேட்க தான் புரியும்.. படத்தோட பார்த்தாதான் இன்னும் எபெக்ட் இருக்கும்... மோன நிலையில கேங்கனுங்கற பம்மாத்தெல்லாம் இல்லாம தொடங்கற நொடியில் இருந்து மண்டைல சரக்குன்னு இறங்கி நேரா நெஞ்சுல சிம்மாசம் போட்டு ஒக்கார்ந்துக்கிச்சு! கேட்கக் கேட்க இப்பவும் உள்ள இருந்து ஏதோ ஒன்னு குபுக்குன்னு பொங்குதுதான். ஆனா கதறி அழனுங்கறது தேவைப்படலை. ( இளவஞ்சி வாழ்க்கைல மெச்சூராய்ட்டாறாமாம்! :) ஜீவனே... ஜீவனே... திரும்பவும் ஒருமுறை ரிப்பீட் லூப்ல ஓடிக்கிட்டே....















                                  ப்ரே பண்ணுவேன்! நானும் ப்ரே பண்ணுவேன்!!

                                  $
                                  0
                                  0
                                  இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராவின் ப்ரேயர் சாங் கேட்டேன்!

                                  லவ் பண்ணி விட்டுட்டு போன பெண்ணை வாழ்த்தி ப்ரே பண்ணனுமாம்ல ப்ரே! ஆண்களின் காதல் தோல்வியின் வலி அவ்வளவு எளிதில் கடந்துவரக் கூடியதா என்ன? அப்பறம் இவ்வளவு நாள் வசந்தமாளிகை சிவாஜி ரத்தம் கக்கியதற்கும், நெஞ்சில் ஓர் ஆலயம் கல்யாண்குமார் உயிரையே விட்டதுக்கும், வைதேகி காத்திருந்தாள் விஜயகாந்த் கோவில் மண்டபத்துல ஊமையாகி குடியேறியதற்கும், மூன்றாம் பிறை கமல் அடிவாங்கி ப்ளாட்பாரம் முழுக்க உருண்டத்துக்கும், மைக் மோகன் படத்துக்கு படம் பன்னு சாங்ஸ்சா பாடித் தள்ளினதுக்கும், காதலிக்கு கல்யாணமே செய்துவைக்கும் பூவே உனக்காக விஜய்யின் தியாகத்துக்கும், சுப்ரமணியபுரம் ஜெய் குத்து வாங்கி செத்ததுக்கும் அர்த்தமே இல்லையா என்ன?!

                                  உண்மையில் சொல்லப்போனால் இப்படி தன்னையும் வருத்திக்கொண்டு வாழ்வையும் கெடுத்துக்கிட்டு எல்லோரையும் சிரமப்படுத்தறதுக்கு பதிலா இப்படி வெகு இலகுவாக இந்த வலியை கடந்து வருவது சாலச்சிறந்ததுன்னு தோணுது. எப்படியும் பின்னாடி எவளையாவது கண்ணாலம் கட்டி புள்ள குட்டியோட சந்தோசமாத்தான் இருக்கப் போறோம். இந்த ஃபீலிங்ஸ் எல்லாம் பின்னாடி நமக்கே நமக்குன்னு கமுக்கமா சிரிச்சுக்கற தமாசாத்தான் ஆகப்போகுது.

                                  இதாச்சும் அவனவன் உணர்வுகள் அவனவன் அளவில். ஆனா ஒருதலைக் காதலி முகத்துல ஆசிட் வீசறதும், நமக்கு கிடைக்காதவ வேற எவனுக்கும் கிடைக்கக் கூடாதுன்னு கழுத்தை அறுத்து கொலை செய்யறதும், அவ எங்கனையும் வாழ்ந்துறக் கூடாதுன்னு அந்தரங்கத்தை எல்லாம் வலைல ஏத்தறதும்னு வன்மமும் பழிவாங்கலுமாகநடந்து கொண்டிருக்கும் சமூகவியாதிகளை அறவே ஒழித்துக் கட்டவாவது இப்படி காதல் தோல்வியை ஜஸ்ட் லைக் தட் தட்டி விட்டுட்டு ஒரு வித செல்லக் கோபமும், கால் இடி எரிச்சலும், ப்ரெண்ட்லி பொறாமையும் கொண்டு “உங்கப்பா பேண்ட்டு டர்ர்ர்ரு...”ங்கற மாதிரியான சின்னப்பசங்க சண்டையின் பஞ்சாயத்து தீர்ப்புகளாக முடித்துக் கொள்வது உண்மையில் அருமையா இருக்கு!பாடல் முழுக்க ஒரு சின்ன குழந்தைத்தனத்தின் வீம்பு விரவியிருக்கும் இந்த ப்ரேயர் பாட்டை மனதார வரவேற்கிறேன்.

                                  ஆகவே,

                                  உங்கப்பா வெஸ்பா உன் காலேஜ் கேட்டில் பஞ்சராகனும்!

                                  வெள்ளரி ஃபேசியலுக்கு பிறகு உம்மூஞ்சி வெளிரிப் போகனும்!

                                  ரிசப்சன் போட்டோஸ்ல உன் தலைக்குமேல நானே கொம்பு வைக்கனும்!

                                  கொடியில காயப்போட்ட உன் ஜட்டிமேல காக்கா கக்கா போகனும்!

                                  உன் மாமியாரும் நீயும் ஒன்னா மருமக கொடும சீரியல் பார்க்கனும்!

                                  உன் கல்யாண பொடவைல உன் புருசனே காஃபியை தவறி கொட்டனும்!

                                  சீயக்கா குளியல் நடுவால பாத்ரூம்ல தண்ணி நிக்கனும்!

                                  உம்புருசனின் முன்னால் லவ்வரு உன்னைவிட வெகு அழகா இருக்கனும்!

                                  ஹனிமூன் மொதநாளே அவனுக்கு பரோட்டா தின்னு நைட்டுபுல்லா பேதியாகனும்!

                                  பாத்ரூமே இல்லாத இடத்துல உனக்கு அர்ஜெண்ட்டா மூச்சா வரணும்னும்


                                  ப்ரே பண்ணுவேன்!  நானும் ப்ரே பண்ணுவேன்!!

                                  உங்க ப்ரேயர் என்னங்கப்பு? :)


                                  அன்னயும் ரசூலும்

                                  $
                                  0
                                  0
                                  உங்களுடைய சொந்த ஊர் ஏன் உங்களுக்கு பிடித்திருக்கிறது? திருச்சி மலைக்கோட்டை கோவிலின் உச்சியில் படிகளில் அமர்ந்து திருச்சியை பார்க்குமிடம் உங்களுடன் ரகசியமாய் கைகோர்த்து வந்தவரால் பிடித்திருக்கக்கூடும். கோவை கிராஸ்கட் ரோடு சேட்டுக்கடை பானிபூரியின் சுவை ஜமா சேர்ந்த நண்பர்களால் சிறப்புற்றிருக்க கூடும். ஸ்ரீரங்கம் கூட வாத்தியாரும் நீங்களும் பிறந்த ஊர் என்பதற்காகவே ஒட்டிப்போக வாய்ப்புண்டு. ரசூலுகுக்கு கொச்சின் ஏன் பிடிக்கும் என்பதற்கு நட்பு தவிர வேறு காரணியில்லை என்றுதான் தோன்றுகிறது. வேறு வழியும் இருந்திருக்காது போல. இரண்டாம் திருமணம் முடித்த அப்பா பெண்டு பிள்ளைகளோடு வேறு ஊரில் ஜாகையாயிருக்க கொச்சினில் ரசூலும் அவன் அண்ணனும் மட்டுமே திரைச்சீலைகள் பிரிக்கும் ஒரே அறை வீட்டில் பொங்கித்தின்று வாழும் வாழ்க்கை. வயதுக்கு வந்த பிரமச்சாரி அண்ணன் தம்பிகள் இரண்டுபேர் ஒரே வீட்டில் இருக்கையில் பழகும் முறையை கவனித்திருக்கிறீர்களா? கண்களில் நீர்முட்டி வலியினை சொல்லிக்கொள்ள வேண்டியதில்லை. சந்தோசமாக இருக்கும் பொழுதில் கட்டிப்பிடித்து உச்சிமுகர தேவையில்லை. பிரச்சனைகளை மணிக்கணக்கில் பேசிப்பேசி மாய வேண்டியதில்லை. ‘ப்ச்’, ‘என்னடா?’, ‘இந்தா..’ என்று எல்லாம் ஒரு வார்த்தை பேச்சுக்கள்தான். அவைகள் ஆயிரம் விளக்கங்ளையும் புரிதல்களையும் கொடுக்க வல்லவை. 60 வருட தாம்பத்தியத்தின் பேச்சுகளற்ற வாழ்வைப்போல.


                                  அண்ணனுக்கு அயல்நாடு போக வேண்டி பாஸ்போர்ட் கிடைத்துவிடும் என்கிற கனவுகளுடன் பெர்ரியில் தண்ணீர் மேல் வேலை. தம்பிக்கோ எவ்வித கனவுகளுமற்று கிடைத்த சவாரிக்கு டாக்ஸி ஓட்டிக்கொண்டு சாலை மேல் வேலை. இருவருக்குமே உறையுள் பற்றிய பெருங்கவலைகள் ஏதுமில்லைதான். ஏமாற்றங்களும் ஏகாந்தமும் சேரும்பொழுது ஒருவித விட்டேத்தியான மனநிலை வருமல்லவா? அதைக்கொண்டு இருவருக்கும் வாழ்க்கை கட்டஞ்சாயாவும், மீன்கறி சோறும், நண்பர் சந்திப்பும், தெருமுக்கு கால்பந்தாட்டமுமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னும் அனுக்கமாய் சொல்ல வேண்டுமெனில் கொச்சினுக்கும் வைபினுக்கும் இடையே ஓடும் ஃபெர்ரியைப் போல ஆசூசையாகவும் அத்தியாவசியமானதாகவும்.


                                  ரசூலைப்பற்றி சிலாகித்துச் சொல்ல சிலதுண்டு. ரசூலுக்கு நிர்ச்சலமான கண்கள். அவைகளோடு அந்த கருத்த தாடிக்குள் ஒளிந்து விளையாடும் வெள்ளந்திச் சிரிப்பும் சேரும்போது அவனை யாருக்கும் உடனே நம்பவும் பிடிக்கவும் வைத்துவிடுகிறது. குழந்தைகளின் கண்களை அவதானித்திருக்கிறீர்கள் தானே? மனதில் சகமனிதர்கள் பற்றிய சந்தேகங்களும் அச்சங்களும் பொறாமைகளும் குடியேறாத வரையில் கண்கள் ஒருவித ஈர்ப்பாகத்தான் இருக்கின்றன. குழம்பியும் கலங்கியும் அபோதம் ஏறிப்போயிருக்கும் கண்களைக்கொண்ட நமக்கு இயல்பான கண்களே ஈர்ப்பாக இருப்பது அதிசயமில்லைதான். அவனுடையது ஓஷோவின் கண்களைப்போல. ஆண்களில் வெகு அபூர்வம் இவ்வகை முகவமைப்பு. இவ்வகை ஈர்ப்பே அவனுக்கு கார்திருட்டு, சில்லரை அடிதடி என சிற்சில சமுதாயக்குற்றங்கள் புரியும் நண்பர்களுக்கு நம்பிக்கைக்கு உரியவனாக வைத்திருக்கிறது. பிடிக்காமலேயே பிடித்த நண்பர்களுக்காக உடன்போகவேண்டிய சூழல். கூடா நட்பு எங்கே முடியும்? நல்லதும் கெட்டதும் அவரவர் வாழ்வின் முறைமைகளும் சமூகம் அவரவரை வைத்திருக்கும் இடங்களைப் பொறுத்துமே மதிப்பிடப்படுகிறது என்றாலும் எளியது வழுக்கி விழும் இடங்களில் வலியது தயவுகள் கிஞ்சித்தும் காட்டாது புரட்டியெடுத்து விடுகிறது.

                                  வாழ்க்கை என்ன குளித்தலை ஊத்துக்குளி வெண்ணையா? அப்படியே வழுக்கிக்கொண்டு ஓடிக்கொண்டிருப்பதற்கு? அது யாரையாவது நகர்த்திக்கொண்டு போய் யார் அருகிலாவது வைத்துவிட்டு சிரிக்கிறது. ஒரு முறை வைபினில் புதிதாய் சேர்ந்த கிருத்துவ நண்பனது நாட்டு விசேசத்திற்காக சென்ற இடத்தில் கூட வந்த நண்பர்களின் அலப்பரை அதிகமாய்ப் போக சடுதியில் ஆரம்பித்த அடிதடிக்கு பயந்து ஒளிந்துகொண்ட இடத்தில்தான் ரசூல் அன்னவை பார்த்தான்.


                                  நான் முதன்முதலில் அன்னவைக் கண்ட இடம் உண்மையில் அவளை முதன்முதலில் பார்த்த இடமல்ல! அவளை இதற்கு முன்பு ஒருமுறை நண்பர்களுக்காக கார் திருடிக் கொண்டு வந்த வழியில் கண்டிருக்கிறேன். பயத்திலும் பதட்டத்திலும் கோவத்தின் விளிம்பிலும் இருந்த கணம். சரியாக முகம் மனதில் பதியவில்லை எனினும் நினைவில் நிழல் என விழுந்துபோன ஒரு உருவமாய் அவள். நிலவொளி சிதறும் கலங்கிய நீரின்மீது அகல்விளக்கு மிதக்க விடும் பெண்ணின் பிம்பம் பிரதிபளித்தது போல கண்கள் விரும்பிக் கண்டும் காணாததுமாய்.  ஆனால் அன்றைக்கு அவளுக்கு நானொரு பொறுப்பற்ற சல்லிப்பயல் என மனதில் விழுந்திருக்க வேண்டும். 



                                  இன்று வந்த வம்புசண்டையின் விளைவாக வாங்கப்போகும் அடிகளுக்கு பயந்து நான் அவசரத்திற்கு ஒளிந்துகொள்ள கிடைத்த இடம் கடவுளின் பிரார்த்தனைகளுக்கான மெழுகுவர்த்திகள் ஏற்றும் மேடையின் அடியில். நண்பர்கள் தப்பிவிட்டார்களா என எட்டிப்பார்க்கும் வேளையில் தான் அவள் கையில் ஒரு மெழுகுடனும் தலையைச்சுற்றி முக்காடிட்ட துப்பட்டாவுமாக மேடையின் அருகில் வந்தாள். இரவில் சிதறி மிளிரும் சரவிளக்கொளிகளின் பின்னணியில் கைகளில் இருக்கும் ஒற்றை மெழுகின் வெளிச்சத்தில் அவள் ஒரு தேவதை வானில் இருந்து இறங்கி வருவதைப்போலத்தான் யாருக்கும் இருந்திருக்க வேண்டும். ஆனால் எனக்கென்னவோ அவள் ஒரு சாமானியனான எனக்கென படைக்கப்பட்ட ஒரு இயல்பான பெண் நான் பார்ப்பதற்கெனவே அந்த நேரத்தில் விளக்கேற்ற அந்த கணத்தில் அவளது ஆண்டவரால் அனுப்பி வைக்கப்பட்டதாக மட்டுமே தோன்றிற்று. 

                                  அம்மா இல்லாத ஆண்கள் உண்மையில் அம்மாக்களை தேடுவதில்லை. அம்மாவின் அரவணைப்பும் கதகதப்பும் எங்கேனும் கிட்டிவிடாதா என்ற தேடலே எல்லாப் பெண்களின்  முகங்களையும் ஆழப்பார்க்கச் செய்கிறது. பார்க்கும் முகங்களில் ஒரு சிலவே நட்பாகவோ கூடப்பிறந்தவளாகவோ உணரச்சொல்கிறது. ஒரு நிமிடம் மட்டுமே கண்டதாயினும் ஒரே ஒரு முகமே பட்டென மனதில் விழுந்து இவள் எனக்கானவள் என்ற இணைப்புக்கு பதியம் போடுகிறது. 



                                  அழகாய் இருப்பதனால் மட்டும் ஒரு பெண் மனதிற்கு பிடித்துப்போவதில்லை. மனதிற்கு பிடித்துப்போவதால் தான் ஒருத்தி அழகாகிறாள். அன்னவுக்கு ஒல்லி உடம்பு. ஒடுக்கு முகம். ஒன்றாம் வகுப்பு பையன் க்ரையானில் வரைந்துவிட்ட பறவையைப்போல புருவம். நீட்டித்த கூரான விடைத்த மூக்கு. சதைப்பற்றில்லாத கன்னங்களில் சிறுசிறு சிவப்பு புள்ளிகளாக பருக்கள். மேலுதட்டை வலிந்து மெலிதாய்க் காட்டும் திரட்சியான கீழுதடு. அவை முழுக்க நேர்கீழாய் பாயும் வரிகள்மீது படியும் எச்சிலின் ஈரத்தை மினுமினுப்பாக மாற்றும் ஒளியின் விளையாட்டு. உதடுகள் இணையும் விளிம்பின் சிறுகுழியில் ஒளிந்திருக்கும் அந்த ஒரு துளி ரசவாதம் மட்டுமே வெளிக்காட்டுகிறது அவளது மகிழ்ச்சியோ துக்கத்தையோ. அன்னவின் கண்கள் பெரியன. ஆனால் அவைகள் எதுவும் பேசுவதில்லை. மனதின் கவலைகளை வெளித் தெரியாவண்ணம் மறைத்து அவைகள் எப்பொழுதும் எங்கோ வெறித்தபடியோ உள்வாங்கியோ இருக்கும். அந்த கண்களில் எதுவும் எவனும் எளிதில் படித்துவிட இயலாது, அவளது தந்தை உட்பட.

                                  அன்னவின் விலா எழும்புகள் ஒரு புதிர்தேசம்! சட்டென பார்க்கையில் அவைகள் கழுத்தினை தாங்கிப்பிடிக்கும் பீடமாகத்தான் தெரியும். ஆனால் உண்மையில் அவை மெலிந்து கீழ்நோக்கிக் குவிந்த அவளது சிறுமுலைகளை ஏற்கும் கேடய விளிம்பின் முனைகளெனவோ அல்லது எடைகளற்ற அச்சிறு பஞ்சுப்பொதிகள் நிரவிய மேடிட்ட பகுதிகள் சிறுநீரலைகள் தளும்பும் ஏரிக்கரையினையோ ஒத்திருக்கும். இருந்தும் இல்லாமலும் புடவையின் முந்தானைக்கடியில் விளையாட்டுக் காட்டும் அவையிரண்டும் புதிரின் விடையறிய ஏங்கித் திணறும் என்மேல் என்றைக்கும் இரக்கம் காட்டியதில்லை.  புடவைக்கடையில் வேலை செய்யும் அவளுக்கு சேலைகட்ட யாரும் வகுப்பெடுக்க வேண்டியதில்லைதான். மடிப்புகள் சிறிதும் கலையாத கொசுவமும் பிரித்துவைத்த புத்தகத்தின் பக்கங்கள் போன்ற நேர்க்கோடுகளாக படிந்த முந்தானையும் அணிந்த துணைக்கடை சிலைகள் எல்லோரையும் ஈர்த்துவிடுகிறதா என்ன? அதற்கு நம் உணர்வுகளுக்கு உயிர்ப்பளிக்கும் ஒருத்தி அணிந்து வர வேண்டாமா?  அன்ன அப்படி நடந்துவருகையில் அடித்துப்பிடித்து முன்னால் வந்து அமர்ந்துவிடும் அமைதி எனும் பேரழகு. ஆனால் அன்னவை எனக்கு அழகாக காட்டுவது இவையெல்லாம் இல்லை. அளவாய் வெட்டி அலையாய் தோளில் பரவி அலையும் அவளது கூந்தல். மொத்த கூந்தலும் ஒற்றைமுடிச்சில் பின்னந்தலையில் குவிந்து நின்றாலும் காதோரம் எப்பொழுதும் தெரித்து தனித்து விழும் ஒரு கற்றை முடிகள். அவைகளுக்கு இருக்கும் சுதந்திரம் உண்மையில் அன்னவுக்கு இல்லை. அவைகள் எப்பொழுது எப்படி எந்தக்கணத்தில் காதுக்குபின் ஒளியுமோ இல்லை கன்னத்தை தொட்டு விளையாடுமோ படைத்த இறைக்கே வெளிச்சம்.




                                  அன்னவுடனான அறிமுகமும் நட்பும் எந்த ஊரில் எந்த கிறித்துவ நண்பனை பார்க்கச் சென்று அடிகள் வாங்க இருந்தோமோ அந்த நண்பனிம் மூலமே ஏற்பட்டது. அவனது வீடு அன்னவின் எதிர்வீடாய் அமைந்தது இறைவன் எங்களுக்கு ஏற்கனவே இப்படித்தான் என எழுதி வைத்துவிட்டதனால் இருந்தாலும் அவனது அறையின் சன்னல் எப்படி எனது அகத்தின் வாசலாய் மாறி அன்னவின் வரவினை எதிர்பார்த்து காத்திருக்க ஆரம்பித்தது என்பதுதான் ஆச்சரியமாய் மாறிற்று. அந்த சன்னலும் நானும் அன்னவின் ஒரு நொடி தரிசனத்திற்காக காத்திருந்த பொழுதுகள் சொல்லில் சொல்லிவிட முடியாத மகிழ்ச்சியும் ஏக்கமும் நிரம்பியவை. ஆனால் என்ன? ஏக்கங்கள் வாழ்வினை வளப்படுத்தாவிடினும் நினைவிலாவது நினைத்ததை உணரவைக்க இயலுமெனில் இருந்துவிட்டு போகட்டுமே? தூரத்து நெருப்பின் ஒளியில் குளிர்காயும் வறியவனைப்போல.
                                  அன்னவை பார்க்கப்பார்க்க மிகவும் பிடித்துப்போயிற்று. காலையும் மாலையும் அவளுடன் ஃபெர்ரியில் பயணிப்பது அவளுக்காக மட்டுமே என்பது அவளும் அறிந்திருக்கத்தான் வேண்டும். உதட்டின் விளிம்பில் அவள் காட்டும் ஒரு துளி ரசவாத மந்திர புன்னகைக்காக எத்தனைமுறை வேண்டுமென்றாலும் அவள் பின்னே அலைந்துவிட உடலும் மனதும் துடிக்கத்தான் செய்கிறது. ஒரு பெண் நாம் அவள் பின்னால் சுற்றுவதை அறிந்துவிட்ட அந்த கணத்தில் இருந்து அவள் அவள் மட்டுமே அல்ல! அவளுள் ஒருத்தி நமக்காக விழிக்கிறாள். பார்வையால் தேடுகிறாள். உடைகளை அடிக்கடி திருத்தி கவனயீர்ப்பு தீர்மானம் போடுகிறாள். முகம் திருப்பாமலேயே முதுகின் வழி நம் பார்வையை உணர்கிறாள். வெளிப்படும் பரவசத்தினை அவளது உச்சிமுதல் பாதம்வரை அனைத்து அனுக்களும் மறைக்கத்தான் முயல்கிறது. முடிகிறதா என்ன?  இரண்டு பேருக்குமான இந்த விளையாட்டு மக்கள் நிறைந்த சந்தைக்கு நடுவில் நின்று கதறிக் கொள்வதுபோல. சத்தத்துக்கு பதிலாக சத்தமே. எல்லோருக்கும் கேட்டாலும் யாருக்கும் கேட்காத மிகையொலி அவை. உணர்பவர்களுக்கே அதில் சேதியுண்டு.

                                  அன்னவிடம் பேசுவதற்கும் பழகுவதற்கும் சில வாய்ப்புகள் கிடைத்தது. அதாவது ஏற்படுத்திக்கொண்டேன். அவளது செல்போனுக்கு சில குறுஞ்செய்திகளும் அனுப்பிவிட்டு பதில் வந்துவிடாதா என தேவுடு காத்த காலங்கள் அவை. அவள் வேலை செய்யும் புடவைக் கடைக்கே சென்று அவளை பார்த்துக்கொண்டிருப்பதும் அவளுடன் பேசவிழைவதும் அவளுக்கே பிடிக்கவில்லைதான். தொல்லை தாங்காமல் ஒருமுறை அழைத்து உனக்கும் எனக்கும் ஆகாது நம் மதங்கள் வேறு என பல காரணங்களை அடுக்கினாள் ஒருநாள். வரட்டுக் காய்ச்சலின் பிடியில் இருக்கும் ஒருவனுக்கு சூடான டீயும் தொட்டுத்திங்க ஒரு பன்னுமே உடனடித் தேவை. அவளோ நாம் ஏன் பிரியாணி இப்பொழுது சாப்பிட இயலாது என விளக்கிக்கொண்டிருந்தது எனக்கு அசூசையாகவும் கோவத்தையும் வரவழைத்தது. மூளையால் அல்ல, மனதால் ஒன்றை நம்ப ஆரம்பித்துவிட்டால் அதற்கு தர்க்கரீதியிலான பதில்களோ தகவல்களோ தேவையே இல்லை. நம்பிக்கை ஒன்றே எதுவாக நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிவிட வழி நடத்துக்கிறது. அது என் மீது அன்னவின் விருப்பம் கனியும் காலத்திற்கு என்னை கைப்பிடித்து கூட்டிச் சென்றது.

                                  கம்பீரக் குதிரையில் ராஜகுமாரன் வந்து கைத்தலம் பற்றி அரசவாழ்க்கைக்கு அழைத்துச் செல்லும் கனவுகள்  உண்மையில் ராஜகுமாரிகளுக்கே வருகின்றன. வேலையில்லாத பொறுப்புகளற்ற தந்தையும் சகோதரனும் கொண்டு முழுநாள் உடலுழைப்பை கோரும் குறைச்சம்பள வேலையில் குடும்பம் நடத்தும் அன்ன போன்ற பெண்களுக்கு கனவில் எவனாவது ஒருத்தன் வந்து நரகத்தில் இருந்து கைதூக்கி விடமாட்டானா என்பதே கனவாக வரும்போல. கைநீட்டினவர்களுக்கெல்லாம் உழைக்கும் பெண்கள் தூக்கிவிட கைநீட்டிவிடுவதும் விடுவதில்லை. வாழ்வோ சாவோ இவன் நம்முடன் கடைசிவரை வருவான் என்ற ஒரு நம்பிக்கை காதலை பிறக்க வைக்க தேவைப்படுகிறது. அன்னவிற்கும் என்மீது அந்த உறுதியால் மட்டுமே காதல் வந்திருக்க வேண்டும். அது ஆயிரம் நட்சத்திரங்கள் சூழ தேவர்கள் ஆசிர்வதிக்க தேவதைகள் சுற்றி வந்து வாழ்த்துப்பா பாட  வெளிப்படவில்லை. கையில் விரல் சூப்பி அப்பாவின் தோளில் சாய்ந்து அழுதுகொண்டிருக்கும் ஒரு குழந்தை அம்மாவைக் கண்டவுடன் சட்டென கண்ணீர் வழியச் சிரிக்கையில்  வெளிப்படுத்தும்  பளீர்ப்புன்னகை போல அவள் தன் காதலைச் சொன்னாள். என் காதலை ஏற்றுக்கொண்டாள். நான் அவளை விட்டு எப்பொழுதிலும் விலகுவதில்லை என்பதை என் உயிரினில் எழுதிக்கொண்டேன்.


                                  அன்னவுடனான காதல் அவளையும் அவளது வாழ்வையும் புரியவைப்பதில் மிக முனைப்புடன் இருந்தது. அவள் கூட்டிச்சென்ற சர்ச்சில் வைத்து அவளது தோழி நீ மதம்மாற தயாரா எனக்கேட்ட பொழுது எனக்கு உண்மையில் என்ன சொல்வதென தெரியவில்லை. என் மதமோ அவள் மதமோ எவ்வகையிலும் எங்கள் காதல் உருவாக தடையாக இல்லாதபொழுது திருமணம் என்ற அமைப்பிற்குள் வர மட்டும் எப்படி யாருக்கு அது தேவையாக இருக்கும் என எவ்வளவு யோசித்தும் புரியவேயில்லை. மதம் என்பது என் பிறப்பு என்மீது சுமத்தியது. அதனை யார் கண்ணையும் குத்தவோ யாருக்கும் தீங்கு விளைவிக்கவோ இல்லாமல் ஏன் எனக்கே நான் பாதுகாப்பு கவசமாககூட  நினைத்துக் கொள்ளாத பொழுது மாறப்போகும் மதம் மட்டும் எப்படி எனக்கு வாழ்வின் நெறிகளை கொடுத்துவிடும்? என்மதம் தான் பெரிது என்ற உணர்வுக்கூட எனக்கு இல்லாதபொழுது எப்படி உன் மதத்திற்கு மாறிய பின்தான் திருமணம் என்பது அவசியமானதாகப்படும்? என் மதமோ உன் சாமியோ அது ஏற்றுக்கொள்வது என்பதை விட உணரக்கூடியதல்லவா? அவ்வாறில்லையெனில் யாரையோ ஏமாற்ற வேண்டி நாமே ஏமாந்துபோக வேண்டியா இதைச்செய்ய இயலும்? அன்ன என்னை இவ்விடயத்தில் புரிந்துகொண்டிருக்கவேண்டும். அப்படித்தான் நானும் நம்பிக்கொண்டேன்.


                                  அன்னவுக்கு இதைவிட ஒரு பெரிய பயம் இருந்தது. சண்டை சச்சரவென வெட்டியாய் திரிந்துகொண்டிருக்கும் தம்பியை பார்த்துப்பார்த்து வீரம்தான் ஆண்மையென காட்டித்திரியும் ஆண்களை அவள் வெறுக்க தொடங்கியிருக்கவேண்டும். இயல்பிலேயே பேடியான நான் தப்பிக்க வழியில்லாத நிலையிலோ அல்லது குட்டக்குட்ட குனியமுடியாத நிலையிலோ திருப்பி அடிக்க ஆரம்பித்தால் சாது மிரண்ட கதை தான். பழைய பகையை வைத்து மீண்டும் வம்பிழுத்தபொழுது அவளது தம்பியையும் அவனது நண்பர்களையும் நான் கொச்சின் ரோட்டில் வைத்து செங்கலால் அடித்து மண்டை பிளக்கவைத்த காட்சியை கண்ட பிறகு அவளுக்கு என்மீதும் வெறுப்பு வந்திருக்கும். தேடிக் கண்டடைந்தவனும் பொறுக்கித்தனமாய் நடுரோட்டில் வீரம் காட்டியதை அவளால் தாங்கிக்கொள்ளவே இயலவில்லை. அவள் தம்பி அடிவாங்கியதை விட நான் சண்டைக்கு நின்றதே அவளுக்கு அதிக வலியை கொடுத்திருக்கக்கூடும்.  அந்த கிருத்துவ நண்பனது வீட்டில் அன்னவை வலியப்போய் சந்தித்து அவளது வலியை உணர்ந்துகொண்ட வேளையில் எனக்குள் இருந்த அந்த சாது மிரண்டால் வெளிப்படும் மிருகமும் கூட அன்னவுக்காய் தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும். அன்றைக்கு பழிக்குப்பழியாய் அவன் தம்பிடம் நான் மாட்டிய நேரத்தில் அவனும் அவன் நண்பர்களும் சேர்ந்து என்னை பிரித்தெடுத்துவிட்டார்கள். அன்னவுக்காக மரித்துப்போன அந்த மிருகத்தை நான் மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சிக்கவில்லை. அது என்னால் இந்த ஜென்மத்தில் முடியாது என தெரிந்த கணத்தில் நான் குற்றுயிராய் ஆக்கப்பட்டிருந்தேன். அந்த ஒற்றை நண்பன் மட்டும் என்னை தடுத்தணைத்து ஆட்கொண்டிருக்காவிட்டால் நான் அன்னவின் வீட்டு தெருவிலேயே பிணமாக்கப்பட்டிருப்பேன். அன்றைக்கு எங்கள் காதல் நடுத்தெருவில் யார்யாராலோ மிதித்து சிதறடிக்கப்பட்டது.

                                  ஆண்களுக்கு வீட்டில் இருக்கும் பெண் என்பவள் ஒரு அடையாளச்சின்னம். அம்மா என்றால் அன்பாய் மட்டுமே இருக்கவேண்டும். அக்கா என்றால் அவள் பாசத்தை மட்டுமே காட்டவேண்டும். அவர்களுக்கு வேறு உணர்வுகளோ உறவுகளோ வீட்டு ஆண்கள்  பார்த்து வைத்ததை மீறி நிகழ்ந்து விடக்கூடாது. இந்த பிம்பத்தில் இருந்து சிறிது விலகினாலும் ஆண்களுக்கு அவர்கள் உரிமையின் மேல் அடி விழுகிறது. எனக்கு பத்து பெண்நண்பிகள் என பொதுவெளியில் பீற்றிக்கொள்ளும் ஒருவனால் அவன் தங்கையோ அக்காவோ எனக்கு ஒரு ஆண்நண்பன் எனச் சொல்வதை தாங்கிக்கொள்ள முடிவதில்லை. அவள் வீட்டுக்கு சம்பாதித்துப் போடுபவளாக இருந்தாலும்கூட. 


                                  அன்னவுக்கும் வீட்டுச்சிறை கிடைத்தது. அவன் தம்பிக்கு நான் வேறுமதம் என்பதைவிட அவனை அடித்ததுதான் ஆற்றவியலாத வெறி. அவள் அப்பாவுக்கு பெண் வேலைக்குப்போய் குடும்பத்தை காப்பாற்றுபவள் என்பதைவிட சுயபுத்தியாய் காதலித்துவிட்டாள் என்பது பெருத்த அவமானம். எவ்வளவு சீக்கிரத்தில் அவளுக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து கட்டிவைத்து குடும்பமானத்தை காக்கிறோமோ அவ்வளவிற்கு ஊரார் வாயில் விழவேண்டாம் என்கிற நிம்மதி. அன்னவை விட்டு பிரியவேண்டும் என்பது என் விருப்பமோ அவளது விருப்பமோ அல்ல. ஆனால் ஒருவரை ஒருவர் வருத்திக்கொண்டு வரவைப்பதா காதல்? அவளுக்கு வேரொரு ஆளுடன் நிச்சயம் ஆனது. நான் என் அப்பாவுடம் அவரது ஊருக்கு மீன்பிடி தொழிலுக்காக அழைத்து வரப்பட்டேன். இரண்டு குடும்பமும் நினைத்திருக்க வேண்டும் இந்த மாற்றங்கள் நிச்சயமாய் எங்கள் காயங்களை ஆற்றிவிடவேண்டுமென.


                                  வாழ்வில் ஒருமுறை உணரப்பட்ட உன்னதங்கள் எதுவும் நினைவில் இருந்து அழிந்து விடுவதில்லை. அவைகள் நம்முள் ஒன்றாக கலந்துபோய் விடுகின்றன. அந்த உன்னதங்கள் நம் வாழ்வு செல்லும் பாதையை சீரமைக்கின்றன. பிடிவழுவாது மிச்சத்தினை நடந்து கடக்க உதவுகின்றன. அன்ன இப்பொழுது என்னுடன் இல்லைதான். ஆனால் அவள் காதல் எனும் உன்னதம் என்னை இன்னமும் வழிநடத்திக் கொண்டுதான் இருந்தது. அர்த்தமுள்ளதோ இல்லையோ ஒரு சிறு நம்பிக்கை நம்வாழ்க்கையை நாம் பிடித்தபடி வாழவைக்கிறது. அது எவ்வளவு சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும். ஆனால் அது நம்மளவில் அசைக்கமுடியாத நம்பிக்கையாக இருப்பதால் அதன் பலன் அளப்பறியது. ஆற்றில் தண்ணீருக்கு அடியில் முங்கி கண் திறந்து பார்த்தால் மனசுக்கு பிடித்தவர்கள் நமக்காக தெரிவார்கள் என்பது சிறுகுழந்தையின் விளையாட்டுதான். ஆனால் நான் அதனை மனப்பூர்வமாக நம்பினேன். எப்பொழுதெல்லாம் அன்னவை காண விரும்பினேனோ அப்பொழுதெல்லாம் ஒரு முங்கு நீச்சலில் அவளைக்கண்டேன். எனக்கு இப்பொழுது அன்ன என்னைவிட்டு எங்கும் போய்விட இயலாதென்பதில் ஏக மகிழ்ச்சி.


                                  வாழ்க்கை எல்லோரையும் எப்பொழுதும் கைவிட்டுவிடுவதில்லை. அது காட்டும் நல்வழியெல்லாம் நண்பன் என்ற உருவிலேயே வருகிறது. அந்த கிருத்துவ நண்பன் என் அப்பாவின் ஊருக்கே வந்து எனைக்கண்டான். அன்னவின் திருமணத் தேதியை சொன்னான். கடைசிவரையில் சொல்லாமல் உள்ளுக்குள்ளேயே வைத்து மருகி கருகிப்போன அவனது காதல் கதையை கேட்டபொழுது எனக்கு அன்னவுடன் ஏன் சேர்ந்து வாழ்ந்துவிட முடியாது எனத்தோன்றிற்று. மனதுக்குள் மருகி தினந்தினம் சாவதைவிட ஒருநாளாவது அவளுடன் வாழ்ந்துவிடுவது உத்தமம் எனப்பட்டது. இப்பொழுதும் எனக்குள் இருந்த மிருகம் செத்துத்தான் கிடந்தது. ஆனால் நம்மை நம்பி இருக்கும் ஒரு உயிரை கைவிடல் ஆண்மையில்லை என்பது தெளிந்தது. நேரே கிளம்பி அன்னவை அவளது சர்ச்சிலேயே கண்டு உண்மையான ஆண்மகனாய் அவள் கைப்பிடித்து நடத்தி அழைத்து வந்த வேளையில் கட்டமைக்கப்பட்ட ஆண்மை எனப்படும் பொய்மைகள் எதனாலும் எங்களை தடுத்து நிறுத்திவிட இயலவில்லை. அன்னவுக்கு என் செயல் பெருத்த ஆச்சரியமாகவும் இன்ப அதிர்ச்சியாகவும் இருந்தாலும் இம்முறை அவள் என்னுடன் வந்துவிட துளியளவும் தயங்கவில்லை. இம்முறை அன்னவை அழைத்துக்கொண்டு வெகுதூரம் வந்துவிட்டிருந்தேன். நண்பனது வீட்டில் தங்கி டிரைவராக ஒரு வேலையைத்தேடிக்கொண்டு அன்னவுடனான திருமணத்திற்கும் தயாரானேன். அவரவர் மதம் அவரவருக்கு என்றபடியே. 



                                  ஒரு பெண் எப்பொழுது தன்னை ஒருவனுக்கு கொடுக்க விரும்புகிறாள்? காதல் மட்டுமே இருவரை காமத்தில் சென்று சேர்ப்பதில்லை. தனக்காக உயிரையும் ஒருவன் கொடுக்க துணிந்துவிட்டான் என்ற நிலையில் அன்பினால் மட்டுமே படைக்கப்பட்ட ஒரு பெண் பதிலுக்கு என்ன கொடுத்துவிட இயலும்? தன்னையே கொடுப்பது என்பதும் அவளை அவளாகவே வைத்திருக்கும் ஒருவனுக்கு கொடுத்து ஈடு செய்ய முடியாத செயல் தான். இருப்பினும் தனக்கே தனக்கென ஒருவன் தன் வாழ்வில் இருக்கிறான் என அவள் உணரும் அக்கணம் தன்னையே கொடுத்தல் என்பதையே ஒன்றுமில்லாதாக ஆக்கிவிடுகிறது. கொடுக்கப்பட்ட பொருளைவிட கொடுத்த விதத்தில் வெளிப்படும் அளவில்லாத பிரியமும் வாஞ்சையுமே அப்பிணைப்பை பந்தமாக்குகிறது. அன்றொரு இரவில் அன்ன அவளை எனக்குக்கொடுத்தாள். நான் என்னைக்கொடுத்தேன். கொடுக்கும் முத்தத்தை விட பெறப்பட்ட முத்தத்திற்கு சுவை அதிகம். அன்றைக்கு ஒருவர் உடலில் ஒருவர் தேடித்திளைத்தோம். பாதுகாப்பும் எதிர்கால வாழ்க்கையும் கேள்விகுறியாக இருந்த எங்களுக்கு அத்தேடல் மிகத்தேவையானதாக இருந்தது. தேடிக் கண்டடைந்தவைகள் நாங்கள் முன்னேரே கண்ட உன்னதங்களுக்கு சற்றும் குறைந்தவைகளல்ல. அம்மாவிற்குப் பிறகு யாராலும் எனக்கு கொடுக்கவியலாத என்றாகிலும் கிடைத்துவிடும் என ஏங்கித்தவித்து தேடிக்கொண்டிருந்த அரவணைப்பும் கதகதப்பும் அவள் அன்றைக்கு எனக்களித்தாள்.  அந்தக்கணத்தில் நான் உலகத்திலேயே மிகப்பாதுகாப்பான இடத்தில் இருப்பதென உணர்ந்தேன். அவள் அணைப்பிலேயே உறங்கிப்போனேன்.

                                  கூடா நட்பு எங்கே முடியும்? நல்லதும் கெட்டதும் அவரவர் வாழ்வின் முறைமைகளும் சமூகம் அவரவரை வைத்திருக்கும் இடங்களைப் பொறுத்துமே மதிப்பிடப்படுகிறது என்றாலும் எளியது வழுக்கி விழும் இடங்களில் வலியது தயவுகள் கிஞ்சித்தும் காட்டாது புரட்டியெடுத்து விடுகிறது. கார்திருடும் கும்பலில் இருந்த நண்பர்களில் ஒருவன் பெரியகுற்றங்களாக செய்யபோய் ஒரு நிகழ்வில் கழுத்தறுபட்டு கொல்லப்பட்டான். சந்தேகத்தின் பேரில் போலிஸ் என்னைப்பிடித்து சிறைச்சாலைக்கு அனுப்பியது. நிர்க்கதியாய் நின்ன அன்ன அவளது குடும்பத்தாரால் மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். வலுக்கட்டாயமாக அவளுக்கு மீண்டும் திருமண ஏற்பாடுகள் நடந்தன. நான் குற்றவாளியாய் சித்தரிக்கப்பட்ட படங்கள் கொண்ட செய்தித்தாள் அவளுக்கு காட்டப்பட்டது. அவள் எங்கிருந்தாலும் எந்தநிலையிருந்தாலும் என்றைக்காவது வந்தழைத்துச்செல்வேன் என்ற நம்பிக்கை அவளை வாழத்தூண்டியிருக்க வேண்டும். ஆனால் நான் மீண்டும் அடிதடி குற்றச்செயல்கள்தான் ஆண்மை என்ற நிலையில் மாட்டியிருக்கும் இந்த சூழல் அவளை நம்பிக்கையிழக்க செய்திருக்க வேண்டும். என்மீதான நம்பிக்கை சிதறடிக்கப்பட்டதைவிட அவள் அவள் மீதான நம்பிக்கையை இழந்திருக்கவேண்டும்.  எதை நம்பி என்னை விரும்பினாளோ எப்படி நான் இருக்கக்கூடாது என்பதால் என்னுடன் வரத் துணிந்தாலோ அந்த நம்பிக்கை சிதறடிக்கப்பட்ட அந்த இரவில் அவள் தற்கொலை செய்துகொண்டாள். 

                                  போலீஸின் பிடியில் இருந்து தப்பி ஓடி அவள் வீட்டை அடைந்த கணத்தில் தான் அவளைக் கண்டேன். சடலமாய் வீட்டின்முன் கிடத்தப்பட்டிருந்தாள். இப்பொழுது அந்த வீட்டில் என்னை யாரும் தடுக்கவோ அடிக்கவோ இல்லை. அவளை கட்டியணத்து அழுதேன். அதே ஒல்லியான விரைத்த உடல். கூர்ந்த நாசி, சதைப்பற்றற்ற கன்னங்கள். சிவப்பு பருக்கள். புதிருக்கு விடைதெரிந்த தளும்பாத மார்புகள். கலையாத உடை. பச்சை நரம்புகள் ஓடும் நீளமான விரல்கள். மூடிக்கிடக்கும் பெரிய கண்கள். அசைவற்ற உடல். உதடுகள் இணையும் ரசவாதக்குழியில் இன்றைக்கு எனக்கான எந்த சேதியும் இல்லை. காதோரம் வழியும் அந்த ஒரு கற்றை முடிகள் மட்டும் அவள் முகத்தில் எப்பொழுதும் போல சுதந்திரமாக காற்றில் உருண்டு அலைந்து கொண்டிருந்தது.

                                  இப்பொழுது அன்ன உடலாக என்னுடனில்லை. அவள் இல்லாமல் வாழ பழகிக் கொண்டிருக்கிறேன். அன்னவை போல என்னால் மனதில் இருப்பதை கண்களில் சொல்லாமல் மறைத்து வாழ தெரியவில்லை. என் மனதில் திணிக்கப்பட்ட சகமனிதர்கள் பற்றிய சந்தேகங்களும் அச்சங்களும் பொறாமைகளும் கொடுத்த குழம்பமும் கலங்கமும் நிறைந்து அபோதம் ஏறிப்போயிருக்கும் கண்களை மறைக்க கருப்புக்கண்ணாடி அணிந்து கொள்கிறேன். உள்ளிருக்கும் மிருகம் இப்பொழுதும் செத்துத்தான் கிடக்கிறது. அன்னவை பார்க்க வேண்டுமெனில் இன்னமும் ஒரு முங்கு நீச்சல் மட்டுமே எனக்கு போதுமானதாக இருக்கிறது. சில நம்பிக்கைகள் எப்பொழுதும் பிறருக்கு சிறுபிள்ளைத்தனமானவைகள் தான். ஆனால் அவைகளே நம்பியவனின் வாழ்க்கையை  உன்னதங்களுடன் இணைக்கின்றன. வழி நடத்துகின்றன. கைப்பற்றி அழைத்துச்செல்கின்றன. 


                                  நான் நடந்துகொண்டிருக்கிறேன்.




                                  பெண்ணியமும் So called சராசரி பெண்களும்...

                                  $
                                  0
                                  0


                                  சுரேஷ் கண்ணன் அவர்களது முகநூலில் ஒரு ஸ்டேடசுக்கு எழுதிய பதில். படித்தால் அது ஏறக்குறைய நீயா நானா நிகழ்ச்சியை ஒட்டியே அமைந்திருந்தது. இங்கே சேமிக்க என்றெல்லாம் ஜல்லியடக்க மாட்டேன். பதிவாக போடவேண்டும் என ஆசை. அம்புட்டுத்தான். இது என் பார்வை மட்டுமே. அவர்பதில் கிடைத்தால் கோர்க்கிறேன்.


                                  ---------+++++----------







                                  வண்ட்டேன்... இங்கே அனைத்து சேனல்களும் yupptv.comல் காசுகட்டி காணக்கிடைக்கின்றன. நான் பார்ப்பது என்னவோ இரண்டே நிகழ்சிகள் தான். நீயா நானா & கொஞ்சம் நடிங்க பாஸு :)






                                  // அறியாமையே பேரின்பம் ரீதியில் சில பெண்கள் பேசினார்கள் //






                                  எப்படிங்க இப்படியெல்லாம் தீர்மானிக்கறீங்க!? அறியாமைக்கும் தெரியாமைக்கும் நிறைய வேறுபாடு இருக்குங்க. பெண்ணிய இயங்கங்களும் இலக்கியங்களும் களப்பணியாளர்களும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். தெரியவேண்டிய அவசியத்துக்கான வாழ்க்கை முறையிலும் அவர்கள் இல்லை. அதனால் அது அறியாமை ஆயிருமா?






                                  so called சராசரி பெண்கள் - இனி இவர்களை உங்கள் வார்த்தையிலேயா சராசரிகள் என குறிப்பிடுகிறேன். :(






                                  ஒரு சமூகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு வாழ்க்கை முறை இருக்கிறது. சிலர் குடும்ப அமைப்மை ஏற்றுக்கொண்டு புள்ள குட்டின்னு வாழ்ற வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறார்கள். சிலர் மற்றவர்களுக்காக ஏதாவது செய்யனும்னு பெண்ணியத்திற்கு போராடுபவர்களாகவும் களப்பணியாளர்களாகவும் ஆகிறார்கள். அதது அவங்கவங்க குடும்ப சூழ்நிலை மற்றும் சுயசிந்தனைல வர்ற தேர்வுகள். பெண்ணியவாதிகள் உரிமைகளுக்காக போராடட்டும். சமூக சட்டதிட்டங்களை மாற்றி அமைக்கட்டும். சமூக புரிதல்கள் மீதான சிந்தனைகளை புரட்டிப்போடட்டும். உரையாடல்களை தொடரட்டும். இந்த செய்கைகளினால் போராட்டங்களினால் வர்ற பலன்களை அந்த சராசரிகள் அனுபவித்துவிட்டு போகட்டுமே. தலைவர்கள் போராடிக்கொண்டுவரும் மாற்றத்தை சராசரிகள் அனுபவித்து முன்னேறி வருவது தானே உலகத்தில் நடப்பது? வாழ்க்கையில் ஒருத்திக்கு மற்றவர்களுக்காக போராட வேண்டும் என்கிற தேர்வு எப்படி உன்னதமானதோ அதற்கு சற்றும் குறையாதது ஒரு பெண்ணுக்கு குடும்ப வாழ்க்கையை தேர்ந்தெடுப்பது என்பது சரியில்லையா? குடும்பம் குட்டி என வாழ்ந்து ஒரு குடும்பத்தை உயர்த்துவது என்ற தேர்வு அவ்வளவு கேவலமானதா?! இருவருக்குமே அவரவர் அரசியல் எல்லைகள். சிறிதும் பெரிதுமாய். இதில் உயர்வென்ன? தாழ்வென்ன? சராசரிகளுக்கு தேவை பெண்ணியம் என்றால் என்ன என்பது பற்றிய விழிப்புணர்வே. இந்த விழிப்புணர்வுதான் மாற்றங்களை அவரவர் குடும்பத்தில் கொண்டுவருகிறது. சராசரிகள் அனைவரும் களத்தில் இறங்கிப்போராட வேண்டும் என்பதோ அவர்கள் இரண்டுபேர் இணைந்து வாழ முடிவெடுத்து குடும்ப அமைப்பை தேர்ந்தெடுத்து அமைக்கும் வீட்டுகுள்ளேயே புரட்சிகள் வெடிக்க வைத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்பது சரியான எதிர்பார்ப்பா? 






                                  பெண்ணியம் என்றால் என்ன கேள்விக்கே நீங்க குறிப்பிடும் so called சராசரி பெண்கள் தெரிஞ்சதை மனப்பாடம் செஞ்சு சொல்லறாப்டி இருந்தாலும் குழப்பமே இல்லாம பட்டுன்னு சொன்னாங்க. அதுக்கு பெண்ணியவாதிகள் மத்தில ஒரு அலட்டலான சிரிப்பு. அய்யோ பாவம் இதுகளுக்கு ஒன்னுமே தெரியலையேன்னு. பெண்ணியம் பத்தி உரையாடலாம் அப்படிங்கற எண்ணம் இல்லாம யாராவது நாலுபேரு மாட்டுவாய்ங்க அவங்களுக்கு பெண்ணியத்தை கழுவி கழுவி ஊத்துவோம்னு நினைப்புல பேச்சை ஆரம்பிச்ச புத்திகேர்ல்ஸ் பாதிப்பேரு “பெண்ணியம்னா என்னன்னு ஒரு வரையறைக்குள்ள சொல்லமுடியாது.. ட்பைன் பண்ணமுடியாது..”ன்னு திக்கித்தெணறி முடிக்கறதுக்குள்ள நமக்கே வேர்க்குதுன்னா பாவம் நீங்க சொல்லற சராசரிகளுக்கு எப்படி இருந்திருக்கும்?! இதுல வெண்ணிலா நடுவால ஒரு சவால்வேறு.. சரியா பதில் சொல்லிட்டன்னா இப்பவே ஷோவை முடிச்சுக்கலாம்னு. என்னக் கொடுமை அய்யா. இதில் யாருக்கு சொல்லித்தருவதில் அறியாமை இங்கே அதிகம்? 






                                  நல்லா படிச்சு வேலைவாங்கி மிலிட்டரிக்கு போகும் ஒருபெண். குடும்ப அமைப்பை ஏற்று கணவருடன் அன்யோனியமாக குடும்பம் நடத்தும் ஒரு பெண். தன் தந்தையும் நானும் எப்படி நட்பாக இருக்கிறோம்னு ஒரு பெண். இதையெல்லாம் அவர்கள் வெளிப்படையாக சொல்ல இந்த சைடுல இருந்து சரமாரியா கவுண்ட்டர் அட்டாக்ஸ்.. ”உங்க வீட்டுல மட்டும் இருந்துட்டா போதுமா? நீ மட்டும் உங்க வீட்டுல கன்வின்ஸ் பண்ணிட்டா போதுமா?” முடியல! “உனக்கு கிடைத்த பலன் மற்றவர்களுக்கும் கிடைக்கனும்...அந்த விழிப்புணர்வைத்தான் நாங்க ஏற்படுத்த போராடறோம்.. அதுக்கு உங்க உதவியும் தேவை.. வாங்க இங்க என்ன நடக்குதுன்னு சேர்ந்தே புரிஞ்சுக்கலாம்..”னு அக்கறையா இந்த கேள்விகள் வெளிப்பட்டிருந்தா எவ்வளவு சிறப்பா இருந்திருக்கும்?! கேட்டதெல்லாம்.. ”அடியே மக்கு... மக்கு... தெரிஞ்ச பெரிய நம்பர் என்னன்னு 100ன்னு சொல்லறையே மக்கு... 1000 100000 எல்லாம் உனக்கெங்க தெரியப்போது?”ங்கற தொணி! 






                                  உண்மையில் இந்த சராசரிகள் எல்லாம் பெண்ணியவாதிகள் சொன்ன மாதிரி இவ்வளவுகாலம் பெண்ணியம் கண்ட போராட்டங்களுக்கு கிடைத்த பலன்கள். ”பெண்ணியம் ஒன்றும் வெட்டிப்பேச்சில்லை. மாற்றம் நடந்தே தீரும். இது நடந்திருக்கிறது பாருங்க..”ன்னு சபையிலேயே கட்டியணைச்சு உச்சிமுகர்ந்திருக்க வேண்டிய முன்மாதிரிகள். பெண்ணியவாதிகள் இவர்களை அரவணைத்து அக்கறையோடு பெண்ணியத்தின் செயல்பாடுகள் என்னென்ன என விளக்க அமைந்த அற்புதமாக அமைந்த வாய்ப்பு அது. ”அடடா,,, நீங்க எல்லாம் இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... இந்த நல்ல வாழ்க்கையிலும் உங்களுக்கு ஏதாவது சிக்கல் வந்தா இப்ப இருக்கற பெண்ணிய செயல்பாடுகள்ல இன்னின்ன நல்ல வழிகள் இருக்கு... இதையெல்லாம் தெரிஞ்சுக்கங்க... நாம எல்லாரும் இன்னும் உயரலாம்...” அப்படின்னு அழகா மாறி இருக்க வேண்டிய உரையாடல் இது. ஆனால் இந்த சராசரிகள் நம்மில் ஒருத்தருங்கற அக்கறை இல்லாததால... நாம் பெண்ணியத்திற்காக போரடறோம், சராசரிகளுக்கு களம் காண்கிறோம்கற ”ஒரு படி மேல” சிந்தனைதான் பேசுன பெண்ணியவாதிகளுக்கு இருந்ததே தவிர அவர்களும் நம்மில் ஒருத்தர் அவர்களுக்கு தெரியாததை கனிவுடன் அறியச் செய்வோம்ங்கறது சுத்தமா இல்லை. ஒருவரை ஒருவர் பார்த்து நக்கலாக சிரிச்சுகிட்டதுதான் இதற்கு சாட்சி. 






                                  நான் உணர்ந்த வரையில் ஓவியா ஒருவரின் பேச்சில் தான் இந்த கனிவையும் ஆதூரத்தையும் அக்கறையையும் காண முடிந்தது. 






                                  இதையெல்லாம் விட ஒரு வலிகூட்டும் சொல்லை கேட்கமுடிந்தது. சராசரிகளை நீங்க எப்படி இப்ப பார்க்கறீங்கன்னு கேட்டபோது பரிதாபப்படுகிறேன் அப்படின்னு ஒரு பெண்ணியவாதி சொன்னார். அவர் யாருன்னா உங்க பெண்ணிய விடுதலையை எப்படி உணர்கிறீர்கள் எனக்கேட்டதுக்கு என்ன சொல்லறதுன்னு தெரியாம ”வார்த்தையே இல்ல சொல்ல முடியல...”ன்னு முடிச்ச குட்டிரேவதி. அவர் யாரைப்பார்த்து பரிதாபப்படுகிறார் என்றால் எப்படி கணவனும் மனைவியுமா இயந்து காதல் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோம்னு உணர்வுபூர்வமாக எவ்வித தடங்கல்களும் இன்றி உணர்ந்ததை வார்த்தைகளில் கோலம்போட்டுக் காட்டிய (நாடக பாவங்களாம்!! ) பெண்களையும் , எப்படி பல தலைமுறையாக பெண்கள் எங்க வீட்டுல லீடரா இருக்காங்கன்னு சொன்ன பெண்களையும், ராணுவ சீருடை அணிந்து உற்சாகமாக பணிக்கு கிளம்பும் பெண்களையும், அயர்ன் செய்துகொடுத்த அப்பாவின் சட்டைக்கு கிடைக்கும் ஆதுரத்துடன் கூடிய சிரிப்பை பரிசாகப்பெருன் பெண்களையும் பார்த்து!!! :( மகா கொடுமை அய்யா இது. இவங்க எல்லாம் அப்ப யாருக்காக எந்த வாழ்க்கைக்காக போராடறாங்க அப்படிங்கறதே ஒரு நிமிடம் மறந்துருச்சு! இதை விட கொடுமை பெண்ணியவாதிகள் பலபேரு பலதடவை எங்களுக்கும் ஆண் உறவுகள் இருக்கு... ஆண் நண்பர்கள் இருக்காங்கன்னு திரும்ப திரும்ப சொன்னாங்களே தவிர ஒருத்தராவது ஒரு பெண்ணியவாதியாக நான் இப்படி என் ஆண் உறவுகளை பேணுகிறேன்னு ஒரு வரி கூட சொல்லவில்லை! அப்படி என்னங்க அவங்களை சபைல இயல்பா பேசறதை தடுக்குது?! இந்த “ஒரு படி மேல” எண்ணம் தான் போல! சொல்லிட்டா அப்பறம் அடடா இவங்களும் சராசரிதானானு சராசரிகள் கண்டுபுடிச்சுட்டா?!






                                  சல்மாவின் கூற்று... ”சமையல் நல்லா இருக்கு.. நீ நல்லா இருக்க... வீட்டை அருமையா வைச்சிருக்க...” அப்படிங்கற பாராட்டுகள் எதையும் ஏத்துக்க கூடாதாம்! அதெல்லாம் பின்னால பெண்களுக்கெ கெடுதல்ல முடியுமாம்! இதையெல்லாம் எங்க போய் சொல்ல?! உனக்கும் எனக்கும் குடும்ப அமைப்பு எனும் வாழ்க்கைமுறை சரின்னு நினைத்து திருமணம் செய்து கொள்கிறோம்... அதில் வரும் சிக்கல்களை பேசித்தீர்த்து விட்டுக்கொடுத்து வாழ்வோம்... என்ற எண்ணத்தில் இணையும் இருவர் ஒருவருக்கொருவர் பாராட்டிக் கொள்ளக்கூடாது. அப்படி செய்தால் அடிமையாயிருவாய்! :( இன்னொருத்தரு சொல்றாங்க ஒருத்தர்க்கொருத்தர் தியாகம் செய்யக்கூடாது! :( இவர்கள் சொல்வது அனைத்தும் திருமணமே ஒரு அடிமைசாசனம் அப்படின்னு படிச்சு வந்த தெளிவு. ஆனா திருமணமே ஒரு அடிமைத்தன விலங்கு... குழந்தை பெறுதல் ஆணாதிக்கத்தின் அழுத்தம்னு ஒருத்தருகூட தெளிவா ஒருவரி சொல்லல. பூசிப்பூசி மெழுகறாங்க... பாவம் பேசவந்த பெண்ணியவாதிகள்ல எத்தனை பேர் திருமணமானவங்களோ!! எளிமை மட்டும் இயல்பு என்பது ஒரு படி மேல போயிட்டா அவ்வளவு சிரமமான குணாதியங்களா மாறிடுமா என்ன? இத்தனைக்கும் இவங்களையெல்லாம் சிறப்புநடுவர்களா கூப்பிடலை. ஒரு சைடுல உட்கார்ந்து சரிக்கு சமமா கலந்துரையாட அழைக்கப்பட்ட பங்கேற்பாளர்கள் தான், சராசரிகளை போலவே!






                                  நான் கவனித்த வரையில் பெண்ணியவாதிகள் அனைவரும் ஆடைகளை தேர்ந்தெடுத்து அணிந்துவந்திருந்தனர். குட்டிரேவதியின் நிறத்துக்கு அவர் அணிந்திருந்த உடையும் அவர் கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்த கம்பீரமும் அருமையாக இருந்தது. சல்மாவின் வெள்ளை உடைகூட பார்க்க சிறப்பு. கவிதா அவரின் கழுத்து டகோடாக்களை தேடித்தான் மேட்சிங்காக அணிந்து வந்திருக்க வேண்டும். இவ்வளவு ஏன்? ஓவியாவே மடிப்பு கலையாத கஞ்சிபோட்ட காட்டன் புடவையில் பாந்தமாகத்தார் இருந்தார். ”சராசரிகளே.. ஆண்பெண் சமத்துவம் கொண்டுவரத்தான் போராடுகிறோம்.. ஆனால் ஒருவருக்கொருவர் பாராட்டிவிடக்கூடாது” எனச்சொல்லும் இவர்களிடம் போய் “சல்மா.. இந்த வெள்ளை உடையில் நீங்கள் இருக்கும் சூழலே அழகாகத்தெரிகிறது... ரேவதி...உங்கள் பேச்சில் வெளிப்படும் கம்பீரம் அழகு... கவிதா உங்கள் காதணிகள் உங்கள் உடைக்கு சரியா மேட்சாகுது” அப்படினெல்லாம் பாராட்டினா என்னென்ன வார்த்தைகளில் திட்டுவாங்களோன்னு பயம்மா இருக்கு!!! “ஆணாதிக்கம் கொண்ட காமகொடூரா..”ன்னு தட்டையா மட்டும் திட்டமாட்டங்கன்னு நம்பறேன்! :) அவரே பார்த்துப்பார்த்து தேடித்தேடி வாங்கி அவரவரே அணிந்து அவரவரே மகிழ்ச்சி அடையவா உடை? மற்றவர் முன்னால் ஒரு தோற்றப்பொழிவோடு இருக்கவேண்டும் என்ற அடிப்படை அவாவின் வெளிப்பாடு அல்லவா அன்றைக்கு அனைவரிடமும் இருந்திருக்கும்.






                                  இத்தனைக்கு பிறகும் ஒரு விசயம் சொல்லனும்னா குடும்ப அமைப்பில் இருக்கும் சராசரி பெண்கள் தான் தங்கள் எண்ண ஓட்டங்களை தங்குதடையின்றி பேசுனாங்க... தனக்கு தெரியாத சில விசயங்களை உடனே தலையாட்டி ஒத்துக்கிட்டாங்க... உண்மையில் உணர்ந்ததையும் வாழ்க்கையில் செயல்படுத்தறதையும் மட்டுமே சொன்னாங்க... சொல்லிக்கொடுக்க வந்தவங்க இதுல எல்லாம் இதுல ஏதாவது ஒன்னு கத்துக்கிட்டும் போயிருந்தா மகிழ்ச்சியே! :)






                                  இதுபோக ஆண்டனியை பாராட்டியே ஆகவேண்டும்! தப்பித்தவறியும் ஒரு ஆண் பங்கேற்பாளர் இல்லாமல் நடத்தியதற்கு. இல்லையெனில் சராசரிகளின் தெளிவும் உணர்வுகளும் அறிவுபூர்வமான வாதங்களால் சிதறடிக்கப்பட்டிருக்கும்!



                                  காமம் தெளிதல் :- பிரிவுத்தணல்

                                  $
                                  0
                                  0
                                  டேய்… எருமை மாடு மாதிரி வளர்ந்திருக்க… ஒரு ஸ்டாப் கிட்ட இப்படித்தான் பேசுவயா?

                                  “சார் சும்மா ஜாலிக்கு க்ளாஸ்ல ஜோக்குக்கு சொன்னேன் சார். அதுக்குப்போய் உங்க கிட்ட பிராது செய்யறாங்க… இதெல்லாம் கூட இல்லைன்னா எப்படி சார் எப்பவுமே சீரியசா க்ளாஸ்ல ஒக்கார்ந்திருக்க முடியும்?”

                                  என்னா மயிரு எழவெடெடுத்த ஜோக்கு? தராதரம் இல்லாம? லேடிடா அவங்க… ஏதோ நேரம் இங்க வேலைக்குன்னு வர்றாங்க… நீயும் ஒரு வேலைக்கு போகனுன்னுதானே இங்க படிக்கற? சொல்லிக் கொடுக்கறவங்க மேல ஒரு மரியாத வேண்டாமா? லேடிஸ்கிட்ட எப்படி பேசனுங்கறதே தெரிலன்னா நீயெல்லாம் எப்படிடா உனக்குன்னு ஒரு மரியாதைய பின்னாடி தேடிப்ப?”

                                  மேட்டர் பெரிசா ஒன்னுமில்லைங்க. மேற்கண்ட இனியது கூறலில் முதலாவது எங்க பேராசிரியர். பதில் சொல்வது நான். எங்களுக்கு பகுதிநேரமாக வகுப்பெடுக்க வந்த அவருடைய சக பேராசிரியர் பொண்ணை லைட்டா கலாய்ச்சதுக்கு அவங்க ஓன்னு அழுதுக்கிட்டு வந்து இவராண்ட புகார் கொடுத்துட்டாங்க. அதுவும் சப்பை கலாய்ச்சல். என்னை விட அஞ்சு வயசுதான் அதிகமா இருக்கும். அவங்களை மேடம்னா கூப்பிட முடியும்? அவங்க வந்த மூனு மாசத்துலயே நாங்க அவங்ககிட்ட கத்துக்கறதுக்கு ஒன்னுமில்லைனு தெரிஞ்சப்பறம் எல்லோருக்குமே ஒரு சம்பிரதாயத்துக்காகத்தான் அவரது வகுப்பு நடந்துகொண்டிருந்தது. அவங்களா ஏதாச்சும் ஒழுங்க படிச்சுட்டு வந்தாலும்  வகுப்பெடுக்க விடாம பேசியே ஓட்டிருவோம். தினமும் அவங்களோட ரெண்டுமணி நேரத்துல ஒரு தியரி அப்பறம் மத்தியானமா லேப். மிஸ்சு அக்காவாகி அப்பறம் யக்கால நின்ன அன்னியோன்யம். ஆனா நாங்க திடீர் திடீர்னு ஏதாச்சும் வெடிபோட்டு மெர்சலாக்குறதால ஒரு பயத்தோடவேதான் வளைய வந்துக்கிட்டிருந்தாங்க. இந்த கலாய்ச்சல் என்னதா? ரஜினி பாட்டுதான்!

                                  “பந்தலிலே தொங்குகிற பொடலங்காய்க்கு கல்லை கட்டும் ஊரு இது…
                                  யம்மா யம்மா ஊரு இது…
                                  தொங்குகிற காய்க்கு எல்லாம் கல்லை கட்ட முடியுமா?
                                  யக்கா.. யக்கா.. லெக்சரரு யக்கா யக்கா!!”

                                  பாடினதுகூட தப்பில்லை. கையக் கொஞ்சம் எசகுபிசகான வடிவில் இடத்தில் வைத்து பாடினதுதான் தப்பாயிருச்சு, வகுப்பே பயங்கரமாச் சிரிக்க அவங்களுக்கு ஷேமாகி இப்படி என்னை ஷேப்பிலாம செஞ்சுட்டாங்க. வாங்குன திட்டுக்கு என் காதெல்லாம் ரத்தம்! இப்பவும் எனக்கு நல்லாத் தெரியும். என் பாட்டும் சைகைகளும் அவங்களுக்கு ஒன்னும் புரிஞ்சிருக்காதுன்னு. ஒன்னும் புரியாத கொழந்த மாதிரியே வளர்ந்துட்டு வயசுப்பயக நம்ம கழுத்தை இப்படி அறுக்கறதுங்க.

                                  நான் என்னத்தை படிச்சேன்னு சொல்லலேல்ல? உங்களில் யாருக்கேனும் முதுகலை படிப்பு என்பது இளங்கலை முடிந்து போனதால் கல்லூரி வாழ்க்கையும் முடிஞ்சு போயிருமோங்கற பயத்தால் மட்டுமே அமைந்ததுண்டா? எனக்கு அப்படித்தாங்க. இளங்கலையில் இஞ்சியனிரிங்கில் நாப்பத்தஞ்சும் அம்பது மார்க்குகளாக பரிச்சைக்கு முந்தின நாளு ஜெராக்ஸ் பேப்பருகளை படிச்சு தேத்தியே கடைசி வரைக்கும் ஓட்டி நாலாவது வருசமும் ஒரு கப்பும் இல்லாம எல்லா பேப்பரையும் ஏறக்கட்டி நாலுவருசம் நீ வந்து போனதுக்கு இந்த பார்டர் மார்க்கு போதுண்டான்னு என் கல்லூரி என்னை வெளியே துரத்தியது. அப்போது எனக்கு வந்த முதல் கவலை “அடப்பாவிகளா… இனி நான் எங்க போய் பொங்கலும் கடலையும் போட்டு என் வாழ்வை வளமாக்கப்போறேன்?” அப்படிங்கறதுதான்.

                                  நல்லாப்படிக்கற பயக எல்லாம் வேலைதேடல்னு சென்னைக்கு கிளம்பிட்டானுங்க. தக்கிமுக்கியும் முடியாம அரியர்களை சரம்சரமா வைச்சிருந்தவனுக கூட கோர்ஸ் முடிச்சதை மட்டுமே வைச்சு சேல்ஸ்க்கு போயிட்டானுங்க. நேத்து வரைக்கும் பக்கிரியாட்டம் தலையும் பான்பராக் கறை நாறவாய்ல தம்முமா சுத்துனவனுங்க திடீர்னு டக் இன் செஞ்ச சட்டையும் டையுமா தோள்ல பைய மாட்டிக்கிட்டு அதே ஊர்ல டீசண்டா சுத்தல். அவங்களைப் பார்த்து இதப்பார்றா தமாசுன்னு சிரிச்சுக்கிட்டு இருந்தப்பதான் என் கூடச்சிரிக்கற ஆளுங்க எண்ணிக்கை நாலு மூணாகி அப்பறம் ரெண்டு ஒன்னாகி அப்பறம் டபக்குன்னு ஸ்டில்ஸாட்ல எல்லாரும் காணாமப் போயிடானுங்க! பின்ன அவங்கவிங்க வீட்டுல படிச்சுமுடிச்சு என்னத்த புடுங்கப்போறன்னு ஏத்து விழுமா விழாதா? நானுங்கூடி ரெண்டுநாளு தனியாத்தான் சிரிச்சுப் பார்த்தேன். ஒரு கட்டத்துக்கு மேல என்னை நானே பார்த்து சிரிக்கற மாதிரியே பீலிங். முடியல! வாங்குன பார்டரு மார்க்கை வைச்சு நல்ல வேலைக்கும் போக முடியாது. சேல்ஸ்மேன் வேலைக்கு கூச்சநாச்சம் இருக்கக்கூடாது. அப்படின்னா எனக்கு வாழ்க்கைல அடுத்த கட்டம்னே ஒன்னும் இல்லையா ஆண்டவா அப்படின்னு நான் இறைஞ்சியதில் உதித்த ஐடியாதான் மேல படிக்கறது!

                                  எப்படியோ நாலு வருசம் ஒழுங்க படிக்கலை. அதுக்காக ஒடனே திருந்திற முடியுமா? எங்கனயாவது ஏதாவது ஒரு PG கோர்ஸ்ல மறுபடி சேர்ந்துட்டா இன்னும் கொஞ்ச நாள் ஜாலிக்கு ஜாலி. கல்விக்கு கல்வி! இப்படி ஐடியா போட்டு எங்கப்பா கிட்ட இருந்து கொஞ்ச காசையும் பீராய்ந்து ஒரு காலேஜ்ல ஒரு ஆகாவலி கோர்ஸ்சையும் புடிச்சு சேர்ந்தும் ஆச்சு. நானும் மறுபடி காலேஜுக்கு போறேன் காலேஜுக்கு போறேன் செமபடமா கெளம்பி மொதநாள் வகுப்புக்கு போனா அங்கே பேரதிர்ச்சி! PGல எல்லாம் +2 முடிச்சிட்டு வந்த பயகளா இருப்பாங்க? எல்லாம் என்னை மாதிரியே வெந்ததும் வேகாததுமா பல வகைகள்ல ஆம்பளைங்க மற்றும் பெண்டீர் 25 பேர்! வேலைக்கு போயிட்டே மேற்தகுதிக்கு ஏதாச்சும் படிக்கலாம்னு சிலபேர். பிசினெஸ் செஞ்சுக்கிட்டே படிக்கவும் செய்யலாம்னு சிலபேர். MBA ME கிடைக்காம சைக்கிள் கேப்புல இதைப்படிச்சிட்டு அடுத்தவருசம் மீண்டும் முயற்சிக்கலாம்னு சில பெண்கள். ஆக என்னைத் தவிர மத்த எல்லோருமே மொசபுடிக்க வந்தவங்க தான். நான் மட்டும் காலேஜ் கூத்து தொடற மட்டுமே இங்க சேர்ந்தேனு சொன்னா ஒருத்தரும் நம்பலை! ரெண்டே நாள் தான். நான் அவுத்துவிட்ட உளரல்களும் ஜோக்கு பிட்டுகளும் அவர்களுக்கு தெள்ளத்தெளிவாக என்னை அறிமுகப்படுத்தி வைத்தது.

                                  ஒரு பையன் தான் சொந்தக்காலில் நிக்கனுங்கற சிந்தனை வர்ற ஆரம்பிக்கும்போதே அவன் ஆம்பளையா மாற ஆரம்பிக்கறான். சில பேருக்கு நான் இதாத்தான் ஆகப்போறேன் இப்படித்தான் இருக்கப்போறேன்னு +2லயே தெளிவாயிருது. இந்த மாதிரி ஆளுங்கெல்லாம் வெளில சோக்காளி கூட்டாளிக கூட பழகறதுக்குன்னு ஒரு முகம் வைச்சிருப்பாங்க. அவங்க பாதைல போறதுக்கு தோதான நட்புக்களும் உறவுகளும் மட்டும் கூட இருக்கும். உள்ளுக்குள்ள இருக்கற வெறி வாய்ப்புக்காக கனன்றுக்கொண்டே இருக்கும். பலபேருக்கு படிச்சு முடிச்சு வேலைக்குபோய் சுயமா சம்பளம் வாங்கிய பிறகும் கூட இந்த சிந்தனை வராது. இதுலயும் சிலது வேலை எதுக்கு? எதுக்கு சம்பாதிக்கனும்? ஒரு தொழிலை எதுக்கு அடிப்படைல இருந்து கத்துக்கனுக்கற தெளிவே இல்லாம சுத்திக்கிட்டிருக்குங்க. அதுல ஸ்டூடெண்ட் நம்பரு ஒன்னு நானு. ஆனா என் வகுப்பில் என்னைத்தவிர மத்த யாரும் அப்படி இல்லை. அனைவருக்கும் ஒரு கோல் இருந்தது. ஏதாச்சும் செய்யனும்னு துடிப்பாவது இருந்தது. இவங்களுக்கு நடுவால நான் என்னவா இருந்திருப்பேன்? அதேதான்! கலைக்கூத்தும் ஆட்டங்களுக்குமான வகுப்பு பிரதிநிதி. சினிமா டூருக்கு ஆர்கனைஸ் செய்யறது. வாட்டர் பொங்கல் போடறதுக்கு ரூம் தேத்தறது, யாருக்கு எங்க கல்யாணம் காதுகுத்துனாலும் கும்பலா கூட்டிக்கிட்டு போய் வர்றதுன்னு. அதாவது எல்லா க்ரூப்லயும் நானிருப்பேன். நான் இல்லாட்டியும் எல்லாமும் நல்லாத்தான் நடக்கும். நான் இல்லாத ஒரே நேரம் அவங்க சீரியசா படிக்கற நேரம். இப்படித்தான் ஓட்டிக்கிட்டிருந்தோம் ஒரு ஆறு மாசத்துக்கு.

                                  அப்பத்தான் இந்த கோகிலா பார்ட்டைம் லெக்சரரா வகுப்பெடுக்க வந்தாங்க. வேலைக்கு வரனும்னு இல்லை. ஆனா குடும்ப பிரச்சனை. ஏதோ காரணத்துக்காக கணவன் பிரிந்து இருக்க இவங்க இன்னமும் அப்பா வீட்டில். அவங்க அப்பாவும் அதே கல்லூரில பேராசிரியர்கறதால இவங்களை ஈசியா பகுதிநேர வேலைக்கு சேர்த்து விட்டுட்டாரு. சும்மா பேருக்கு காலேஜ் மேனேஜ்மெண்ட்டோட ஒரு அரேஞ்மெண்ட். அவங்களும் ஏதோ டிகிரி படிச்சிருந்தாலும் ஸ்பெசலைஷேசன் ஏதும் இல்லை. கொஞ்ச நாள்லயே ஜாலியாகிட்டதால எங்க எல்லாருக்குமே அவங்க வகுப்புதான் ரிலாக்‌ஷேசன். வகுப்பெடுக்கவே விடாம ஓரியாட்டம். மத்த படிக்கற பயகளும் இந்த வகுப்புல கத்துக்கறதுக்கு ஒன்னுமில்லைன்னு ஒன்னாச்சேர தெனமும் போங்காட்டம் தான்.

                                  ”யக்கா… தூக்கம் வருது.. சும்மா நடுநடுவால பேசாதீங்க…”, “யக்கா… ஏன் இப்படி மனப்பாடம் செஞ்சாப்படி ஒப்பிக்கறீங்க? பேன்சி ட்ரஸ் போட்டியா நடக்குது? இங்க கீழ வந்து ஒக்காருங்க… நேத்து ஜோடிப்பொருத்தம்ல ரெகோ என்ன கேட்டாப்ல தெரியுமா?”ன்னு வகுப்பு ஏதோ வீட்டு வரவேற்பரை மாதிரிதான் இருக்கும். அவங்க கோவம் வர்ற மாதிரி, திட்டற மாதிரி, மார்க்கை கொறைச்சுருவேங்கற மெரட்டல் மாதிரி என்னென்னவோ செஞ்சு பார்த்தாங்க. பப்பு வேகலை! கடைசியா தலைல கைவைச்சுக்கிட்டோ இல்ல ப்ரொபசருகிட்ட சொல்லீறாதிங்கப்பான்னு சிரிச்சுக்கிட்டோ அவங்களும் பொங்கல்ல ஐக்கியம்! அவங்க ஏன் பார்ட்டைமா வேலைக்கு வர்றாங்கன்னு ஓரளவுக்கு தெரிஞ்சுதான் இருந்தது. இருந்தாலும்  நாங்களே அப்படி இப்படி விசாரிச்சு குழந்தை இல்லை, இவங்களே குழந்தை மாதிரி வெகுளியா இருக்கறாங்க, வளரவேல்ல… இவங்களுக்கு மேட்டரே தெரியாது, இல்லாட்டி வரதட்சணையா இருக்கும், இல்ல ஊட்டுக்காரன் இவங்க சரிவரமாட்டாங்கன்னு வேறா ஏதாச்சும் லேடிமேட்டருல கேடியா இருப்பான்னு பலவகை ஊகங்களை அலசி புறம்பேசிக் கொண்டிருந்த காலம்.

                                  எங்க வகுப்புல பாலாதான் சீனியர். அப்பவே பிசினஸ் பார்த்துக்கிட்டிருந்தாப்ல. கல்யாணம் வேற ஆனவரு. படிச்சா பிசினெசுக்கு உதவும்னு சேர்ந்திருந்தார். நாங்க என்னதான் பொடிப்பயகன்னாலும் எங்களுக்கு சரிசமமா ஈடு கொடுத்துக் கொண்டிருந்தார். என்ன அலப்பரை ஓவரா போச்சுன்னா மட்டும் மனுசன் பெரியப்ஸ் அவதாரம் எடுத்துருவாப்ல. கெட்ட வார்த்தைலயே திட்டுவிழும். பலநேர மப்புகள் அவரால்தான் அளவுக்குள் மட்டுப்பட்டது. இல்லற ஆண் பெண் உறவில் ஏதாச்சும் டவுட்டுன்னாகூட வெளக்கமா சொல்லுவார். ஆனா நாங்க விரசமா ஏதாச்சும் விளையாட்டுன்னு செஞ்சா வண்டை வண்டையா திட்டு விழும்! அன்னைக்கும் பாலா என்னை தனியா கூட்டிக்கிட்டுபோய் பிரிச்சுட்டாப்ல. ”அண்ணே நான் நெஜமாவே அசிங்கமா பாடல. ஒரு ப்ளோல வந்துருச்சு”ன்னாலும் விடலை! நாளைக்கு மன்னிப்பு கேட்டு மனுசமா மாறுன்னு கடைசியா வார்னிங்! இதுக்கும் அப்பறம் மேற்கண்ட புரொபசர் பஜனை. எல்லாம் கேட்டு நெஜமாகவே செம காண்டாகியிருந்தேன்.

                                  அடுத்தநாள் சரி போனாப்போகுதுன்னு மனசை தேத்திக்கிட்டு யக்கா உள்ள வர்றப்ப சாரின்னு சொல்ல வாயத் தொறந்தா அவங்க நேரா என் முன்னாடிதான் வந்து நின்னாங்க! அத்தனைபேர் முன்னாலும் “சாரிப்பா… சார் ரொம்ப திட்டிட்டேன்னு சொன்னாரு. நந்தான் உன்னை மாட்டி விட்டுட்டேன். இனிமே நீயும் அப்படி கிண்டல் செய்யாத.. நானும் கொஞ்சம் ஓவரா அழுதுடேன்ல?!” இதையெல்லாம் கேட்டா எப்படி இருக்கும்? இவங்க ஸ்டாப்பா இல்ல ஸ்டூடண்டான்னு நெஜமாகவே தலையில் அடித்துக் கொண்டேன்! இப்படி லூசு மாதிரி இருக்கறதாலதான் வீட்டுக்காரன் விட்டுட்டு யெஸ்சாகிட்டானோன்னு திரும்பவும் மனசுக்குள்ள தோணுச்சு.

                                  ஆனா அதுக்கப்பறம் நான் என் வாலை சுருட்டிக் கொண்டேன். தோற்றத்திலும் செயல்களிலும் நிஜமாகவே குழந்தைபோல் இருப்பவரிடம் என்னத்தை லொல்லு செய்ய? மனதில் மரியாதை இல்லைன்னாலும் ஒரு கனிவு வந்ததுதான் காரணம். அதுக்கப்பறமும் வகுப்புகள் அப்படியேதான் சிரிப்பும் கும்மாளமுமாய் நடந்தது. ஆனால் சில்லரை சீண்டல்கள் இல்லை. ஏதோ சோகத்துல இருக்கும் ஒரு மனுசியை, இந்த வேலைக்கு வந்தாலாவது வேண்டாததை மறந்து கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம் என வாழும் ஒருவரை எப்படியாவது மகிழ்ச்சியா வைச்சுக்கனுங்கறது யாரும் கூடிப்பேசி முடிவெடுக்காமலேயே செயல்படுத்த ஆரம்பித்திருந்தோம்.

                                  “யக்கா… பேசிப்பேசி டயர்டாகாதீங்க.. காண்டீன் வடை நாலு இருக்கு. கீழ வந்தீங்கன்னா ஒன்னு தருவேன்!” “லேட்டா வந்தா வெளிய நிக்கனும்னு சொன்னீங்களாம்?! வெறுங்கையோட வந்தாத்தான? இந்தாப்பாருங்க செவ்வரளிப்பூ. உங்களுக்குன்னே லேபுக்கு பின்னாடி கஷ்டப்பட்டு நாத்தமெல்லாம் தாண்டி பறிச்சு வந்தது. வாங்கிக்கிட்டு என்னை திட்டாம விடுவீங்களாம்!!” இப்படியான செல்ல விளையாட்டுகளாய் யக்காவை முகமெல்லாம் பூரித்து சிரிக்க வைத்து களைகட்டிக் கிடக்கும் வகுப்பு! நட்புன்னு சொன்னமுடியாது. ஆனால் ஒருவித மதிப்போடு கோகிலாக்காவை அணுகத் தொடங்கியிருந்தோம்.

                                  வகுப்புநேரம்தான் இப்படி. மத்தநேரமெல்லாம் ஏதாச்சும் மரத்தடில படிக்கற எழுதற சிலர் அதைச்செய்ய மத்தவங்க கூடிக்கூடி பேசியபடி. கூட படித்த ஏழெட்டு பெண்களும் ஜமாவில் ஐக்கியம். அது ஒரு வித்தியாசமான வயது.  தெரிந்தும் தெரியாமல் மலரத் தொடங்கும் மலர்ச்சிகூட மனதில் இல்லாமல் மலங்க மலங்க முழிக்கும் பதின்ம வயதல்ல. இல்லற அனுபவம் கிட்டிய ஆண்டு அனுபவித்த உடலில் கூச்சம் போன அலுப்பேறிய கல்யாணம் முடிந்த முப்பதுகளும் அல்ல. இருபத்தியிரண்டில் இருந்து இருபத்தைந்துக்குள்! பெண்களெல்லாம் திருமணத்திற்கு தயாராக இருக்கும் வயது. பசங்களெல்லாம் திருமணம் என்பது ஆண்பெண் உடல் எப்பொழுதும் சங்கமித்து பின்னிப்பிணைந்து கிடக்கும் சடங்கு என மூளையில் வெறியேறி உடலால் வறண்டு மனதால் ஏங்குயேங்கிச் சாகும் பருவம்! சில பயகளுக்கு அப்படியிப்படி காதலி கொண்டோ இல்லை ஓசிச்சாப்பாடோ அமைந்து பதட்டத்திலும் பரவச தடுமாறலிலும் சின்னதாய் ஏதோ செய்து அதை பயங்கரமாய் அனுபவித்ததாய் சொல்லிக் கொள்ளவும், வாயைப்பிளந்து கதை கேட்க என்னைப்போன்ற நாலு காய்ஞ்ச பயக இருந்தால்  சில பல ரீல்கள் சேர்த்து பீற்றிக் கொள்ளவுமான  வாழ்க்கைப் பொழுதுகள். தூரப்போகும் தெரியாத அறியாத பெண்களை கண்களால் வெறிக்கவும் மனதால் வரிக்கவும் செய்யும் உடல். ஆனால் பக்கத்திலேயே இருக்கும் பழகிய அறிமுகமான வகுப்புத்தோழியை அப்படி பார்க்கத் தோணாமல் செய்யும் குறைந்தபட்ச மனித நாகரீகம் எங்கிருந்தோ ஜீனில் ஒட்டிக்கொண்ட இது இப்படித்தானென தீர்மானித்துவிட இயலாத பருவம். 

                                  பள்ளிமுடித்தவுடன் சேரும் கல்லூரி வாழ்க்கை ஆண் பெண் ஈர்ப்பினை அப்பட்டமான இயக்கமாகவும் பழக அடிநாதமாகவும் இருக்கிறது. ஆனால் அதைத்தாண்டி நாம் நமக்காகவும் குடும்பத்துக்காகவும் ஏதாவது செய்யவேண்டுமென்கிற வேலை தேடும் வயதில் பாலினஈர்ப்பு என்பது நீறுபூத்த நெருப்பாகவும் ஏதாச்சும் செய்து செட்டிலாகனுங்கறது நெத்திக்கு முன்னால் தொங்கும் கத்தியாகவும் அமைந்து வயிற்றில் எப்பொழுதுமே ஒரு பயத்தினை உருட்டிக் கொண்டிருக்கும் காலகட்டம். ஆண்களும் பெண்களுமாய் கொஞ்சம் லஞ்சையில்லாமல் தான் பேசிக்கொள்வோம். ஆனால் ஆண்கள் மட்டுமே இருக்கும் டீக்கடை மீட்டிங்களும் கையில் யாருக்கேனும் காசுபுரண்டால் நடக்கும் வாட்டர்கேம்ஸ் நைட்டுகளும் பச்சை மஞ்சள் சிகப்பென வர்ணங்களால் நிறைக்கப்பட்டிருக்கும்! தமக்குத்தானே போட்டுக்கொண்ட உடல் மன வேலிகளோடும் வாழ்க்கையில் நிற்கவேணுங்கற அழுத்தங்களோடும்! பாலா மட்டும் அன்றைக்கு எங்களோடு இல்லையென்றால் காய்ந்த உடல்களின் உக்கிரப்பேச்சுக்கள் சொறி மீதான வரட்டுத் தேய்ப்புகள் கொடுக்கும் இன்பமாக மட்டுமே இருந்திருக்கும். அது அப்படியில்லடா… இது இப்படிடான்னு அவர் சொல்லும் ஆண்பெண் உறவுகள் பற்றிய பலதும் புரிந்து புரியாததும்போல இருந்தாலும் சும்மா கேட்டுவைத்துக் கொள்வோம். பெருசு ஏதோ தெரிஞ்சங்கறதை ஓவரா பெனாத்துன்னு வாய்பிளந்து கேட்ட கூச்சத்தை மறைக்க அவரையே ஓட்டிருவோம்.

                                  அன்றைக்கு பாலாவுக்கு ஐந்தாவது திருமணநாள். காலைல வகுப்புலயே சொல்லிட்டு எல்லோரும் சாயந்தரம் வீட்டுக்கு விருந்துக்கு வந்துருங்கன்னு அழைச்சாப்ல. இன்னைக்கு வரைக்கும் மாறாத அந்த நல்ல பழக்கமான ஓசில விதவிதமா சாப்பாடு கெடைச்சா வண்டி கட்டிக்கொண்டு போய் இறங்கி பாத்தி கட்டும் பழக்கத்துக்கு ஏற்ப சாயந்தரம் நாலுமணிக்கே எல்லோரும் அவர் வீட்டுக்கு குறும்பயணம். அவர் என்னவோ நைட்டு பிரியாணிக்குத்தான் வரச்சொன்னாப்ல. ஆனா எங்களுக்கும் நாலு மணிக்கு மேல கல்லூரில செய்யறதுக்கு ஒன்னுமில்லைங்கறதால வந்து ஏதாச்சும் கூடமாட ஒதவறோம்னு நாலரைக்கே ஆஜர். ஆம்பளையும் பொண்டுகளுமா இருபது பேரு. யக்காவையும் சேர்த்துத்தான்! இப்பவெல்லாம் அவங்களை டீக்குடிக்க போனாக்கூட க்ளாஸ்மேட்டு மாதிரியே இழுத்துக்கிட்டு சுத்தறதுதான்.

                                  பாலா வீடு பெருசுதான். அவரும் அவங்க வீட்டம்மாவும் பயங்கர சந்தோசமான வரவேற்பு கொடுத்தாங்க! அவங்க மனைவிக்கு அவங்க வயசுல நாங்கன்னும் அவரு வீட்டுக்காரருக்கு காலம்போன காலத்துல இத்தனை க்ளாஸ்மேட்டுகளான்னும் ஒரே மலர்ச்சி. என்ன இருந்தாலும் எத்தனை பேருதான் சமையலறைல உதவமுடியும்? கல்யாணத்துக்கு ரெடியா இருக்கற புள்ளைங்க மூணுபேரு நாந்தான் செய்வேன்னு அடம்புடிச்சு சாயந்தர தீனியா பஜ்ஜி கேசரி செய்வேனுட்டு உள்ள போயிட்டாங்க. மத்தவங்க டீ வர்ற வரைக்குமாவது  வீட்டை சுத்திப்பாக்கலாம்னு பாலா கூட உலாத்துனோம். அப்பறம் எல்லாரும் ஹால்ல டீவிய போட்டுவிட்டுட்டு அக்கடான்னு சாய்தல். அப்பதான் புதுசா கேபிள் டீவியெல்லாம் வர ஆரம்பித்த காலம். ஏதோ ஒரு மொக்கை சேனலில் பாட்டுகளா ஓடிக்கிட்டிருந்தது. கமெண்டு கருத்துன்னு ஹால் முழுக்க சிரிப்பலை. யக்காவை சுவரோரம் இருந்த சோபால மேல உக்கார வைச்சுட்டு நாங்க எல்லாம் கீழ கிடைச்ச இடத்தில் சாய்ந்துகொண்டும் உருண்டுகொண்டும் வாயில் வந்ததை பேசிக்கொண்டும். எதையோ எடுக்க வெளியே சென்ற நான் திரும்பிவந்து கீழே செட்டாக இடமில்லாததால் யக்காவின் சோபாவுக்கு பின்னால் சற்றுதள்ளி நின்றிருந்தேன்.

                                  டீவியில் ஒரு சுவாரசியமில்லாத பாட்டு முடிந்து அடுத்தது ஒரு ரஜினி பாட்டு ஆரம்பித்தது. “மாசிமாசம் ஆளான்ன பொண்ணு மாமன் உனக்குத்தானே…” எல்லோரும் ஓன்னு சவுண்டு. பாலா தம்பதிக்கு இன்னைக்கு நைட்டுக்கு இப்பாட்டு சமர்ப்பணம்னு ரகளை. வீடே ஒருவித பூரிப்பில் இருந்த அந்த கணத்தில்தான் நான் எல்லோருக்கும் பின்னாலும் எனக்கு சைடாகவும் அமர்ந்திருந்த கோகிலாக்காவை பார்த்தேன். யக்கா இயல்பாக இல்லை. ஏதோ ஒரு இனிய இல்லற தருணம் அந்தப்பாடலோடு யக்காவின் வாழ்வை கோர்த்திருக்க வேண்டும். நடுங்கும் கைகள் சேலை நுனியை அவசர கதியில் சுற்றியபடி. டீவியில் எண்ணை தேய்த்த உடல்கள் உராய்ந்தபடி ”ஸ்ஸா…” என்று எழுப்பும் ஒலிகள் அவருக்கு நெருப்பள்ளி உடல் மேல் கொட்டியது போன்ற தாங்கவியலாத நிலைக்கொள்ளாமை. வியர்க்கும் முகத்தை அடிக்கடி துடைத்தபடி தலைகுத்தி உதடுகள் கடித்தபடி உள்வாங்கிய பார்வையில் அலையும் கண்கள். பாட்டு நகர நகர முந்தானையை உடலோடு போர்த்தி அதன் பந்தென உருட்டிய நுனியை இரு கைகளுக்குள் வைத்து கசக்கியபடி. அங்கே நாயகனும் நாயகியும் ஆலிங்கனமாய் காட்சிதர இவர் இரு கைகளின் விரல்களையும் இறுக்கி நெருக்கியபடியும் கால்களை ஒன்றின்மேலொன்று குறுக்கியபடியும். இடுப்பை அணைத்தபடி கட்டி உருளும் காட்சியில் அவர் முழுதாய் தன்னை எங்கோ இழந்திருந்தார். கண்களில் கோர்த்த நீருடனும் இருண்ட முகத்துடனும் அந்த நான்கு நிமிடங்களில் என் கண் முன்னால் அந்த சக உயிர் படும் நரகவேதனையை கண்டேன். கடவுள், அப்பா, மாமா, சகோதரன், நண்பன் என யாராலுமே தீர்த்துவிட முடியாத ஒரு தணல். ஒரே ஒருத்தனுக்கென வரிக்கப்பட்ட உடலில் அந்த ஒருவன் கிளப்பி விட்டுப்போன நெருப்பு அறிந்தும் அறியாமலும். அந்த ஒருவன் அவசரகதியிலும் ஆத்திரத்திலும் கை விட்டுப்போன திருமண பந்தத்தின் பெயரால் தீண்டப்பட்டு தயாரான உடல் தீண்டப்படாமலும் தீண்டப்பட வழியில்லாமலும். இத்தனை உறவுகள் இருந்தும் அறிந்த உடல்கள் இருந்தும் எதுவுமே உதவிட இயலாத முடியாத சமுதாய முடிச்சு மற்றும் அழுத்தம். வெறும் உடல்கள் மட்டுமே இயங்குமென வளர்த்தெடுத்த காமவெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் என் மனதுக்கு இந்த நரகவேதனை எதுவெதுவோ சொல்லிக்காட்டியது. ஆனால் வாழ்க்கையில் சமூகக்கோடுகளை எல்லைக்கோடுகள் என வாழும் கோகிலாக்கா போன்ற சராசரிகள் இந்த வலிகளை ஏனைய உன்னத உணர்வுகள் கொண்டு வெகுஎளிதில் தாண்டித்தான் வாழ்கிறார்கள்.

                                  எப்பொழுது அந்த பாட்டு முடிந்தது என்றும் எந்தக்கணத்தில் யக்கா அத்துயரத்தின் கண்ணீர் துளிகளை யாருமறியாமல் துடைத்தெடுத்தார்கள் என்றும் நான் அறியவில்லை. “ஏய்… என்னப்பா இது… எனக்கு குடுக்காம எல்லா பஜ்ஜியும் நீங்களே மொசுக்கறீங்க… எனக்கொன்னு வைங்கப்பா…” என சொல்லியபடி முகத்தில் மீட்ட சிரிப்புடன் அவர் கீழே சென்று அமர்ந்தார்.


                                  எனக்கு அடிநெஞ்சில் இருந்து ஒரு துயரம் பந்தென உருண்டு கேவலாக வெளிக்கிளம்பியது.

                                  காமம் தெளிதல் 2 :- அகத்தூய்மை

                                  $
                                  0
                                  0


                                  ”கொட்டற பனில இன்னும் என்னங்கடா வெட்டிப்பேச்சு? நாளைக்கு காலேஜ் போகவேண்டாமா? நெஞ்சுல சளி கட்டுனா மூனு நாளைக்காவது கஷ்டம்ல? ரவுண்ட்ஸ் எல்லாம் நான் பார்த்துக்கறேன். நேரமா போய் படுங்கப்பா…”


                                  ஒரே நிமிடத்தில் இப்படி அன்பு, அக்கறை, கண்டிப்பு, தோழமை எல்லாம் கலந்து எங்களை திட்டமுடியும்னா அது கோபி அண்ணாவால் மட்டும்தான் முடியும். இதற்கு பதில் எங்களிடமிருந்து என்ன வரும் என்பதும் அவருக்கு தெரிந்தே இருக்கும். ஒரு மாதிரி கோரசாக “தோ.. அஞ்சு நிமிசம்ணே… போயிடுவோம்” என்று நாங்க சொல்லி முடிக்கறதுக்கும் அவர் “ம்ம் சீக்கிரம் போங்கடா.. வீட்டுல திட்டுவாங்கல்ல” என்று சொல்லியபடி திரும்பி ரோட்டை பார்த்தபடி அடுத்த ரவுண்ஸ் நடப்பதற்கும் சரியாக இருக்கும். அந்த அஞ்சு நிமிசங்கறது கூடக்குறைய ரெண்டுமணி நேரமாவது ஆகும். அது அடுத்து தொடர்ந்துவரும் அவரவர் வீட்டாரின் அன்பு மேலிடும் அழைப்புகளை பொறுத்தது.






                                  நாங்க நெதமும் பொங்கல் போடுமிடம் ரொம்ப தூரமெல்லாம் இல்லைங்க. எங்க காலனியே நேர்கோடுகளாக நாலு தெருக்கள்தான். தெருவுக்கு ஒரு சைடுல 30 வீடாச்சும் தேறும். தெருக்கள் சேரும் ஒரு பக்கம் சின்ன மெயின் ரோட்டில் இணைந்து அது வடக்காக அவனாசி சாலையைத்தொடும். மறுமுனைகள் தொடும் இடம் நாலு ஏக்கராவுக்கு காலிநிலம். பெரும்பாலும் பார்த்தீனிய செடிகளால் நிறைந்திருக்கும். அதுக்கு ஆரம்பத்துல ஒரு சின்ன கால்வாய். அதைத்தாண்டுனா எங்க கிரிக்கெட் க்ரவுண்டு. அதன் கடைசில ஒரு ஃபவுண்டரிய ஓட்டிய சின்ன ஆஷ்பெட்டாஸ் ஷெட்டு. அதுதான் எங்களுக்கு கிரிக்கெட் காலரி, சட்டசபை, சங்க ஆபீஸ்னு எல்லாமே. காலனில ஏறக்குறைய என்வயசுல ஒரு டஜன் உருப்படிக தேறுவோம். அதை வைச்சே மெஜாரிட்டி போட்டு அந்த ஷெட்டை ஆக்கிரமித்திருந்தோம். எங்களைவிட சிறுசுங்க கிரிக்கெட்டு வெளையாடிட்டு போயிறனும். சங்க ஆபிஸ்குள்ள எல்லாம் வரப்படாது. எங்களை விட பெருசுங்க எப்பவேணா வந்துபோகலாம். ஆனா பட்டா போட்டுறப்படாது. பெரும்பாலும் பெருசுக திருட்டு தம்முக்கும் பீருக்கும் தான் வரும்க. கொஞ்ச நேரத்துலயே மேட்டரை முடிச்சுட்டு பொண்டாட்டி திட்டுவாங்கன்னு கெளம்பிருவாங்க. பெருசுகளும் தலைகாட்டறதால ஒருமாதிரி பொறுப்பாத்தான் ஓடுதுன்னு அப்பாம்மா யாரும் பெருசா கவலைப்படறதில்லை. நாங்களும் அ.கொ.தீ.க கழகம் அளவுக்கு இல்லைன்னாலும் ஏதோ சின்னச்சின்னதா தப்புக செஞ்சுக்கிட்டு வண்டி ஓட்டிக்கிட்டிருந்தோம். வண்டின்னா எல்லா வண்டியும்தான். சைக்கிள்ல ஆரம்பிச்சு, பைக்குகள்ல போய் அப்பறம் இப்பக்கூட மக்கா கார்களை நிறுத்தி அங்கன பொங்கல் போட்டுட்டுதான் இருக்காங்க. நாந்தான் வேலைதேடி ஊரைவிட்டு வந்ததுல டச்சுவிட்டு சிலகாலமாச்சு.



                                  கோபிண்ணா இந்த பெருசுக கூட்டத்துல என்னைக்குமே சேர்ந்ததில்லை. அவருக்கான வயலும் வாழ்வும் வேறு. எங்களை விட ஏழெட்டு வயசு அதிகம். நாங்க ஸ்கூல் முடிக்கறதுக்கு முன்னாடியே அவர் காலேஜெல்லாம் முடிச்சு வேலைக்கு போயிட்டாப்ல. வீட்டுக்கு ஒரே பையன். ஆறடி, தங்கநிறம், கருஞ்சுருட்டை முடி, சதுரமுகம், அதுல ஒரு பட்டைக்கண்ணாடி. சுருங்கச்சொன்னா மலையாளிக முகம். பின்ன அவங்கம்மா பாலக்காட்டு சைடுல்ல? இப்பக்கேட்டால் அவரு பார்க்கறதுக்கு உயரமாய் சிவப்பாய் மீசைவைச்சுக்காத ஆதவன் மாதிரி இருப்பாப்லன்னு பட்டுன்னு சொல்லிருவேன். அப்பக்கேட்டிருந்தா டி.ராஜேந்தர் படத்துல அவர் தங்கச்சிய காதல்செய்து ஏமாத்தி அப்பறம் சாவகாசமா அடிவாங்கி திருந்திக்கொள்ளும் மேன்லி ஸ்மார்ட் கேரக்டர்களுக்கான முகம். ஆனால் உண்மையில் கோபிண்ணா தப்பெல்லாம் செய்யமாட்டாரு. எங்களுக்கெல்லாம் ஒரு விதத்துல எதிரி. வீட்டுல எங்க யாருக்கு புத்தி சொல்லறதா இருந்தாலும் பெரும்பாலும் அவரு பேரை வைச்சுத்தான் பாட்டு ஆரம்பிக்கும். ஏனெனில் அவரது சொல்லும் செயலும் ஒழுக்கமும் அப்படி. கடமை கண்ணியம் கட்டுப்பாடுல எங்க காலனி தாய்மாரெல்லாம் அவரை உச்சிமுகர்ந்து கைவிரல்களால் கன்னத்துல சொடக்குப்போட்டு ஏறுகழிப்பாங்கன்னா பாருங்களேன்!







                                  என்ன அவரது வீடு இந்தப்பக்கம் கடைசி வீடுங்கறதால அங்கிருந்து பார்த்தா சங்க ஆபீஸ் கத்திக்கூப்பிடும் தூரம் தான். வீட்டுக்கு முன்னால் ஒரு வேப்பமரம். அதனை ஒட்டியே தெருவிளக்கு. இரவுநேரங்களில் அந்த தனித்த மஞ்சள்விளக்கின் ஒளி அவரது வீட்டை முழுதாக போர்த்திவிட்டது போலிருக்கும். கோபிண்ணா கடைசியாக வீட்டுக்குள் செல்வதற்குமுன் சங்கத்துல ஏதாவது வண்டிக தென்பட்டால் எட்டிப்பார்த்து மேற்கண்டபடி எங்களுக்கு லைட்டா ஒரு எத்து விட்டுட்டு போவாப்ல. எங்க காலனில அனேகமாக எல்லா வீடுகளும் 9 மணிக்கெல்லாம் கடை சாத்திரும். இளந்தாரிங்க நாங்க இப்படி கொஞ்சம்பேர் மட்டுமே நடமாட்டம். இதுவும்போக எங்களை நைட்டு சாப்பாட்டுக்கு அப்பறமும் வெளில சுந்த அனுமதிச்சதுக்கு ஒரு காரணம் இருந்தது. காலனியில் முளைத்த திருடர் பயம்! கொஞ்சம் ரிமோட்டான ஏரியாங்கறதாலயும் காலனிய தாண்டித்தான் சில பவுண்ட்ரிகளும் லேத்துபட்டறைகளும் ஓடிக்கொண்டிருந்ததால் காலனிவழியா யாரு வரப்போக இருக்காங்கன்றது தெளிவில்லை. அப்பப்ப ஏதாச்சும் சில்லரைத் திருட்டுகளாக சைக்கிளை கெளப்பிக்கிட்டு போறது, வீட்டுக்கு முன்னாடி இருக்கும் ஏதாச்சும் காணாமப்போகத்தான் இருந்தது. ஒரு நாள் பூட்டிக்கிடந்த வீட்டுக்கு பின்னாடி கதவை பெயர்த்துப்புகுந்து 20 பவுன் நகை திருட்டுப்போனதுக்கு அப்பறம்தான் எல்லாரும் பீதியாகி உசாரானாங்க. காலனி மீட்டிங்கைப்போட்டு வீட்டுக்கு மாசம் இவ்வளவுன்னு வசூலிச்சு செக்கூரிட்டிங்க ரெண்டுபேரு நைட்டு ரோந்துக்கு அப்பாயிண்டடு. அதுவும் திருப்தி ஆகாததால இளந்தாரிக மிட்நைட்டு வரைக்கும் ரோந்துபோறோம்னு முறைபோட்டு சுத்திவருவாங்க. நாங்க ஒரு ரவுண்டுக்கப்பறம் சங்க ஆபீஸ்ல பொங்கலுக்கு அடைக்கலம் ஆயிருவோம். கோபியண்ணா மட்டும் முடிகிற நாளெல்லாம் விரைப்பாக செக்கூரிட்டிகளுக்கும் மேலாக ரவுண்ட்ஸ் சுத்திட்டு திருப்தியானதுக்கப்பறம் தான் படுக்கப்போவார்.









                                  நாங்களும் பலநேரம் பேசித்தீர்த்ததுண்டு. எப்படி கோபிண்ணா மட்டும் இப்படி நல்லபுள்ளையா இருக்காருன்னு. அதுக்கு காரணம் அவங்கப்பாதான் அப்படின்னு நாந்தான் அடிச்சுப்பேசுவேன். கோபியே இப்படின்னா அவங்கப்பா எப்படியாப்பட்ட கனவானாக இருக்கனும்தானே நினைக்கறீங்க? அப்படியே தலைகீழ். பயங்கர காசுபொழங்கற கவருமெண்டு துறைல கேடர் அதிகாரி. யாருக்கும் தேவைக்கு அதிகமாக இருக்கும் பணமெல்லாம் சேமிப்புதான். உழைத்து வராமல் கிடைச்சால்கூட லாட்டரி. ஆனால் கடமையை செய்ய மறுத்தோ அல்லது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியோ வாங்கும் லஞ்சப்பணம் என்பது பாவப்பணம். பாவம் செய்ய தூண்டுவதால். காலைல இருந்து ஏய்ச்சதுக்கு மாலைல கையில சிலபல ஆயிரங்கள் சுளையாக கிடைத்தால் அதை சேமிக்கத்தோணாது. சொத்து வாங்கி கணக்கு காட்ட முடியாது. பாக்கெட்டுலயும் ரொக்கமாவே வைச்சுக்கமுடியாது. மிகக்குறைந்த அளவுக்கு மான அவமான உணர்ச்சி இருந்தாலும்கூட அது குற்ற உணர்ச்சியாக உருவெடுத்து தலையை தின்னுரும். ஒரே வழி அன்னைக்கு நைட்டே அதை ஆட்டம்போட்டு அழிச்சிறதுதான். குடி குட்டி கும்மாளம். காலைல ட்ரிம்மா சபாரி சூட்ல கிளம்புனார்னா சாயந்திரம் வண்டி அப்படியே ஆபீசர்ஸ் க்ளப், க்ளவுட் 9 பார் இப்படி எல்லா இடமும் குடிச்சு முடிச்சு வீடு வந்துசேர 11 ஆகிரும். வண்டில இருந்து யாரையாவது திட்டியபடிக்கு உளரிக்கொண்டே இறங்கி உள்ள போவார்.



                                  60வதுல அவர் ரிடையர் ஆனதுக்கு பிறகும் இது தொடர்ந்தது. முழுநாள் வேலையாக. காலைல 11 மணிக்கே டிரைவர் போட்ட அம்பாசிடரை எடுத்துக்கொண்டு சீட்டாட கெளம்பிருவாப்ல. இதையெல்லாம் சின்ன வயசுல இருந்து பார்த்துப்பார்த்து வெறுத்துப்போய்தான் கோபிண்ணா மனசை ஒருமுகப்படுத்தி கட்டுக்கோப்பாய் மாற்றியிருக்க வேண்டும். மிக இயல்பான காட்சி அது. எல்லா ஞாயிறுகளிலும் கோபிண்ணா வீடுமொத்தமும் சுத்தம் செஞ்சுக்கிட்டிருப்பார். போர்டிகோ கழுவுவார். ஜன்னல் கம்பிகளையெல்லாம் துடைச்சுக்கிட்டிருப்பார். பூச்செடிகள் அனைத்துக்கும் தண்ணி ஊத்திக்கிட்டிருப்பார். அம்பாசிடரை தூசிதும்பில்லாம அலசியெடுப்பார். அவங்கப்பா கையில்லாத பனியன் போட்டுக்கிட்டு நெஞ்சுக்கு கீழ தொப்பைக்கு மேல கட்டுன சிங்கப்பூர் லுங்கியோடு அவரது ஆறாவது விரலான சார்மினார் சிகரெட்டு புகைய தேமேன்னு ஈசிசேர்ல சாய்திருப்பார். ஒரு நாளைக்கு பத்து பாக்கெட்டு நிச்சயம் ஓடும். அப்பாருக்கு சிற்றின்பம். மகனுக்கும் ஒழுக்கம். அவங்கமாவுக்கு கோயில் கோயிலாக பக்திதேடல்னு அவங்க குடும்பமே ஏதாவது ஒன்றுக்கு அடிமைப்பட்டு கிடந்த காலம் அது.


                                  ஆனால் காலனி பெருசுகளுக்கு அவங்கப்பா மேல ஒரு வயித்தெரிச்சல் எப்பவும் இருந்தது. எல்லோரது வீட்டுலயும் ஒருத்தருக்காவது கொழுப்பு, இரத்த அழுத்தம், நீரிழிவுன்னு கவுரவமாக சொல்லிக்க ஒரு வியாதி இருந்தது. அது சந்திச்சு பேசும்பொழுது ஆளாளுக்கு காலைல வாக்கிங் போறதையும் மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்ததை சொல்லி பெருமையடிச்சுக்கவும் உதவிக்கொண்டிருந்தது. ஆனால் கோபியண்ணா அப்பாக்கு உடம்புல எந்த பிரச்சனையும் இல்லை. சும்மா ஒழுக்கமா அடங்கிக்கிடக்கற உடம்புங்க எல்லாம் சீக்கிரமே உழுத்துப்போக ஆட்டமாய் ஆடிக்கொண்டிருக்கும் இந்தாளுக்கு மட்டும் ஒன்னுமே வரலையான்னு ஆளாளுக்கு அங்கலாய்சுக்குவாங்க. அது நீருபூத்த நெருப்பாக மேலாக்க சாம்பல் தட்டிய பொறாமையாக உருவெடுத்திருந்தது ஒரு தருணத்தில் வெளிப்பட்டது.






                                  ஒரு நாள் மத்தியானநேரத்தில் காசைக்காட்டி ஏதோவொரு வேலையாளு பொம்பளைய ஏற்பாடு செய்து முக்கால்வாசி கட்டி முடிக்கப்பட்ட காலியாருக்கற வீட்டுல கோபிங்கப்பா காமத்தில் திளைத்துக்கொண்டிருந்த பொழுது யாரோ வயித்தெரிச்சல்ல அந்த அறைக்கு வெளில நல்ல பெரிய பூட்டு போட்டுக்கு போயிட்டாங்க. வெளில வரமுடியாம அவர் கத்த அந்த பொம்பளை மூலைல குறுகிக்கிட்டு கதற விசயம் மெல்லப்பரவி அத்தனை காலனி பெருசுகளும் அந்த பில்டிங்குல ஆஜர். ஆளாளுக்கு அறிஞ்ச தெரிஞ்ச புத்திமதியா அள்ளிவிடறாங்க. யாருக்கும் பூட்டை உடைக்க தோன்றவில்லை. ஆடின ஆட்டத்துக்கு அந்தாளு எவ்வளவு நேரம் உள்ள இருக்காப்லயோ அந்தளவுக்கு அசிங்கப்படனும்னு அல்ப ஆசை. கோபிண்ணாவுக்கு விசயம்போய் களத்துக்கு வந்து சேர்ந்தார். முகம் எந்த உணர்ச்சியும் இல்லாம இருகிப்போய் கிடந்தது. ரெண்டு நிமிசத்துல நிலைமைய புரிஞ்சுக்கிட்டு தலைய குனிஞ்சபடிக்கே “பூட்டை உடைச்சுக்கறேன்.…” என்று மட்டும் சொன்னார். அவர் சில நொடிகள் தாமத்தித்தது சபையோரின் அனுமதிக்கு காத்திருந்தது போலவே இருந்தது. ஆனால் சடக்குன்னு எங்கிருந்தோ ஒரு பெரிய இரும்பு ராடு கொண்டுவந்து ஒரே நெம்பு. பூட்டை தாழ்ப்பாளோட பெயர்த்து எடுத்துட்டு கதவை திறந்தார். தலைகுத்துனவாகுலயே அப்பாவை அழைச்சுக்கிட்டு வீட்டுக்கு விறுவிறுன்னு போயிட்டார். வயசாளிகளுக்கு எப்படியோ இளவட்டங்க எங்களுக்கெல்லாம் முதல்ல சிரிப்பா இருந்தாலும் கடைசில கோபிண்ணா மேல பாவமா வந்துச்சு. இப்படியும் ஒரு ஆளா? அந்தாளுக்கு இப்படியும் ஒரு புள்ளையான்னு.



                                  கோபிண்ணா செஞ்சுக்கிட்டது லேட் மேரேஜ்னு சொல்லமுடியாது. ஆனா அவங்கப்பா எல்லாம் ரிடையர் ஆகி சுமாரா முப்பது ஆரம்பத்துல செஞ்சுக்கிட்டாரு. எங்க எப்படி பொண்ணெடுத்தாங்கனு யாருக்கும் தெரியாது. பாலக்காட்டுல கல்யாணம். கோவைல ரிஷெப்சன். அவர்மேல இருந்த மரியாதைக்கு மட்டுமே காலனில எல்லாரும் போயிருந்தோம். அண்ணி அப்படி ஒரு அழகு. ஆனால் கோபிண்ணாவை விட நிறம் கொஞ்சம் கம்மிதான். கேரளத்தின் வட்டமுகம். பெரிய கண்கள். பூரித்த உடல்வாகு. வாய்கொள்ளாச்சிரிப்பு. மலையாளமும் தமிழும் கலந்த பேச்சு. ரிஷப்சன் மேடைல அவங்க ஒவ்வொருவருக்கும் கைக்கூப்பி சிரிக்க அவங்க கண்களும் சேர்ந்து சிரித்தன. சற்றே தலைசாய்த்த சிரிப்பு. ஒவ்வொரு தலைசாய்ப்புக்கும் அவங்க காதில் இருந்த சின்னச்சின்ன சிவப்பு கற்கள் பதித்த டாலடிக்கும் ஜிமிக்கி எத்தனைமுறை ஆடுகிறதுன்னு கணக்கு வைச்சபடியே கீழிருந்து பார்த்துக்கொண்டிருந்தேன். அன்றைக்கு எங்க எல்லோருக்குமே சாப்பாட்டுடன் சக்கப்பிரதமன் ரெண்டு ரவுண்டு வாங்கி குடிச்சதவிட கடைசில கோபிண்ணாக்கு நல்ல அழகான மனைவி அமைச்சது பொறாமையை மிஞ்சிய இனிப்பான நிகழ்வாக இருந்தது. நல்ல பையனா இருந்தா அதுவா அமையும்னுகூட எங்கம்மாவும் நானும் பேசிக்கொண்டோம்.


                                  கோபிண்ணா நடையிலயும் ஒரு ஜோரு வந்திருந்தது. சிரிச்சமேனிக்கு வேலைக்கு போய்வந்துகொண்டிருந்தார். வாரயிறுதியில் வண்டியெடுத்துட்டு பாலக்காட்டுக்கு மாமனார் வீட்டுக்கு பயணம். ஞாயிறு சாயந்தரம் திரும்பி வந்தவுடனே சிலமணிநேரம் வீடு பராமரிப்பு. மாமிகூட ஆண்டவன்கிட்ட அழுகறதுக்கு மட்டுமே கோயிலுக்கு வந்துக்கிட்டு இருந்தவங்க இப்பவெல்லாம் சந்தோசமாகத்தான் வழில பாக்கறவங்ககூட பேசிக்கிட்டிருப்பாங்க. வீட்டுக்கு மருமகளே வந்தாச்சுன்னு அடங்குனாரா இல்லை வீட்டாரால் அடக்கிவைக்கப்பட்டாரான்னு தெரியாது. கோபிங்கப்பா அதுக்கப்பறம் எந்த வில்லங்கத்துலயும் மாட்டலை. சிகரெட்டு மட்டும் அதே அளவுல ஓடிக்கிட்டிருந்தது. சிலசமயம் சிகரெட்டு தீர்ந்துட்டா என்னைப்பிடிச்சு கடைக்கு ஓடச்சொல்லுவார். நானும் சைக்கிளை அழுத்திக்கிட்டு போய் சடுதில ஒரு கட்டு சார்மினாரோட வரணும். தொலையுது பெருசுன்னு அப்பப்ப செய்யறதுதான். சார்மினார் குடுக்கற சாக்குல அண்ணி கண்ணுல பட்டா அகலச்சிரிப்போட ”நல்ல படிக்குன்னா?”னு கேட்கக்கிடைச்சால் ஒரு கூடுதல் சந்தோஷம்தான். அரியர் கோஷ்டியான எனக்கெல்லாம் யாராவது படிப்பைப்பத்தி பேசுனாங்கன்னாவே குபீர்னு கிளம்பும். ஆனால் நான் மிகமகிழ்ச்சியாக பதில்சொல்லும் ஒரே தருணம் அதுதான்.








                                  சிலருக்கு சிலதுபடி வாழ்க்கை எழுதப்பட்டிருக்கும்போல. வாஸ்து, பில்லிசூனியம், விதி, கெட்டநேரம் என அவரவர் நம்பிக்கைபடி என்னவேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம். ஆனால் சிலரது வாழ்வில் சில நிகழ்வுகள் அவர்களை எங்கேயும் எப்பொழுதும் மேலே வரவிடாமல் அழுத்திப்போட்டுருது. கோபிண்ணாவும் அண்ணியும் எங்களுக்கு தெரிஞ்சு ஒருவருசத்துக்கு நல்லா இருந்தாங்க. கொஞ்சம் கொஞ்சமாக அண்ணி நடவடிக்கைகள்ல மாற்றங்கள். காலனில அரளிபுரளியான பேச்சுக்கள். அவங்களுக்கு கட்டுக்கடங்காத கோவம் வருது. வழில பாக்கறவங்களை மொறைச்சபடிக்கு மலையாளத்துல திட்டறாங்கன்னு. ஒருமுறை பால்காரர்மேல பாலோட பாத்திரத்தை தூக்கி எறிஞ்சுட்டாங்கன்னு பஞ்சாயத்து. நாளாக ஆக நைட்டானாவே கத்த ஆரம்பிச்சாங்க. வார்த்தைகளால் அல்ல. ஏதோவொரு கேவல் மாதிரி. தொண்டையை கிழித்துக்கொண்டு கிளம்பும் அலறல்கள். கத்திக்கத்தி ஓய்ந்து மெல்ல அழுகற சத்தமா மாறும். கொஞ்சம் தெம்பு வந்தவுடன் திரும்பவும் அந்த உச்சஸ்தாயில கேவல்.


                                  மொதல்ல கொஞ்சநாளைக்கு பக்கத்து வீட்டுக்காராங்க எல்லாரும் ஏதோ குடும்ப பிரச்சனைன்னுதான் நினைச்சாங்க. ஆனால் அந்த கதறல் சகிக்கமுடியாத அளவுக்கு போனபொழுது என்ன செய்ய இயலும்? கோபிண்ணாவை கூப்பிட்டு சொல்லிவைக்க ஆரம்பிச்சாங்க. உண்மையில் அவரைப்பார்க்கவும் திகைப்பும் என்னஏதென்று புரியாத குழப்பமும் நிரம்பிய முகமுமாகத்தான் தெரிந்தார். பல மருத்துவர்கள், பல ஊர்கள் பல ஆஸ்பிடல்னு சுத்திச்சுத்தி வைத்தியம் பார்த்தார். கொஞ்சகாலம் பாலக்காட்டுல அவங்கப்பாம்மா வீட்டுல விட்டுட்டு வருவார். எல்லாம் தற்காலிக நிவாரணம்தான். போய்விட்டு வந்த சிலநாட்களுக்கு நல்லா இருப்பாங்க. ஆனால் கொஞ்சநாள்லயே அந்த ராத்திரி கேவல்கள் பீரிட்டுக்கிளம்பும். கையறுநிலையில்தான் கோபிண்ணா. இரண்டு வருசம்கூட அவர் நிம்மதியாக வாழ்ந்தமாதிரி எங்களுக்கு தெரியலை. பாலக்காட்டுலயும் எப்பவும் கொண்டு விடமுடியாத நிலமை. அண்ணிக்கு அடுத்து ஒரு தங்கை. எல்லோரும் சேர்ந்து முடிவெடுத்து அண்ணியை கேரளால ஒரு ஹொம்ல கொண்டுவிட்டுட்டு வந்தாங்க. ஒரு வாரம்கூட முடியலை. மனைவியை இந்த நிலைமையில் விட்டுட்டு வாழத்தாங்காத கோபிண்ணா அவங்களை நானே பார்த்துக்குவேன்னு வீட்டுக்கே கூட்டிட்டு வந்துட்டாப்ல. எங்கம்மா ஒருமுறைபோய் துக்கம் கேட்டதுல “விடுங்கம்மா… நம்பி வந்துட்டா… எத்தனை கஷ்டம்னாலும் நானே பார்த்துக்கறேன்…”னு சின்னச்சலனம்கூட இல்லாமல் சொன்னதை கண்ணுகலங்கியபடி வந்து சொன்னாங்க. எங்க பொங்கல்ல இதை கொஞ்சகாலத்துக்கு சொல்லிச்சொல்லி மாய்ஞ்சோம்.






                                  வீடுகளுக்கு சுற்றுச்சுவர்கள் இருக்கின்றன அந்நியர் பிரவேசத்தை தடுக்க. கதவுகள் இருக்கின்றன பாதுகாப்புக்கு. சன்னல்கள் இருக்கின்றன காற்றோட்டத்துக்கும் வெளிச்சத்துக்கும். உண்மையில் கதவுகளும் சன்னல்களும் வீட்டின் ரகசியங்களை பொத்திப்பொத்தி பாதுகாக்கவே பயன்படுகின்றன. ஒவ்வொரு வீட்டினுள்ளும் சிலப்பல பகிரப்படாத சொல்லமுடியாத ரகசியங்கள். சில வீட்டோடு வீட்டாகவே புதைந்துபோகின்றன. சில மெள்ளக்கசிந்து திரிந்து பக்கத்துவீடுகளின் புறம்பேசலாக மாறுகின்றன. உண்மையில் குடும்ப ரகசியங்கள் குடும்பத்தில் உள்ளோருக்கே தெரிவதில்லை. தாளிட்ட வீட்டுக்குள் குடும்பரகசியம். அதனுள் கதவை ஒட்டிச்சாத்திய அறைக்குள் அவரவர் ரகசியம். இருகமூடிய மனசுக்குள் நமக்கே நமக்கான ரகசியங்கள். கோபியண்ணாவின் வீட்டில் அண்ணியின் அறைக்கதவுகள் எப்பொழுதுமே தாளிடப்பட்டிருந்தன. சன்னல்கள் திறக்கப்படவே இல்லை. ஐந்தாறு நைட்டிகள் மட்டுமே உடைகளாயிற்று. தலைமுடியை தானே பிடித்து இழுத்தபடிக்கு சுவரில் மோதிக்கொள்கிறார்கள் என்று கோபியண்ணாவே மாதமொருமுறை கத்தரியால் முடியை வெட்டிவிடுவார்.


                                  நான்கைந்து வருடங்களில் ஒரு பெண்ணால் ஐம்பது வயதின் முதிர்ச்சியை எட்டமுடியுமென்பது எங்களுக்கெல்லாம் அதிர்ச்சியாக இருந்தது. கந்தலாக வெட்டிய கிராப்போடு ஒட்டிப்போன உடலுடன் விலா எலும்புகள் துருத்திய அண்ணியை சிலமுறை உக்கிரம் குறைந்த பொழுதுகளில் கோபிண்ணா வாசலில் அமர்த்திவைத்தபடி பேசிக்கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன். அவரும் எல்லா வகையான மருத்துவங்களும் மாந்திரீகங்களும் விடாமல் முயற்சித்துக்கொண்டே இருந்தார். என்றாவது எப்படியாவது சரியாகிவிடாதா என்ற நம்பிக்கை. அவரவருக்கு அவரவர் வேலைகள் கவலைகள் தேடல்கள் மற்றும் ஓட்டங்கள். காலனி மக்களுக்கு பின்னிரவில் ஊளையிடும் நாய்களின் சப்தமும் ரவுண்ட்ஸ் வரும் செக்கூரிட்டியின் விசிலும் அண்ணியின் விட்டுவிட்டு கேட்கும் கேவல்களும் இரவுக்கென்ற ஒலிக்கூறுகளாக இயல்பாகிப்போனது. வேலைநேரத்தையும் வெளியுலக வாழ்க்கையையும் சுருக்கிக்கொண்ட கோபிண்ணாவிடம் ஒரே ஒரு மாற்றம்தான் தெரிந்தது. சன்னல்கள் பூட்டிக்கிடந்த வீட்டினை அடிக்கடிக்கு வெறித்தனமாக கழுவிமெழுகி சுத்தப்படுத்தியபடிக்கு இருப்பார். மொட்டைமாடி முழுவதும் நீர்விட்டு அடித்துக்கழுவுவார். இரும்பு கேட்டின் ஒவ்வொரு கம்பியையும் எண்ணைவிட்டு துணிசுற்றி துருபோக இழுத்தபடிக்கு இருப்பார். வீட்டைச்சுற்றிலும் உள்ள தென்னைமரங்களின் விழுந்த ஓலைகளையும் குப்பைகளையும் அள்ளி தெருமுனை குப்பைத்தொட்டியில் நிறைத்து அதில் தீவைத்து எரிவதை பின்னால் கைகட்டி வேடிக்கை பார்த்தபடி இருப்பார்.






                                  காலத்தின் ஓட்டத்தில் எங்கள் சங்கத்தில் ஆளாளுக்கு ஒருபுறம் சிதறிப்போயிருந்தோம். நல்லா படிச்சவன் படிக்காதவன் அனைவருக்கும் ஒரேஅழுத்தம்தான். எதையாவது செய்து சம்பாதிக்கனும். எனக்கான ஓட்டத்தில் சென்னையில் வந்து விழுந்திருந்தேன். அல்ட்ராசவுண்டு ஸ்கேனிங் மெசின்ஸ் சேல்ஸ் அண்டு சர்வீஸ் இஞ்சினியர். தமிழ்நாடு ஆந்திரா கேரளான்னு மூன்று மாநிலங்களுக்கும் ஊடாக மருத்துவமனைக்கிடையே ஓட்டமாக ஓடிக்கொண்டிருந்தேன். சம்பளத்தைவிட பயணப்படி மிக அதிகம். ஓரளவுக்கு தாராள காசுப்புழக்கம். மாதத்தின் பல இரவுகள் ரயில்களிலும் KPN பஸ்களிலும் கழியும். தூங்கப்பிடிக்காத வராதா பயண இரவுகள். நிலவொளியும் சாலைவிளக்குகளும் மாற்றிமாற்றி காலியான நெடுஞ்சாலைகளையும், வெறிச்சோடிய ஊரின் வீதிகளையும் இரவுநேர உலகத்தின் சலனங்களை சித்திரங்களாகவும் கதைகளாகவும் கண்கட்டு வித்தைகளாகவும் காட்டும் சன்னலோர பயணங்கள். கோவையின் வழியாக ஏதேனும் சேல்ஸ் விசிட் அமையும்போது மட்டுமே ஊருக்கு வந்துபோகும் வாழ்க்கை. அதை சாக்காக கொண்டே காலனில மீதம்கிடக்கிற நண்பர்களை சந்திக்கற நிலைமை. நானாவது பரவாயில்லை. தக்கிமுக்கி படிச்சதுக்கு கையில சில்லரையாவது புரண்டது. அஞ்சரை வருசமா தலையணை சைசுக்கு புத்தகங்களா படிச்சு மெடிக்கல் முடிச்ச முரளிக்கும் வெங்கிக்கும் ஒரு தனியார் மருத்துவமனைல அப்ரசண்டி டாக்டர் வேலைதான். அவங்களும் வெறும் MBBS போர்டுவைச்சா காலாம்பூராவும் 50ரூவாபீசு எண்ணியே ஓய்ஞ்சிருவோம்ற பயத்துல கிடைச்ச அப்ரசண்டி வேலைய மாசச்செலவுக்காச்சுன்னு ஒட்டிக்கொண்டு மருத்துவ மேல்படிப்புக்கான தகுதிப்பரிச்சைக்கு மாசக்கணக்கா படிச்சுக்கிட்டிருந்தானுங்க.


                                  சென்னையில் இருந்து கொச்சினுக்கு வேலையாக சென்றுகொண்டிருந்த நான் மக்களைப்பார்த்து நாளாச்சு என்று கோவையில் இறங்கிவிட்டேன். ராத்திரி ஒன்பது மணிக்கும் மேலாகத்தான் முரளியும் வெங்கியும் டூட்டி முடிச்சுட்டு வந்தானுங்க. வீட்டில் சாப்பிடவேணாம்னு ஹோப்ஸ் SKP மெஸ்சுல முட்டைபரோட்டா அடிச்சோம். அங்கனயே நான் ஒரு வாழைப்பழமும் கிங்ஸ்சும். அது சேல்ஸ்மேன்களின் இரவுச்சாப்பாட்டு முடிவுரை. பேசிக்கொண்டே வண்டிய எடுத்துக்கிட்டு வீட்டுக்குப்போக பிடிக்காம சங்க ஆபீஸ்ல பொங்கல் போடலாம்னு ஆஜர். போனவந்த கதைகளையும் போனவ வந்தவ சேதிகளையும் மாறிமாறி பேசிக்கொண்டிருந்தபொழுது அருகாமையில் கோபிண்ணாவின் குரல் கேட்டது.


                                  “என்னடா இன்னேரத்துல அங்க செய்யறீங்க?”


                                  “ஒன்னுமில்லண்ணே... ரொம்ப நாளாச்சு பேசிக்கிட்டிருக்கோம்”


                                  கால்வாயைத்தாண்டி வண்டிகளின் தடத்தில் மட்டுமே உருவான ஒத்தப்பாதையில் பார்த்தீனியச்செடிகளின் ஊடாக அண்ணன் நடந்து அருகில் வந்தார்.


                                  “நீ எங்கடா இங்க? சென்னைல இருக்கறதா சொன்னாங்க?



                                  “ஆமாண்ணே. சும்மா இன்னிக்கு ஊருக்கு வந்தேன்”


                                  “நீங்க என்னடா.. டாக்டருக்கு முடிச்சு ___ ஆஸ்பிடலுக்கு வேலைக்கு போறிங்களாம்?”


                                  ”ஆமாண்ணே… இப்பத்தான் டூட்டிமுடிச்சு வந்தோம்”



                                  இதன்பிறகு என்னாச்சோ கோபிண்ணாவே வெடுக்கு வெடுக்குன்னு பேசிக்கிட்டே போனாப்ல



                                  “என்னடா உங்க ஆஸ்பிடல்ல ஒரே வகைவகையா கேரளா குட்டிங்கதான் நர்சுங்களாம்?”



                                  “எல்லாத்துக்கும் பெரிய பெரிய காய்ங்களாம்ல? கின்னுகின்னுன்னு இருப்பாளுங்களாம்ல? வேலை பாக்கறப்பவே தனியா தள்ளிட்டுப்போயி நல்லா மேல பெனைஞ்சுவிட்டாலும் ஒன்னுமே சொல்லமாட்டாங்களாம்ல?!”



                                  ”ஈசியா செட் பண்ணி போட்றலாமாம்… நீங்களே அங்கன வைச்சே ஏகமா போடுவீங்கலாம்ல?”


                                  எல்லாம் ஒரே நிமிடம்தான். மங்கிய நிலவொளியின் வெளிச்சத்திலோ அல்லது சற்றுத்தள்ளி எரியும் ஃபவுண்டரி நேம்போர்டின் டியூப்லைட் வெளிச்சத்திலோ கோபிண்ணாவுக்கு எங்களின் அந்தக்காலத்திய கிரிக்கெட்டு விளையாடித்திரிந்த சிரார் முகங்கள் தெரிந்திருக்கக்கூடும். அந்த ஒரு கணத்தில்தான் நாங்களும் அவரது உள்ளுலகத்தில் இருந்து தவறி வெளிவிழுந்த ஒரு ரகசிய முகத்தினை கண்டிருக்கக்கூடும்.


                                  சட்டென்று பேச்சை முடித்த கோபிண்ணா “நேரமாவுது… சீக்கிரம் போய்ப்படுங்கடா… வீட்டுல திட்டப்போறாங்க...” என்று சொல்லியபடியே திரும்பி விருவிருன்னு நடந்து வீட்டை அடைந்து கேட்டைத்திறந்து உள்ளேபோய் மறைந்தார்.



                                  நாங்கள் மேற்கொண்டு எதுவும் பேசிக்கொள்ளவில்லை. நிலவொளியில் வேப்பமரத்தின் நிழல் பிசிறுபிசிறாக விழுந்த தெருவிளக்கின் மஞ்சள் ஒளிபோர்த்திய சன்னல்கள் சாத்தப்பட்ட அவரது வீட்டையே பார்த்தபடி நின்றிருந்தோம்.

                                  என் பேச்சுமொழியும் பிழைப்புமொ(வ)ழியும்

                                  $
                                  0
                                  0



                                  • என் தாய்மொழி தமிழ். அதாவது என் நினைவுதெரிந்த நாளில் இருந்து எங்கள் வீட்டில் அனைவரும் பேசும் மொழி. 
                                  • பன்னிரெண்டாம் வகுப்பு வரைக்கும் தமிழ்வழிக்கல்வி. அதிலும் ஒன்பதாம் வகுப்புவரைக்கும் அரசுப்பள்ளிதான்.
                                  • ஆங்கிலம் கல்லூரி முடியும் வரைக்குமே கோர்வையாக பேசவராது. தக்கிமுக்கி முதல் ஆண்டு எழுதிப்பழகினாலும் கடைசிவருடம் முடிக்கையில் 35 மதிப்பெண்கள் வாங்கி தேறும் அளவுக்காவது கோர்வையாக வந்திருந்தது. 
                                  • முதல்வகுப்பில் தேறினாலும் முதலில் கிடைத்தது விற்பனை பிரதிநிதியாக மருத்துவ உபகரணங்கள் விற்கும் வேலைதான். கூச்சமும் பிரத்தியாரிடம் பழகுவதற்கும் கூச்சம் சிறிதளவுக்கேனும் நீக்கியது இந்த வேலைதான். 
                                  • இந்த வேலையில் நான்கு மாநிலங்களுக்குள் இரண்டுவருடங்கள் இரவுபகலாக அலைந்திருக்கிறேன். நெல்லூர் மங்களூர் திருநெல்வேலி கொச்சின் நகரங்களில் நான் தமிழும் உடைந்த ஆங்கிலமும் கொண்டுதான் நிறைய உபகரணங்களை பலமாநில மருத்துவர்களிடம் விற்றிருக்கிறேன். எந்த இடத்திலும் மொழிப்பிரச்சனையால் பெரிய பிரச்சனைகள் ஏற்பட்டதில்லை. சில வேடிக்கையான குழப்பங்கள் மட்டுமே நடந்ததுண்டு ( கேரளாவில் எடப்பால் செல்வதற்கு பதிலாக எடப்பள்ளி சென்று ஒரு ஆட்டோபிடித்து இல்லாத முகவரி தேடி அரைநாள் அலைந்ததுண்டு. கடைசியில் கண்டுபிடித்தது எடப்பள்ளி எடப்பாலில் இருந்து 5 மணி நேர பயணம்! ) 
                                  • உடைந்த ஆங்கிலம் ஆரம்பகாலங்களில் சிலநேரங்களில் தாழ்வுமனப்பான்மையை ஏற்படுத்தியதுண்டு. வேலையில் முன்னேற்றங்கள் தடைப்பட்டதற்கு காரணம் என் உள்ளொடுங்கித்தனமும் தாழ்வுமனப்பான்மையும் தானே தவிர ஆங்கிலமல்ல என புரிய சிலவருடங்கள் ஆனது.
                                  • இடையறாத (!?) அலைச்சலின் விளைவாக பெற்ற அல்சரை காரணமாகக்கொண்டு ஒரு மொக்கை கம்பியூட்டர் கோர்ஸ்படித்து ஐடிவேலையில் சேர்ந்து 16 ஆண்டுகள் ஆகின்றது. 
                                  • நான் தொழில்முனைவோன் இல்லை. ஐடியில் இருப்பதும் நல்ல சம்பளத்திற்காகத்தான். 16 ஆண்டுகளில் மஸ்கட், தென்னாப்ரிக்கா, போட்ஸ்வானா, ஸ்காட்லாந்து, அமேரிக்கா ஆகிய நாடுகளில் கோபால் பல்பொடிபோல வேலைபார்த்திருக்கிறேன். கை நீட்டி சம்பளம் வாங்கும்வரைக்கும் என் வேலை என் பிழைப்புக்குத்தான். என் பிழைப்புவாதத்திற்கு இதுவரைக்கும் உதவிக்கொண்டிருப்பதால் ஆங்கிலம் என் பிழைப்பு மொழி 
                                  • ஆங்கிலப்புத்தகங்களை படிக்கும் திறனையோ ஆர்வத்தையோ வளர்த்துக்கொள்ளவில்லை. ஆனால் அலுவலகரீதியாக மணிக்கணக்காக பேசவும் பக்கம்பக்கமாக எழுதவும் முடியும். இத்தனை ஆண்டுகளில் என் ஆங்கிலம் பிழைப்புக்கு ஏற்றபடி சீர்பட்டிருக்கின்றதே தவிர நாட்டுக்கேற்றபடி உச்சரிப்பு மாறியதில்லை. தெரிந்துகொண்டது, பலவகை உச்சரிப்பை அலுவலக ரீதியாக எந்த நாட்டினரும் திறமைக்குறைவாக கண்டதில்லை. நிறுத்தி நிதானமாக சிறுசிறு வாக்கியங்களாக பதற்றமின்றி பேசுவது என்பது மிக அதிகமான புரிதலையும் தகவல் பரிமாற்றத்தினையும் அளிக்கிறது என்பது உணர்ந்தது.
                                  • ஐடி துறையில் என் வளர்ச்சி சீரானதல்ல. அவ்வப்போது தடைப்பட்டதுண்டு. முன்னேற்ற வாய்ப்புகளை இழந்ததுண்டு. ஆனால் இதற்கு காரணம் என் தன்னார்வமும் அர்பணிப்பும் இன்மையே அன்றி என் ஆங்கிலமோ ஹிந்தியோ தெரியாமை அல்ல. 
                                  • உலகமயமாக்கலில் பலநாட்டு மக்களுடன் வேலை செய்ததில் உணர்ந்தது அவர்கள் உச்சரிப்பு நம் உச்சரிப்புக்கு மேலோ கீழோ அல்ல. உச்சரிப்பில் இருக்கும் ஏற்ற இறக்கங்களை யாரும் ஒருபொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. பன்னாட்டு ப்ராஜெக்ட் ஒன்றில் "I don't understand your English, WTF you are blabbering?"என கருத்துரைத்த அமெரிக்க மேலாளார் ஒரேநாளில் பன்னாட்டு ப்ராஜெக்ட் நடத்தும் திறமையில்லை என மாற்றப்பட்ட நிகழ்வை கண்டதுண்டு. 
                                  • ஆனால் பலமாநில இந்திய மக்களுடன் சேர்ந்து வேலைசெய்யும் வாய்ப்பு எப்போதும் இருந்ததுண்டு. அலுவலக சந்திப்புகளிலும்கூட பலநேரங்களில் பேச்சு வெகு எளிமையாக ஹிந்திக்கு தாவுவதுண்டு. ”மன்னிக்கவும், எனக்கு ஹிந்திதெரியாது. திரும்பவும் ஆங்கிலத்தில் சொல்கிறீர்களா?” எனக்கேட்கும் முதல் தருணத்திலேயே பெரும்பாலோர் ஆங்கிலத்துக்கு மாறிவிடுவர். மிகச்சிலரே வேண்டுமென்றே ஹிந்தியில் விடாப்பிடியாக தொடர்வதும் அவகளுடன் பேச்சுகள் தவிர்க்கப்பட்டதும் நடந்ததுண்டு. பதிலுக்கு தொடர்ச்சியாக தமிழில் பேசி கடுப்பேற்றும் விளையாட்டும் செய்ததுண்டு ஆனால் வேலையை பாதிக்கும் அளவுக்கு இந்த ஹிந்தி விளையாட்டுகள் நடந்ததில்லை. கடைசியில் பிழைப்புமொழி ஆங்கிலம் மட்டுமே வெற்றிபெறும். 
                                  • இப்பவும் மிகநெருங்கிய நண்பர்களாக மலையாளி தெலுங்கு இந்தி நண்பர்களே அதிகம். ஒத்த அலைவரிசையிலும் புரிந்துணர்விலும் மட்டுமே வளர்ந்த வளர்த்த நட்புகள் இவை. வேடிக்கையான மொழித்தகராறு கிண்டல் சீண்டல்களை தவிர வேறெந்த சண்டையும் தடங்கல்களும் மனப்பிணக்குகளும் வந்ததில்லை. சிரிப்பும் கும்மாளமுமாய்த்தான் உடைந்த ஆங்கிலத்தில் பிணைந்துகொள்கிறோம். ( ”டேய் கொல்ட்டிகளா.. ஏண்டா இப்படி அமெரிக்கா வந்தும் ஃபேக் ரெஸ்யூம் போடும் அல்பையா இருக்கீங்க?” ”போடே.. நாங்க அல்பைன்னாலும் ஒருத்தரையொருத்தர் தூக்கிவிட்டுக்கறோம். நீங்க ரொம்ப டீசெண்ட்டா இருந்து ஒருத்தரையொருத்தர் காலை வாரிக்கங்க!” ) 
                                  • என் மகனுக்கு இங்கே வரும்வயதில் Yes No மட்டுமே சொல்லத்தெரியும். வீட்டில் எப்பொழுதுமே தமிழ்தான். பள்ளியில் சேர்த்த பொழுதும் அவர்கள் அறிவுருத்தியது வீட்டில் தாய்மொழியையே தொடருங்கள் என்பதும் ஆங்கிலம் சமூகமொழி மிக எளிதாக வசப்படும் என்பதும். இப்பொழுதெல்லாம் என் மகனும் மகளும் ஆளுக்கேற்றபடி மொழியை மாற்றியே பேசுகிறார்கள். வீட்டில் தமிழ், என் நண்பர்களுடன் இந்திய உச்சரிப்பில் ஆங்கிலம். அவர்கள் பள்ளி நண்பர்களுடன் அமெரிக்க உச்சரிப்பு ஆங்கிலம் என. தமிழ் எழுதப்படிக்கவும் பயிற்சி. 
                                  • ஒரு தொழில்முனைவோனாக தமிழ்நாட்டில் இருந்திருந்தால் அதற்கு ஹிந்தி கற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் இருந்திருந்தால் எப்படி வேலைக்காக ஆங்கிலம் சரளாமாக எழுதவும் பேசவும் கற்றுக்கொண்டேனோ அதுபோல் தயக்கமின்றி ஹிந்தியையும் கற்றுக்கொண்டிருப்பேன். அந்த தேவையும் அவசியமும் ஏற்படவில்லை. கற்றுக்கொள்ளவும் இல்லை. இழப்பு என்றும் ஏதுமில்லை. எப்படி தெலுங்கும் கன்னடமும் கற்றுக்கொள்ள அவசியம் ஏற்படவில்லையோ அதுபோலவே! 
                                  • என் சமூக வாழ்வுக்கு என் தமிழும் இந்திய உச்சரிப்பு ஆங்கிலமும் போதும். என் பிழைப்புக்காக வேறெந்த மொழியையும் கற்றுக்கொள்ளும் அவசியமோ தேவையோ இல்லை. யாரேனும் கட்டாயப்படுத்தினால் அதை புறக்கணிக்கும் திறமும் விருப்பமும் உண்டு. எந்த அரசியல் ஒருமுகத்தன்மை திணிப்புக்காகவும் பன்முகத்தன்மையில் என் ஒருமுகத்தை இழக்கத்தயாரில்லை. விருப்பமும் இல்லை. 
                                  • தமிழ்நாட்டைத்தவிர அனைத்து மாநிலங்களிலும் ஹிந்தியை ஏற்றுக்கொள்கிறார்கள் பேசுகிறார்கள் படிக்கிறார்கள், நீங்கள் மட்டும்தான் அடாவடி என்றால் இருந்துவிட்டு போகட்டுமே. மும்பை உட்பட பல மாநிலங்களில் பொருட்கள் விற்பதற்கு ஹிந்தி தெரியாமை தடையாக இருந்ததில்லை. துணியோ துவரம்பருப்போ விற்று வாங்குபவர்களுக்கு ஹிந்தி தேவையெனில் அவர் பிழைப்புக்கும் வாழ்வுக்கும் உதவுமெனில் அதை கேலிபேசவும் தடுக்கவும் எனக்கு விருப்பமில்லை. உரிமையும் இல்லை. கொள்கைபேசி முழங்குவதை காட்டிலும் ஒரு பிழைப்புவாதியாக மற்றவர் பிழைப்பை இழிவாகப்பேசுவதை தவிர்ப்பதை உயர்வானதாக கருதுகிறேன். 
                                  • ஹிந்தியை தேசியமொழியாக்க மாநிலங்கள் அளவில் கட்டாயப்படுத்துவது தேவையற்றது. என் வாழ்வுக்கும் பிழைப்புக்கும் தேவைப்படாத வரையில் நான் அதை கற்றுக்கொள்ள மாட்டேன். திணிப்பை என்னளவில் புறக்கணிக்கிறேன். 

                                  எட்றா வண்டியெ - வா.மு.கோமு

                                  $
                                  0
                                  0




                                  வா.மு.கோமுவின் புத்தகத்தை படித்துவிட்டு மனுசன் மனசுக்குள்ள அவரு பேனாவ உட்டு ஆட்டிட்டாப்லன்னு சொல்லி சிலாகிக்கறதும் வாழ்க்கைல சோக்களிகளோட மொத பீருக்கு அப்பறம் இதான் மப்புதூக்கறதான்னு தெரியாம அலங்கமலங்க கொஞ்சகணம் மெதப்புல இருக்கயில மப்புன்னா சூப்பர்தாம்லன்னு சொல்லறதும் ஒன்னுதான். ரெண்டுமே மொதமொதல்ல காணாததை கண்டுட்ட பிரமிப்பாத்தான் அனுபவிக்கயில தெரியும். வெளில சொல்லி அந்த சொகத்த எப்படி வெளக்கறது? சொல்லதேவையும் இல்லீல்ல? இருந்தாலும் அந்த திருட்டு சொகத்தை, தப்பை மறைச்சு செய்யற த்ரில்லை, நாசூக்கு மசிருமட்டைன்னு ஏதுமில்லாம தேங்காயொடச்ச மாதிரி சொல்லற நேர்மைய நாம அனுபவிக்கறதை கொஞ்சமா வெளீல சொல்லி பீத்திக்கறது தப்பில்லங்கறதால இந்த ரெண்டு பத்தி...


                                  நாவல்னுதான் அட்டைல போட்ருக்காப்ல.. எனக்கென்னவோ பன்ணெண்டு சிறுகதைகள எழுதிவைச்சுட்டு வரிசைய மாத்திமாத்தி எந்த பத்திரிக்கை அனுப்பலாம்கற கொழப்பத்துல எல்லாஞ்சேத்தி ஒரு புக்கா போட்டுட்டாப்லனுதான் படிக்கயில தோனுச்சு. எந்த அத்தியாயத்துல ஆரம்பிச்சு படிச்சாலும் தனிக்கதைதான். மொத்தமா படிச்சா நாவல்மாதிரிதான் தெரிது. எல்லாகதைலயும் சாமிநாதன் வர்றாப்லங்கறதும் அல்லது எல்லாக்கதைலயும் சாமிநாதன் வரமாறியே எழுதுனாப்டியும் இருக்கறதால சாமிநாதனின் வரலாறுன்னு நினைச்சு படிச்சுக்கலாம்தான். ஊடால ஊடால சாதி ஒடுக்கம், அழுக்கு, பொருளாதாரம், பொழப்பு, செல்போனு, பொண்ணுன்னு களிமண்பொம்மைக்கு கைகாலு ஒட்டவைச்சதா இல்லாம பரோட்டாவுக்கு மாவுபெசயற மாதிரி நல்ல பெனைஞ்செடுத்ததுல இவை எதுவுமே துறுத்திக்கிட்டே தெரில. ஆரம்பத்துல கவுண்டமாரு எப்படி தாழ்த்தப்பட்டவங்களை அமுத்தறாங்கறமாதிரி சொன்னாப்டி இருந்தாலும் ச்சும்மா பார்த்ததுக்கே கையக்கால வாங்குன ஆளா இருந்தவிங்க காலப்போக்குல நீதிநியாயம் பார்த்து சும்மாக்கெடந்த சாமிநாதன கெளப்பியுட்டவ கவுண்டச்சின்னு தெரிஞ்சு கவுரவமா அவளை கொளத்தியுடறதை சொல்லறப்ப அவ்வளவு நீதிநியாயம் பார்த்தா இப்பெல்லாம் சாதி பார்க்கறாங்கனு கருக்குன்னுச்சு.


                                  அதுக்கப்பறம் கதை மடைமாத்தி சாமிநாதனுக்கு வாழ்க்கைல கெடச்ச பல்புகளை அத்தியாயமா சொல்லிக்கிட்டே போறப்ப நமக்கும் நம்மை அடையாளப்படுத்திக்க நெறய சான்சுக படிக்க கெடைக்கறதால கதைல ஈசியா ஒட்டிக்கமுடியுது. சாமிநாதன் ஒரு குழப்பவாதி, அம்மா கூட இல்லாதவன். தறிக்குப்போயி கஷ்டப்பட்டு சம்பாரிச்சாலும் குடிக்கு குறைவில்ல. கோட்டருக்கு மகனை சார்ந்திருந்தாலும் பாசத்துல தாங்கும் அப்பா, கூட்டாளி, கூட்டாளியின் அம்மா சரோஜாக்கா, தறிக்குபோற புள்ளைங்க, லவ்வு, கல்யாணம், செல்போனு கலாச்சாரம்னு எல்லாருக்கும் நடக்கறதுதான். நடக்கறதை நடந்ததை அப்படியே தோப்புல கயித்துக்கட்டில ப்ரெண்டுக நாலுபேத்தோட சாயங்காலமா லுங்கிய ஏறக்கட்டிக்கிட்டு சாஞ்சாப்புல குப்புறடிச்சாப்புல நாம கதைகேக்கறமாதிரியே எழுதறது கோமுவின் திறமைதான். இருந்தாலும் இந்த சாமிநாதன் எங்க ஒருபடி தூக்கலா தெரியறான்னா அவனுக்குள்ள ஒளிஞ்சுவெளியாடும் தண்ணிபோட்டா பொங்கிவழியும் சுயபச்சாதாபம்தான்னு எனக்கென்னவோ தோனுச்சு. பதின்மத்துல கோட்டைவிட்டதுக்கெல்லாம் பச்சாதாபத்துல நொந்து நூடில்ஸ் ஆனவனுங்களுக்கு ஒவ்வொருமுறையும் சாமிநாதன் காதல்னு கெளம்பி வாயக்கொடுத்து சூத்த புண்ணாக்கிட்டு வரும்போது அடடே நம்பாளுன்னு சிரிப்புதானே கெளம்பும்? எனக்கும் ஒவ்வொரு அத்தியாயம் கடைசிப்பத்தி படிச்சுமுடிச்சதும் நெலக்கொள்ளாத சிரிப்புத்தான் அம்மிக்கிச்சு. சிரிச்சுக்கிட்டே திரும்பவும் இந்தாளு எங்கெல்லாம் வரிக்கு நடுவால வெடிவச்சிருக்காப்டின்னு இன்னொருக்கா சுருக்கா தேடறது ஒரு சுகம்.


                                  போனவருசத்தின் மிகச்சிறந்த ரசனைக்குரிய படமாக அட்டக்கத்திய சொல்லுவேன். அதுக்கும் இந்த புதினத்துக்கும் நெறைய தொடர்பு. ரெண்டுமே பல்பு வாங்குற கதைதான். ஆனா படம் காதல்தோல்விய வலியாச்சொல்லாம சிரிச்சாப்டியே சொன்னாப்டி இருக்கும். ஆனா க்ளைமாக்ஸ்ல ஒரு அந்த ஏமாத்தத்தின் துயரம் படீர்னு மூஞ்சுல அறைஞ்சி அழவைச்சிடும். பயக வெடுக்காளியா சுத்தறதெல்லாம் வேசம்தான். மப்புபோட்டா மட்டும் அழுவறதுகூட மனம் கரையறதாலதான். ஆனா பதின்மத்துல எதிர்பால் தேடுதல்கொண்ட, கெம்பீரமோ வசதியோ தண்டியோ கவர்ச்சியோ உடல்வாகோ மெச்சூரிட்டியோ இல்லாத ஒருத்தன் உள்ள படற அவஸ்தையும் அதை ஈடுகட்டிக்க வெளில காட்டிக்கற அலப்பரையும் இரண்டுமே அவலம் மிகுந்தது. அந்த அவலத்த ஆசிட்டுமாதிரி குடிச்சுக்குடிச்சு தெளிஞ்சு ஒரு புள்ளய கட்டி குடும்பம்னு செட்டாவறதுக்குள்ள ஆம்பள படற தவிப்பை நேர்மையா சொன்னபடம் அட்டக்கத்தி. என்ன தவிர்க்கமுடியாத சினிமாஜிகினாக்களை ஒரு டைரக்டரு மொதபடத்துக்கு வியாபாரகாரணங்களுக்கு சேர்த்துக்கத்தான் வேண்டியிருக்கு. அதிலும்கூட துருத்தாமத்தான் நடுக்கடலுல கப்பலையிறங்கி தள்ளியிருப்பாப்ல ரஞ்சித்.


                                  ஆனா ரஞ்சித்துக்கு எல்லாத்தையும் சினிமாவுல காட்டமுடியாத சுதந்திரம் கோமுவுக்கு உண்டு. எழுத்துல படிக்கயில நச்சுன்னு மண்டைலயும் மனசுலயும் இறக்கும் சுதந்திரம்தான். அந்த வரிகளை நாசுக்காகவும் பூச்சாகவும் சொல்லாம சொல்லறமாதிரியும் அருவருப்பில்லாமயும் நாகரீகமாய் வேற வார்த்தைகளைப்போட்டு எழுதிவிட முடியும்தான். ஆனா சொல்லவந்ததை இப்படி செத்துப்போன மிருகத்தை பாடம்பண்ணி காட்டறமாதிரி இல்லாம உயிர்ப்போட சொல்ல அந்த பூச்சுகளற்ற வார்த்தைகளே எங்கேயும் துருத்தாமல் இயல்பாய் நிற்கின்றன. 


                                  இதுலயும் மொதரெண்டு அத்தியாயம் தவிர வேறெங்கும் சாதியழுத்தத்தை திணிக்கலை. வரிகளுக்கிடையில் உணர்ந்துக்கறது நம்ப பாடுதான். நம்ம சாமிநாதனுக்கு பாருடா இப்படில்லாம் ஆயிருச்சுன்னு கோமு சொல்லிக்கிட்டே போறாப்ல. நாமும் அவருக்கூடவே பத்திக்கு பத்தி ஊங்கொட்டிக்கிட்டே படிச்சுக்கிட்டே போறம். முடிவுல கெரகம் கதைய முடிச்சேபோடனும்னு போடான்னு கடைசில கட்டுன பொண்டாட்டு ஒரே வாரத்துல விரல்படாம ஊடுவிட்டு ஓடயில நமக்கும் அந்த அவலம் பத்திக்கிதுதான். ஆனா கோமு நாலு கோட்டர சேர்த்தடிச்சுட்டு ரயில்வே கேட்டுல உழுந்துசெத்தான்னு எழுதியிருக்கலாம். இல்லைன்னா அடுத்த செல்போனு நம்பரு தேடிக்கிட்டான்னு சொல்லியிருக்கலாம். இதெல்லாம் இல்லாம சரக்கடிச்சுக்கிட்டு மப்புல சினிமாப்பாட்டா பாடி சரோஜாக்காவை முத்தங்குடுக்கறாங்கறது எல்லாம் ராத்திரியெல்லாம் நடக்கும் கூத்துல கிழக்கால வெளுத்து விடியறது பார்த்து கூத்தை முடிச்சுத்தொலயனும் கொஞ்சம் தம்கட்டி கூவுடியம்மான்னு நல்லதங்காளை வாத்தியக்காரனுக சேர்த்தடிச்சு கெளப்பறமாதிரிதான் இருக்கு. இருந்தாலும் என்ன? கோமுவின் கதை. அவர் இஸ்டம். அவர் முடிவு.


                                  கள்ளி, தவளைகள் குதிக்கும் வயிரெல்லாம் முன்னாடியே படிச்சவந்தான். அதிர்ச்சி கொடுக்கற மூஞ்சுல அறையற வரியெல்லாம் படிச்சு பழகிட்டந்தான். குத்தவைச்சு காதுல கோழியெகுட்டு கொடயறமாதிரி சொகமா கத சொல்லயில எவ்வளவுவேனும்னாலும் அலுப்பில்லாம கேக்கமுடியும்தான். ஆனா இந்த புத்தகத்துல ஒரு மகா சிறப்பிருக்கு. அது ஏழாம் பத்தி “ஏய், நாஞ்சொல்லறத கேளு!”


                                  செல்போனு மட்டும் விசயமங்களம் எட்டியிருக்காட்டி கோமு எதவச்சு கதையெல்லாம் எழுதியிருப்பாப்டின்னு சிலசமயம் தோணும். ஆனா சிலாகிக்கும் மேட்டரு செல்போனல்ல. இந்த ஏழாவது அத்தியாயம் இருக்கே! அடடா... கொழம்பித்தவிச்சு சுத்தியிருக்கறவங்களையெல்லாம் ஒழப்பு ஒழப்புன்னு ஒழப்பி கடலபோடற புள்ளகிட்டக்கூட தெளிவாபேசுறேன்னு முன்னக்கி பின்னவும் மேலுக்கு கீழும் நாய்க்கு வாலுல டப்பிய கட்டியுட்டு அது ஒடோடுன்னு ஓடி ஓஞ்சுபோயி நெனவும் தெளிவுமா அப்பப்ப கெளம்பி மறுபடி வெருண்டு ஓடறமாதிரி மனசு ஒருகாலத்துல ஆம்பளப்பயகளுக்கு வாய்ச்சே தீரும். நம்பளை நாலுபேரு மதிக்கனும்னு தோனும். ஆனா நம்பமேல மரியாத நமக்கே இருக்காது. எல்லாருக்கும் புடிச்சாமாதிரி இருக்கனும்.ஆனா நமக்கே நமக்கு புடிக்காது. பெருசா ஏதாச்சும் செய்யறாப்டியே காட்டிக்க தோணும். ஆனா செய்யறதுக்கு ஒரு மசுரும் இருக்காது. பவுடரடிச்சு டக்கின்னு செஞ்சுக்கிட்டு பவுசா போனாலும் உள்ள இருக்கற சுடர்மணில இருக்கற ஓட்டைய எல்லாரும் பார்க்கறமாதிரியே இருக்கும். புடிக்காத புள்ளயா இருந்தாலும் விட்டா இதுவுங்கெடைக்காம போயிருமோன்னு ஜவ்வாட்டம் நல்லவன்னும் கெட்டவன்னும் மாறிமாறி போக்குக்காட்டி சொல்லறதெல்லாம் அந்த புள்ளயும் நம்பிட்டுதான் கேக்குதுங்கற நெனப்புல மேலுக்குமேலும் ஒளரிக்கிட்டே இருக்கற பேச்சு ஒன்னு இருக்குதே. அதை எந்த எழுத்துலயும் கொண்டு வந்துற முடியாது. ஒருத்தரு கொண்டுவந்துட்டாப்புலன்னா அந்தாளு பேனா நேரா நம்ப நெஞ்சுக்குள்ள பூந்து ஆட்டமா ஆடிருச்சுன்னு அர்த்தம். 16 பக்க அதகளம் அது!

                                  எனக்கென்னவோ புத்தகத்துக்கு கொடுத்த நூத்தியிருவது ரூபாயும் இந்த அத்தியாயத்துக்கு மட்டுமே சரியாப்போயிருச்சுன்னு செம சந்தோசம்தான். அந்த ஒரு அத்தியாத்துலயும் நாம நம்பள கண்டுக்கலைன்னா இன்னமும் நமக்கு சுயத்துல வளர்ச்சி பத்தலைன்னு அர்த்தம்!

                                  இத்தன சொன்னியே.. இந்த கதைல வர புள்ளைங்கள பத்தி ஏம்யா ஒன்னுமே சொல்லலையேன்னு கேக்கறீங்களா? கோமுவின் கதைப்பெண்கள். அதுல எனக்கு அந்த கருங்கொரங்கு மல்லிகாவை ரொம்ப புடிச்சிருக்கு :)

                                  மாதொருபாகனும் இணைய இந்துத்துவ எதிர்ப்பும்

                                  $
                                  0
                                  0

                                  சென்னையில் வேலை பார்த்த காலத்தில் எனக்கொரு அலுவலக நண்பர் இருந்தார். சென்னையிலேயே பிறந்து சென்னையிலேயே வளர்ந்தவர். பள்ளி கல்லூரி சுற்றுலாவுக்கு சிலவெளியூர்கள் சென்றுவந்ததோடு சரி. சொத்தங்களும் வேலூர். கல்லூரியும் சென்னையை ஒட்டி. பேசுவதெல்லாம் சென்னை மற்றும் அதன் உயர்வுகள் பற்றியே இருக்கும். அவர் பார்வையில் கோவை மதுரையில் இருந்து வேலைக்கு சென்னை வந்த நாங்களெல்லாம் ஏதோ பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் என்றே எண்ணம். எங்கள் வாழ்க்கைமுறைகள் எதுவும் அவருக்கு தெரியாது. அறிந்துகொள்ளும் ஆர்வமுமில்லை. பொள்ளாச்சி எனில் மசக்கவுண்டனுங்க வேட்டியும் பெண்கள் கண்டாங்கியும் கட்டிக்கொண்டு வாழ்பவர்கள் என்கிற சினிமா கொடுத்த சித்திரம் தவிர வேறு அறியாதவர். கூட வேலைபார்த்த நண்பரின் திருமணத்திற்கு என அனைவரும் ஈரோட்டுக்கு கிளம்பினோம். ஏற்காடு எக்ஸ்பிரஸ் சென்று சேரும்வரை அவருக்கு புது ஊரைப்பார்க்கும் ஆர்வம் தாளவில்லை. எங்கேயோ கேள்விப்பட்ட ஈரோடுபோய் திருச்சிவரு ஜோக்கையெல்லாம் சொல்லிக்கொண்டு வந்தார். ரயில் நிலையத்தில் இறங்கி பஸ்ஸ்டாண்டு ஒட்டிய லாட்ஜில் அறையெடுத்து செட்டிலாகி மண்டபத்துக்கு போக ரெடியாகிக்கொண்டிருக்கும் பொழுதில் நண்பர் வியந்துபோய் சொன்னது. "யோவ்.. இந்த ஊர்லகூட ரோட்டுல சிக்னலெல்லாம் இருக்குய்யா.."அவரை மேலும் கீழும் நாங்கள் பார்த்த பார்வை இருக்கிறதே. என்னாத்தை சொல்ல?



                                  நம் நண்பர்களுக்கே வருவோம். சுரேஷ்கண்ணன் சுப்ரமணியபுரம் பற்றிய கட்டுரையில் அந்தக்கால மதுரை டவுன்பஸ் பெயிண்ட் அடிக்காத அலுமினிய பாடியில் பளபளவென்று இருந்ததை ஒரு குறையாக எழுதியிருந்தார். சென்னைக்கு வெளியே ஏறக்குறைய எல்லா நகரங்களிலும் நகருக்குள் ஓடும் டவுன்பஸ்கள் அப்படித்தான் இருந்தன. கோவையில் இன்றும் அப்படித்தான் இருக்கிறது. அவரது தெரியாமை இயக்குனரின் குறையாக எழுதவைத்தது. மாதொருபாகன் ஓவர் முற்போக்கு உடம்புக்கு ஆகாது என்பது லக்கியின் கூற்று. இரு பக்கங்களில் உள்ள வரிகளில் சிலதுமட்டும் எடுத்துக்காட்டி தான் புத்தகம் முழுதாய் படிக்கவில்லை என்பதையும் சுட்டியபடி. அவராவது பத்திரிக்கையாளர். வாசகரின் எதிர்பார்ப்புக்கும் சந்தை தேவைக்கும் ஏற்ப கட்டுரைகள் உருவாக்குபவர். அன்றைய காலக்கட்ட தேவைக்கு ஏற்ப சார்புநிலையில் எழுத காரணமுண்டு என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் கறாரான கருத்துக்களை யாரைப்பற்றியும் கவலைப்படாமல் முன்வைக்கும் மாமல்லன் கூட தெரிந்தெடுத்த சில பக்கங்களை மட்டும் கொண்டு அதிர்ச்சிமதிப்பீடுக்காக இந்த நாவல் சாரமில்லாத தட்டையான செய்யப்பட்ட ஒன்று என்று முன்முடிவுவோடு அறிவித்தே விட்டது வருத்தமாக இருக்கிறது.



                                  நமக்கு தெரிந்தவரையில் நம் பார்வைக்கு எட்டியவரையில் நம் புத்திக்கு தெளிந்தவரையில் நம் மனதுக்கு உணர்ந்தவரையில் என சில வரையரைகள் உண்டு. அதைக்கொண்டு அதன்மேலாக அனைத்தையும் கற்க பகுத்தறிய உணர முயலலாம்தான். சில வாசல்கள் திறக்க வாய்ப்புண்டு. ஆனால் நமக்கு தெரிந்தது மட்டுமே உண்மை நம் கண்களுக்கு தெரியும் மற்றதெல்லாம் வெற்று என வாதிடவும் நிரூபிக்கவும் முயலும் போதுதான் மற்றவர் பார்வையில் நாம் நம் மதிப்பினை இழக்கிறோம்.






                                  பெருமாள்முருகன் மீது மிகப்பெரிய மரியாதையும் மதிப்பும் உண்டு. சில இணையக்கட்டுரைகள் மூலமாக தெரியவந்து பீக்கதைகள் புத்தகம் வழியாக அவரை வாசிக்க ஆரம்பித்தது. எல்லா யோனி மதன புணர்ச்சி கவிதை கதைகளைப்போல இவரும் ஒரு அதிர்ச்சி மதிப்பீட்டுக்காக பீக்கதைகள் என எழுதி பெயர்வாங்க பார்த்திருக்கார் எனவே ஆரம்பதில் அசூசையுடன் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் ஒவ்வொரு கதை முடிவிலும் அவர் சொல்லாமல் விட்டுச்சென்றது வெறும் சிலநிமிட அதிர்ச்சி அல்ல. அடிவயிற்றை கவ்வும் அவலம். முதல் கதையிலேயே கிராமத்தில் இருந்து நகரத்துக்கு வந்து வீட்டு ப்ளாட்டினுள்ளேயே பாம்பே கக்கூசு இருக்கும் வாழ்க்கையில் திங்கற செய்த சோறெல்லாம் அந்த கக்கூசு அகோரப்பசியில் வாய்பிளந்து விழுங்கிக்கொள்வதாய். இன்னொரு கதையில் கிராமத்தில் இருந்து வேலைக்கு நகர நகராட்சி கழிப்பிடத்தில் சேர்த்திவிடப்படும் சிறுவன் ஆரம்பத்தில் அரற்றி பின்பு கொஞ்சம் கொஞ்சமாய் அந்த நாற்றமும் அருவருப்பான வேலைக்கு பழகிக்கொள்ளும் காலத்திணிப்பு. சீக்கிரம் ஆவட்டுண்ணே என குரல்கொடுத்துக்கொண்டே கதவுகளை தட்டியபடிக்கு தண்ணீர் ஊற்றி காசு வசூலிக்கும் வாழப்பழகும் கிடைத்த வாழ்க்கையை ஏற்றுக்கொள்ளும் நிதர்சனம். இதுபோல ஓடும் பஸ்சில் சிறுவன் பேண்டுவைத்ததால் தாய் படும் அவமானம், கண்தெரியாத வாயாடிக்கிழவியை பழிவாங்க புதிதாய் கட்டிய கழிவறையின் தரைமுழுதும் மண்டு பேண்டுவைக்கும் சிறுவர்கள் என பல கதைகள். மிகவும் பாதித்த கதை ஒன்று. கொஞ்சம் வசதியான அத்தைவீட்டுக்கு நெல்லுச்சோறு திம்பான் தன் மகன் என்கிற ஆசையில் கோடைவிடுமுறைக்கு அனுப்பிவிட்டு விருந்தும் மருந்தும் மூன்று நாளாகி ஜலதாரையெல்லாம் பீயாக கோரிவைத்துவிட்டான் என்கிற குற்றச்சாட்டில் திரும்ப அழைத்துவரப்படும் சிறுவன். மிகுந்த பாதிப்பை கொடுத்த கதை. இவை எதுவுமே அதிர்ச்சி மதிப்பீட்டுக்காக எழுதப்பட்டவை அல்ல என்பது வாசித்து உணர்கையிலேயே பிடிபட்டுவிடும். இந்த கதைசொல்லும் பாங்கு கைவரப்பெற்ற எழுத்தாளருக்கு அதிர்ச்சிக்கு என தனியே எழுத முனைந்தால் கூட அவை கதையோட்டத்தில் அமுங்கிவிடும் வாய்ப்பே அதிகமாக இருக்கும்.




                                  மாதொருபாகன் போனவருடம் படித்தது. பின்னட்டையையும் முகவுரையையும் படிக்கும்போதே புத்தகத்தின் சாரம் இதுதான் என தெரிந்து போயிற்று. ஏற்கனவே விடலைவயதில் இதுமாதிரி திருச்செங்கோட்டு திருவிழாவில கையப்பிடுச்சி இழுத்துக்கொண்டு போய் பிள்ளைகொடுப்பாங்கன்னு கேள்விப்பட்ட கதைகள் தான். ஆனால் இதை எப்படி சொல்லியிருப்பார் என்கிற படபடப்பு ஒட்டிக்கொண்டாலும் இந்த விசயத்தை மிகுந்த எச்சரிக்கையாகத்தான் ஆராய்ந்து எழுதியதாக அவர் முகவுரையில் சொல்லியிருந்தாலும் பொன்னாவின் காளியின் வாழ்க்கையை வாசிக்க வாசிக்க அதெல்லாம் அமுங்கிப்போகிறது. நாவல் முழுதும் கடைசி அத்தியாத்துக்கு முன்புவரைகூட செய்யப்பட்டதாக இல்லை. எப்படி மிக ஜாக்கிரதையாக இந்த விடயத்தை சொல்லப்போகிறோம் என்கிற எச்சரிக்கை உணர்வு அவ்வப்போது தென்பட்டாலும் அவைகூட துருத்தலாக இல்லை. குழந்தைபேறு இல்லாத ஒரு பெண்ணுக்கு கிடைக்கும் ஏச்சுகளும் பேச்சுகளும் சமூக மதிப்பிழத்தலையும் அவை கொடுக்கும் மன அழுத்தங்களையும் காளியின் காதலையும் களவியையும் பிரியங்களையும் தாண்டி இந்த இழப்பு கொடுக்கும் வலிகளை மிக நிச்சயமாக அதிர்ச்சிக்கு மட்டுமே எழுதியிருக்க மாட்டார் என்பதை வாசிக்கும் எவரும் மிக நிச்சயமாக உணார்ந்துகொள்ள முடியும். எழுதும் எதுவும் தவறாக போய்விடக்கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வு கூட அவரது பொறுப்பை கூட்டிக்காட்டுகிறதே ஒழிய செய்யப்பட்டதாக வாசிபனுபவத்தை இறக்கவில்லை. கடைசி அத்தியாயம் பிரளயம். வம்சம் தழைக்க பொன்னாவின் தேர்வும் அவை சுற்றிய உணர்வுக்கொந்தளிப்புகளும் மிக நேர்மையாக எழுதப்பட்ட ஒன்றாகவே நான் உணர்ந்தேன்.


                                  ஒரு படைப்பின் வெற்றி தோல்விகளுக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும். ஆனால் ஒரு எளிய வாசகன் எந்த புள்ளியில் அதனுடன் அதன் ஓட்டத்துடன் இணைந்துகொள்கிறானோ அதைப்பொறுத்தே அவனுக்கு கிடைக்கும் அனுபவ தரிசனங்கள். நானும் ஒரு இணைய சராசரி தானே? நான் காளியாக இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன் என்கிற கேள்வி வாசிக்கையில் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. என்னதான் பெரியார் எழுத்துக்களை படிப்பவன் என்றாலும் கருப்பை சுதந்திரம் பெண்களுக்கு அவசியம் என்று படித்து உணர்ந்திருந்தாலும் கடைசி வரை பொன்னா செல்வாள் என்பதை மனம் ஏற்றுக்கொள்ளவே இல்லை. நானாக இருந்திருந்தால் இன்றைய காலத்துக்கு இருக்கும் வசதிக்கு விந்துதானம் பெற்று செயற்கைமுறை கருத்தரிப்பில் குறைந்தபட்சம் தாயாவது பாதி பெற்றோராக இருக்கும்வகையில் முயன்றிருக்கலாம் என என் முற்போக்கு மனதை சமாதானப்படுத்திக்கொண்டேன். தனக்கென நடக்கும் நிகழ்வுகளில் மட்டுமே தன் கொள்கைப்பிடிப்புகளும் நியாய அநியாங்களும் அதன்மேல் நாம் வைத்திருக்கும் உண்மையான பிடிப்புகளும் நமக்கே தெரியவரும். அதுவரை ஊராருக்கு சொல்வதுதானே? அடித்துவிடும் அவசரத்தில் சொல்லலில் இருக்கும் சுகத்தில் அடித்துவிட்டுக்கொண்டு போய்க்கொண்டே இருக்கிறோம்.





                                  மாதொருபாகன் படித்த இரண்டு நாட்களில் அடுத்து நான் வாசித்தது தமிழ்மகனின் ஆண்பால் பெண்பால் எனும் இன்னுமொரு அற்புத எழுத்துநடை கொண்ட நாவல். இதுதான் நான் வாசித்த தமிழ்மகனின் முதல் நாவல். முதல் பாதி நாவல் பெண்ணின் பார்வையிலும் அடுத்த பாதி ஆணின் பார்வையிலும். குழந்தைப்பேறு கொடுக்கமுடியாத ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்டு அழுத்தத்தில் மனநோயாளியாக மாறிபோகும் பெண்ணின் கதை. எம்ஜியாரின் பரம ரசிகையான அந்தப்பெண் குழந்தைப்பேறின்மையில் கிடைக்கும் அழுத்தத்தில் அடிகளில் உடலில் தோன்றிய வெண்படைகளில் எம்ஜியாராகவே தன்னை வரித்து அழித்துக்கொள்பவள். எம்ஜியாருகூட குழந்தைபாக்கியம் இல்லாம இப்படித்தானே கஷ்டப்பட்டிருப்பாரு என நினைத்து நினைத்து தன்னில் எம்ஜியாரு ஒரு மலடியாக ஆவியாகவே வந்து இறங்கிவிட்டதாக நம்பிக்கையில் வாழ்வை சிதைத்துக்கொள்ளும் பெண். முதல்பாதி முழுக்க அந்தப்பெண்ணின் பார்வையில் கொஞ்சம் கொஞ்சமாக கதை விரிய அந்த பெண்ணுக்கே குறை என்கிற ரீதியிலேயே போகும் கதை. இரண்டாம் பாதியில் அந்த ஆணின் பார்வையில் நடந்த எல்லா நிகழ்வுகளும் மறுபடி சொல்லப்பட குறையுள்ள ஆண் அதை மறைக்க நடத்தும் ஆணாதிக்க அரசியல் செய்கைகளையும் அவை கொடுக்கும் பாதிப்புகளையும் தமிழ்மகன் எழுதிச் செல்லச்செல்ல ஒரு ஆணாக சடுதியில் இந்த குயுக்திகளை எங்கே எப்படி நாசுக்காக நாகரீக போர்வையில் செய்துகொண்டு இருக்கிறோம் என்பது முகத்தில் அறைந்துகொண்டே இருந்தது. கடைசி அத்தியாயத்தில் மட்டுமே அந்த ஆண் மனநல நோயாளியாக்கப்பட்ட அந்த பெண் மீது அன்பும் பரிதாபமும் தோன்ற முடிவதாக கதை, அதுவும் அந்தப்பெண் ஒருவார்த்தை கூட கணவனின் ஆண்மையின்மை பற்றி பைத்தியமான பின்பும் கூட சொல்லவில்லை என்பதால் கிடைக்கும் குற்றவுணர்வு கொடுக்கும் அன்பு மற்றும் பிரியம். கதைப்போக்கும் சொல்லிய விதமும் பெண் ஆணாக ஒரே ஒருவர் மாற்றிமாற்றி சிந்தித்து இவ்வளவு தத்ரூபமாக எழுதியவகையில் தமிழ்மகனின் உணர்வு பூர்வமான படைப்பு.

                                  இந்த இரண்டு நாவல்களும் ஒருவாரமாக மண்டையில் ஓடிக்கொண்டே இருந்தது. மனசுக்கு நேர்மையாய் எந்த படைப்பின் முடிவு சரியானது என யோசித்ததில் செய்நேர்த்தியிலும் கதை சொல்லும் லாவகத்திலும் தமிழ்மகன் முன்னின்றாலும் நகர வாழ்க்கையில் படித்த வேலையில் இருக்கும் பெண் தன்குறை இல்லையெனினும் குழந்தையின்மையை எதிர்கொள்ள இயலாமல் ஆணின் சூழ்ச்சியில் மிதிபட்டு மனநோயாளியாகிப்போன முடிவைவிட... எழுதுவது தவறாகிவிடக்கூடாது என்கிற பொறுப்புணர்ச்சி மேலாக படைப்பில் வெளிப்பட்டாலும் பொன்னாவின் சுயதேர்வு மற்றும் சுதந்திர முடிவு மனதுக்கு ஏற்புடையதாக இருந்தது. நிஜவாழ்வில் நான் ஆதரிப்பேனா என்பது இன்னமும் எனக்கு தெளிவில்லை தான். ஆனால் அந்த படைப்பு வெறும் அதிர்ச்சி மைலேஜுக்கு எழுதி பெயர்வாங்க செய்ததல்ல என உறுதியாக நம்புகிறேன்.


                                  நான் ஒருவருடமாகவே மீண்டும் சமூகவலையில் இருக்கிறேன். பெருமாள்முருகனும் நம்மைப்போலவே தான் முகநூலையும் பாவித்துக்கொண்டு வருகிறார். அவர் நிலைத்தகவல்களில் ஒருமுறைகூட வரம்பு தாண்டியோ லைக்குக்கு ஆசைப்பட்டு எழுதியதாகவோ அவசரகதி கவனயீர்ப்புக்காக எதையும் சொல்லியதாக செய்தாக நினைவில்லை. ஒரே ஒரு புக்குபோட்டு லட்சக்கணக்கில் மேடைகட்டி சர்ரியலிச நியோநார்சலிய பின்நவீனத்துவ நாசமாய்ப்போன இசங்களெல்லாம் கொண்டு வழிமொழிந்து பேட்டிகண்டு இலக்கியவாதி பச்சைகுத்திய குபீர் இலக்கிய பேராண்மைகள் நிறைந்த அறிவார்ந்த சபை இது. இங்கு இத்தனை படைப்புகள் எழுதிய பெருமாள்முருகன் ஒருமுறைகூட அலட்டி தளும்பி பார்த்ததில்லை. அதனால்தான் ஓராளு சிக்கீட்டாரு சாத்துங்கடா என்பதைக்கூட ஆளு யாரு என்னன்னு தெரியாமல் அவசரகதியில் குரல்வலையில் கத்தியை சொருகிட்டு ஓடிக்கொண்டே இருக்கிறோம். அவசர அடி லைக்கு யுகத்தில் சில பக்கங்களை மட்டுமே படித்துவிட்டு மாட்டடி அடித்து ஓய்வதற்கு முன்பே அடுத்த புரட்சிக்கு தயாராகிறோம்.


                                  இதில் எல்லாவற்றையும் விட ஆச்சரியம் ஆரெஸசஸ் ஆதரவாளர்கள் என அறியப்பட்ட என் நண்பர்களது எதிர்வினைதான். நாட்டில் நடக்கும் எல்லாப்பிரச்சனைகளிலும் காவிச்சிந்தனையையும் இடுப்பில் இருக்கும் வேட்டியை பிடுங்கிவிட்டு காக்கிநிஜாரை மாட்டிவிட துடிக்கும் அவசரமும் புரிந்துகொள்ள முடிந்ததே. ஆனால் நீங்கள் வடக்கில் இருந்து டவுசர் பாக்கெட்டில் நிறைத்து கொண்டுவந்து இங்கு இறக்குமதி செய்ய துடிக்கும் இந்துத்துவதுக்கும் ஏற்கனவே இங்கிருக்கும் இந்துத்துவதுக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. ஊர்த்திருவிழா என்பது இந்துப்பண்டிகையாக இருந்தாலும் இந்துக்களுக்கு மட்டுமேயானதல்ல. நடந்த நடக்கும் நிகழ்வுகளுக்கு நம் மாநிலத்தில் நம் மாவட்டத்தில் நம் ஊரில் நம் கிராமத்தில் நம் பழக்கவழக்கங்களில் தேடினாலே பல விடைகள் கிடைக்கக்கூடும். அந்த தேடலில் வெளிப்படும் பழமைவாதங்களையும் சாதி அழுத்தங்களையும் அடிமைத்தனங்களையும் நமக்குள் நாமே அலசி நாகரீகமடைய இயலும். நமக்கென ஒரு வாழ்க்கை முறையுண்டு. மொழியுண்டு. இயல்புண்டு. பரந்த மனப்பான்மை உண்டு. எதிர்க்கருத்துக்களுக்கு இடம்கொடுக்கும் தன்மையுண்டு. இதையெல்லாம் மதிக்காமல் அனைத்தையும் ஒற்றைப்படையிலாக்க அனைத்துக்கும் ஒரே இந்துத்துவ முத்தரை குத்த ஆயத்தம் செய்யும் இவர்கள் தம் குழுக்கள் பாதிக்கும் வரை தம் தனித்துவ வாழ்வுமுறை அழிக்கப்படும் வரை நாட்டுநலனுக்கெனவே இதெல்லாம் என நம்பிக்கொள்ள வாய்ப்புண்டு. ஆனால் நாட்டில் என்ன நடந்தாலும் அதில் தன் லத்தியை பதிப்பேன் என்பது எங்குபோய் முடியும்?



                                  மதத்தின் பெயரால் கட்டமைக்கப்பட்ட எந்த நிறுவனமயமாக்கலும் பன்முகத்தன்மையை அழித்து ஒற்றைத்தன்மையை திணிக்கும் எனபதே வரலாறு. இன்றைக்கு நம் பொது எதிரி பயங்கரவாதம் எல்லோரும் மதத்தின் பெயரால் ஒன்றிணைந்து நாட்டைக்காப்போம் என்பது நல்லவிதமாகவே தோன்றவைக்கலாம். ஆனால் அலங்கரித்து கொம்புசீவி போட்டிக்கு ஆயத்தப்படுத்தப்பட்ட காளையும் பொது எதிரிக்கென உருவாக்கப்பட்டு வேலை நோக்கம் இல்லாமல் சும்மா இருக்கும் படையும் ஒன்றுதான். பயிற்சியின் தினவில் ஒருநாள் சாதாரண மக்களை மிகச்சாதாரண காரணங்களுக்காக போட்டுப்பார்க்கத்தான் போகிறது. நிலமை நம் கையை மீறி போகையில் நம்மால் அடிபட்டவன் செய்தது போலவே நாமும் அரற்றமட்டுமே முடியும்.



                                  அதுவரை மற்றோரின் புத்தக எரிப்புகளையும் கருத்துக்களை அவதூறுகளால் அடித்து துவைப்பதையும் இணையவாழ்வு பரபரப்பு சுகம் என்கிறவகையில் கொண்டாடிக்கொள்வோம்.

                                  The Science of Stock Market Investment - செல்லமுத்து குப்புசாமி

                                  $
                                  0
                                  0

                                  நீங்கள் அந்தக்கால பதிவராக இருந்திருந்தால் செல்லமுத்து குப்புசாமியை ஷேர்மார்க்கெட் பற்றி புத்தகம் எழுதும் எழுத்தாளராக முதன்முதலில் அறிந்திருக்கமாட்டீர்கள். ( வரலாற்றை தேடினால் அவரின் கும்மாச்சுகதை ஒன்று மாட்டலாம்! ) இப்பொழுதும் ஒன்றும் தகவல்குறையில்லை. இரவல் காதலியின் எழுத்தாளர்தான் இழக்காதே எழுதியவரும்கூட. இதற்கு நடுவில் பிரபாகரன் மற்றும் எல்டிடிஈ பற்றியும் இரண்டு புத்தகங்கள் எழுதியிருக்கிறார் என்றால் நீங்கள் நம்பத்தான் வேண்டும்! அவரது எழுத்தின் வீச்சு அப்படி.


                                  ஆனால் பாருங்கள் எனக்கு அவரை இன்னமும் வலைப்பதிவர் குப்ஸ்சாகத்தான் நெருக்கமாய் அறிவேன். அதை என் பெருமைன்னும் அவர் கெரகம்னும் வைத்துக்கொண்டாலும் எனக்கும் அவருக்கும் பாதகமில்லை. ஒன்று கவனித்திருக்கின்றீர்களா? எழுத்தாளர்கள் நல்ல வாசகர்களாக இருக்கிறார்கள். ஆனால் வலைப்பதிவர்கள் நல்ல வாசகர்களை பொறுக்கியெடுத்துவிடலாம். தமிழில் நாலுவரி டைப்படித்தால் அதைப்படிக்க நாலேபேர் இருப்பதை அறிகையில் புத்தி பத்திபத்தியாய் எழுதப்போய்விடுகிறது. கொஞ்சநாளில் அடேடே.. இப்பவர்ற புத்தகங்களுக்கு நம் நூறுபதிவுகளை எடுத்து புத்தகமாய்ப்போட்டால் எழுத்தாளர்பேட்ஜ் கிடைக்குமோன்னு அதையும் கைக்காசு 10000 போட்டு செய்துபார்க்க தூண்டுகிறது. ஆனால் பதிவர் குப்ஸ் எழுத்தாளர் செல்லமுத்துவாக அடுத்தடுத்து நல்ல புத்தகங்கள் எழுதிக்கொண்டே இருக்கிறார். ஆனால் எழுதப்பட்ட பதிவுகளை புத்தகங்களாக அல்ல!




                                  ஒருகாலத்தில் கையில் 6 டிஜிட்டில் கொஞ்சம் காசுசேர்த்துவைத்திருந்தேன். அதாவது என் சம்பளத்தில் இருந்து நானாய் சேர்த்தது. மாமனார் கொடுத்ததாக இருந்தால் உடம்பில் ஒரு பயமும் மனைவியின் கழுத்தை இறுக்கும் கடிவாளமும் இருந்திருக்கும். சொந்த உழைப்பில் வந்ததல்லவா? கூடவே அந்த பீரியடில் சூரியவம்சம் படமும் வந்ததல்லவா? இரண்டையும் ஒருலைனில் இணைக்க ஒரே பாட்டில் ஊரிலிருக்கும் எல்லா பெயர்ப்பலகையும் என்பெயராக கனவில் வந்து தொலைத்தது. ம், இதற்கு தேவயானியே கனவில் வந்திருக்கலாம். விதி வலியது. அள்ள அள்ளப்பணம் அப்படின்னு பாகம் 1 மற்றும் 2 வாங்கினேன். படித்தேன். ஒரு கதைபுத்தகம்போல விறுவிறுப்பாக படித்துமுடிக்கையுல் ஹர்ஷத்மேத்தாவின் சித்தப்புபோலவே ஒரு மிதப்பு. என்ன இருந்தாலும் வலைப்பதிவரல்லவா? மனசுக்குள் ஒரு எச்சரிக்கை. பணம் பண்ணறது என்ன கதையெழுதறதுமாதிரி இம்புட்டு ஈசியா? இருக்காதே? அப்ப சீரியசான புக்குபடிச்சு சீரியசா பணம் பண்ணலாம்னு இழக்காதே வாங்கி படிச்சேன். முன்னதைவிட இது நல்ல விசயஞானமும் சிறந்த எடுத்துக்காட்டுகளும்னு நல்லாத்தான் இருந்தது.


                                  ஆனாபாருங்க படிச்சது நானல்லவா? சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்! ஒரு டீமேட் அக்கவுண்டு ஓபன்செய்து மொத்த காசையும் இறக்கி ஆரம்பத்தில் ச்சும்மா ஒர்ரூவா ரெண்டுரூவா ஏறுனதுக்கெல்லாம் நைட்டுல ஒவ்வொரு நேம்போர்டா மனசுல கற்பனைசெஞ்சுக்கிட்டு சிறப்பாத்தான் போச்சுது. தொழிலை தொழிலாக கருத்தோடு செய்பவனுக்கே அது தொழில். மற்றவனுக்கெல்லாம் அது சூதுதான். ஒன்னார்ரூவா ஏறுனா விக்கறதும் நாலனா இறங்குனா வாங்கறதுன்னும் ஆறுமாசம் ஒரே அழிச்சாட்டியம்! மனசுல தெகிரியம் எகிற நம்மைவிட இழக்காதே எழுத்தாளரு என்னபெரிய பிஸ்துன்னு தெனாவெட்டுல துறை ரீதியாக அவரை சந்தித்து அளாவளாமென்று எங்கள் சந்திப்பை பழைய மகாபலிபுரம் சாலையில் ( இப்பத்தான் அது ஐடி கலாச்சாரத்தின் சீர்கேடுகள் நிறைந்த ராஜிவ்காந்தி சாலையாமே!? ) அலுவலகத்தை ஒட்டி வைத்துக்கொண்டோம். நான் லொடலொடன்னு எப்படி இந்திய ஷேர்களை வலதுகைல வாங்கி இடதுகைல தூக்கிவீசி அதை மூக்குல நிறுத்தி பேலன்ஸ் செய்து விளையாடறேன்னு சொல்லச்சொல்ல அவர் என்னைப்பார்த்த பார்வை எவ்வளவு கேவலமென்பதை எந்த இலக்கியமும் சொல்லில் வடித்துவிடமுடியாது! என்ன இருந்தாலும் நண்பனல்லவா? ஆகவே ஒரு முக்காமணி நேரத்துக்கு அந்த ரோட்டிலேயே நிற்கவைத்து வகுப்பெடுத்தார். சூட்சுமங்களை லட்டுலட்டாக வீசினார். லபக்கிக்கொள்ள எனக்கு திராணியில்லையெனில் அவரென்ன செய்யமுடியும்? இந்த சந்திப்பு பாலகுமாரன் சுஜாதாவை ஒரு இரவில் சந்தித்து சிறுகதை எழுதுவதெப்படின்னு கற்றறிந்த நிகழ்வுக்கு சற்றொப்ப நடந்தது. ஆனால் இதைப்பற்றி சுஜாதா ஒருமுறை சொன்ன ”எல்லாருமா சூட்சுமத்தை பிடித்துக்கொண்டார்கள்? அது பாலகுமாரனின் திறமை” என்பதைத்தான் நீங்கள் கவனிக்க வேண்டும்.


                                  குப்ஸ் கதறக்கதற சொல்லித்தந்ததில் ஒன்றுகூட என் மரமண்டைக்கு ஏறவில்லை. ஒரே வருடத்தில் என் ஃபோர்ட்போலியோ முழுக்க ஆங்காங்கே இருந்த பச்சையெல்லாம் காணமல்போக ச்சும்மா செக்கச்செவனேன்னு ஆகியது. இழக்காதே சட்டியில் நிறையத்தான் இருந்தது, ஆனால் என் அகப்பை ஓட்டை என்பதால்தான் நான் சட்டியில் இருந்து எடுக்கமுடியவில்லை என்பதை உணர இரண்டு வருடங்கள். அதற்கப்பறமும் நான் அடங்கவில்லை! எவனாவது கையில அஞ்சுரூவா வைச்சுக்கிட்டு ஷேர் அப்படின்னு ஒரு வார்த்தைய உச்சரிச்சுட்டான்னா அவனை அப்படியே அமுக்கிக்கினுபோய் என் டீமேட் அக்கவுண்டைக்காட்டி “ரெத்த பூமிடா இது.. பாரு எப்படி செவப்பா இருக்கு!”ன்னு கிலிகெளப்பிக்கொண்டிருந்தேன். மக்களுக்கு என் திறமை தெரியவர என்னைப்பார்த்தாலே தெரிச்சு ஓட என் ஷேர் சுதி குறைய ஆரம்பிக்க கனவில் எழுதிவைத்த நேம்போர்டெல்லாம் ஒன்னொன்றாக கழற்றிவைக்கவும் தேவயானி ராஜகுமாரனை திருமணம் செய்யவும் சரியாக இருந்ததால் தொழிலை ஏறக்கட்டிவிட்டேன். கொஞ்சம் கொஞ்சமாக டீமேட்டில் லாகின்செய்வதையே நிறுத்தி வருசத்துக்கொருக்கா எட்டிப்பார்த்து என் கும்பேனி எம்டிக்களெல்லாம் அதே செவப்பை மெயிண்டெய்ன் செய்யறாங்கலான்னு கன்பார்ம் செஞ்சுட்டா ஒரு திருப்திதேன்!


                                  இத்தனை வருட பங்குவணிகத்தில் செல்லமுத்து அன்றைக்கு மண்டையில் குட்டி சொல்லித்தந்த ஒரே ஒரு விடயம் நச்சுன்னு புரிந்தது. ஸ்பெகுலேசனில் பங்குவணிகம் செய்யாதே! கெடக்குது கழுதை விடுங்க, நான் இன்னும் குப்ஸின் நட்பை இழக்கவில்லை!


                                  ஏண்டா வெளங்காவெட்டி.. இம்புட்டு தெறமைய வைச்சுக்கிட்டு நீயெல்லாம் எப்படி இந்த புத்தகத்தை பரிந்துரை செய்யலாம்னு நீங்க கேக்கலாம். குடிகாரவகளுக்குத்தான் குடியை நிறுத்துவதின் உடனடி நன்மைகள் காலையில் மனதில் உதிக்கும்! அதுபோலன்னு வைச்சுக்கங்க. நீங்களாவது செல்லமுத்துவின் இந்த புத்தகங்களை படித்து பங்குவணிகத்தில் உய்து அவராண்ட நல்லபேரு வாங்குங்க! சொன்னவுடன் கப்புன்னு புடிச்சுக்கும் கற்பூரங்களை அவருக்கு ரொம்பபுடிக்கும்!


                                  நான் எனக்குத்தோதான இரவல்காதலி PDFல வந்ததும் கப்புனு புடிச்சு படிச்சுக்கறேன்!



                                  பொங்கலைப்பற்றி ஒரு பொங்கல்!

                                  $
                                  0
                                  0
                                  பொங்கச்சொல்லி பிரகாசரும் சோழன் எம்.எல்.ஏவும் கேட்டுக்கொண்டதாலும் மேட்டரு கொசுவத்திதுறையின்கீழ் வருவதால் என்னால் வாயை அடக்கமுடியாதென்பதாலும் இங்கே!


                                  அப்பாவின் காவல்துறை வேலையாக தமிழ்நாட்டின் பல ஊர்களுக்கு வருடாவருடம் பெட்டிதூக்கி கடைசியாக கோவையில் கூடாரம் அடித்திருந்தாலும் என் சொந்த ஊர் தருமபுரி மாரண்டாஹள்ளியை சுற்றியிருக்கும் பலகிராமங்கள். அதெப்படி பலகிராமங்கள் சொந்த ஊராக இருக்கமுடியும்? எங்க தாத்தாபாட்டி பெற்ற 13ல் 2 தவற தக்குன மீதி 11ல் ஒரே ஒரு பெண் எங்க அத்தை! 10 பயகள்ல எங்கப்பாருதான் கடைக்குட்டி. இந்த ஆலமரத்துல பலவிழுதுகள் பலதிசைகளில் வேர்பரப்பினால் நான் எந்த ஊரை சொந்த ஊருன்னு சொல்லிக்க? கடைக்குட்டிங்கற ஒரே தகுதியால் வயக்காட்டுக்கு களிதூக்கிக்கொண்டு வேலைக்கு போகாமல் கவருமெண்டு ஸ்கூலுக்கு அரிசிச்சோறு கட்டிக்கொண்டு படிக்கப்போய் வேலையாகி டவுனுக்கு வந்துவிட்டவர் அப்பா. அப்போதெல்லாம் தீவாளி ஃபேமசாகாமல் பொங்கபண்டிகை முன்நின்ற காலகட்டம். சிறுவயதில் பொங்கல் பண்டிகை எனக்கு எங்கள் கிராமங்களில் வாய்த்திருக்கிறது. பண்டிகை 3 நாட்கள் எப்படியும் நடக்கும். 7நாள், 10நாள் வகை பண்டிகையெல்லாம் ஊரார் ஒவ்வொருவரும் நல்ல விளைச்சலும் நாலுகாசும் கையில் கண்ட காலத்தில் மட்டுமே அமையும். 



                                  பெருசும் சிறுசுமாய் கூடிக்கூடிப்பேசி வீட்டுக்குவீடு முடிஞ்ச காசை வாங்கி 10 நாளைக்கு பண்டிகை சாமிகும்பிடு வழங்கங்களை வரிசைகட்டி சாயந்தர நிகழ்வுகளுக்கு லிஸ்ட்டெடுத்து அந்தந்த குரூப்புகளுக்கு காசைக்கட்டி ரெடியாவாங்க. கொஞ்சம் காசுமிஞ்சுனா ஆரஞ்சு மஞ்சள் துண்டுத்தாள்களில் நிரல் அச்சடித்த பிட்நோட்டீசும் உண்டு! இதுபோக மாட்டுவண்டில மைக்குசெட்டு ஸ்பீக்கரைக்கட்டி ஏழூருக்கும் தெருத்தெருவா வண்டியோட்டி அறிவிப்புச்சொல்லி கூட்டம் சேரும். உள்ளூரு பயககூட டவுஜரை இழுத்துப்பிடுச்சிக்கிட்டு இந்த வண்டிபின்னாடியே அறிவிப்புச்செஞ்சு சுத்துன காலம் பொற்காலம். எந்த ஊருலயும் பாக்கறவுங்க ”இஞ்சுபெட்டரு மவனாடா நீயி? இப்புடி வளந்துட்ட..” என சொந்தம் கொண்டாடுகையில் யாராரு எந்தமுறைன்னெல்லாம் ஒன்னியும் மண்டைல வெளங்காது. குத்துமதிப்பா மாமா பெரியப்பா சித்தின்னு அடிச்சுவிட்டு அப்பறம் ஒரு செல்லதட்டலோடு உறவுமுறையில் திருத்தம்வாங்கி பண்டிககாசுன்னு நாலணாவோ எட்டணாவோ ஆட்டையபோட்டு ஜோபில இட்டுக்கினு போயிக்கிட்டே இருக்கறதுதான். டவுன்ல இருந்து வருசத்துக்கொருக்கா வர்றதால சில்லரை அமோகமாகத்தேரும். அதுபோக கூடவர்ற பயக இவங்க மாமாடா அத்தைடான்னு பத்திவிட்டு காசுதேத்தவைப்பானுங்க. அந்த சில்லரையெல்லாம் காலி வெட்டுப்புலி தீப்பெட்டிக்குள்ளோ பான்ஸ் டப்பாவுக்குள்ளோ நிரம்பும். செட்டாபோய் கலரு, கொடலு, தேன்மிட்டாய் என தீனிகளாக வாங்கித்தீர்த்ததுபோக மிச்சமிருக்கும் காசுகளை ஊருக்குள் புதிதாய் முளைக்கும் வியாபாரிகளிடம் விட்டு அதை ஜவ்வுமுட்டாய் கடிகாரமாகவோ பயாஸ்கோப்பாகவோ அஞ்சுபைசா சீட்டுகிழிச்சு கடைசிவரை ப்ரேய்சுவிழாம கடசியா ஒரு லெச்சுமியோ எம்ஜாரோ போட்ட அட்டை மட்டும் கிட்டி மொனவிக்கிட்டு வர்றதாகவோ முடியும்.



                                  நாங்கெல்லாம் பண்டிகைக்கு ரெண்டுநாள் முன்னாடியே ஊரில் போய் இறங்கிட்டாலும் அவனவனுக்கு செய்யறதுக்கு வேலை ஆயிரம் இருக்கும். பெண்களெல்லாம் வீட்டுக்குவீடு மாத்திமாத்தி மாவிடிக்கறது பலகாரம் சுடறதுன்னு வேலையாயிருவாங்க. பசங்களுக்கு பகல்ல மேயறதைத்தவிர என்னவேலை இருக்கமுடியும்? தெனம் கிணறுகிணறாக காலைல முழுக்க நீச்சல். கடப்பாறை டைவு, தண்ணிக்குள்ள முங்கு ஒளிஞ்சுவெளையாட்டுன்னு அதகளமாகும். நானெல்லாம் சுரபுட்டைய முதுகுல கட்டிக்கிட்டு நீச்சல் பழகுனவந்தான். தண்ணில ஊறிஊறி வெள்ளெலிமாதிரி ஆகிட்டு ஏதாச்சும் ஒரு வீட்டுல பூந்து போடறதை சாப்டுட்டு வயக்காட்டுல கோலியோ கில்லிதாண்டலோ ஓடும். கோலி காசுவைச்செல்லாம் ஆடறதாலும் அடிக்கடி சண்டை வரும்கறதாலும் அது கொஞ்சம் பெரியபயக வெளையாட்டு. இரும்புகோலி ஒர்ரூவா. அதைவைச்சிருக்கற பிஸ்துக மத்த கண்ணாடிகோலிகளையெல்லாம் ஒடைச்செறிஞ்சிருவானுக. கில்லிதாண்டலில் அப்பவே நாங்கெல்லாம் அணுவை அளந்தவனுக. எத்தனைமுறை கில்லியை கிளப்பி அதை காற்றிலே தாண்டல்கொண்டு அடித்துக்கொண்டே இருக்கீங்களோ அதைப்பொறுத்து எதிராளு அளந்துவந்து தாண்டலை தொடும் கணக்கு அது. முழுதாண்டல், அரைதாண்டல், கால்தாண்டல், கில்லி, அரைகில்லி, கால்கில்லி நெல்லிக்காய், கிலாக்காய், விரற்கடை, தீக்குச்சிமண்டை, கடுகு, தூசு, காத்து.... பத்துமுறைக்குமேல் அடித்துவிட்டால் அவங்கேக்கறதுதான் அளவுக்கணக்கு. லெட்சம்பான்! எவன் காத்தைவைச்சு அதை அளந்து அவுட்டாக்கறது? 

                                  பண்டிகைநாட்களில் எல்லோர் வீட்டிலும் ஒரு எட்டுவைத்துவிட்டால் ஏதாச்சும் திங்காமலோ ஜோபியில ரொப்பிக்காமலோ வரமுடியாது. ஒப்போட்டு, நிப்போட்டலு, மிச்சரு, முறுக்கு, கச்சாயம்னு ஏதாச்சும் கிடைச்சுக்கிட்டே இருக்கும். சொந்தக்களின் வீடுகளில் காலைல இட்லிக்கு முன்னாடி இலைல சூடா ரெண்டு ஒப்போட்டுமேல நெய்யவிட்டு பழத்தைப்போட்டு பெசைஞ்சு விரல்கள் பிசுபிசுத்து நக்க சாப்டம்னா பண்டிகைக்குல்ல எண்டராகிட்டோம்னு அர்த்தம்! அப்பறம் கொத்துக்கறி கொழம்பும் இட்டிலியும். மத்தியானத்துக்கு கறிக்கொழம்பும் சோறும், ராத்திரிக்கு ராகிக்களியும் மொச்சக்கொட்டை கொழம்பும். சாயந்தரத்துக்கு வடையோ போண்டாவோ எங்கிட்டாச்சும் தேறும்! இதுபோக வெள்ளாடற நேரத்துக்கு வேனும்னு டவுஜருல எப்பவும் மாங்காயோ, எளந்தவடையோ, நெல்லியோ, எளநிக்கீத்தோ நிச்சயம். உப்பும் மொளகாப்பொடியுங்கூடி எவம்பாக்கெட்டுலயாவது இருக்கும். திம்முக்கா இத்தனை அடைச்சுக்கினு தின்னா வவுரு என்னாவும்? எங்காச்சும் பாறைமேலயோ வயக்காட்டுலயோ தின்னதையெல்லாம் மறுக்கா வடையாவோ ஜிலேபியாவோ கதபேசிக்கிட்டே எறக்கிவைச்சுட்டு கல்லுல தொடைச்சுக்கிட்டு டவுஜரை அரைக்குண்டிக்கா புடிச்சபடி காவாயநோக்கி நடக்கறதுதான். அளவுக்கதிகமா மாம்பழம் தின்னும் நாட்களில் மட்டுமே கொஞ்சம் மேலும் செரமம். அவசரனும்! 

                                  பண்டிகைக்கு மட்டுமே புதுத்துணி. எங்கண்ணந்தம்பிக எல்லோரும் ஒரே கலர்ல டவுஜரும் சட்டையும். ஊர்ல பலபேரு புதுசா காக்கிடவுஜரும் வெள்ளைசட்டையுமே பண்டிகைக்கு எடுத்திருப்பாங்க. உடைகளின் வர்ணங்கள் வேறுபட்டாலும் வர்க்கவேறுபாடு பேச்சிலோ விளையாட்டிலோ வந்ததில்லை. ஆனால் விளையாட்டில் ஏமாத்தவோ தோத்தாங்கோளியோ ஆகையில் எப்படியோ வந்துவிடும் சண்டையில் அனைத்து உறவுகளையும் சிதைக்கும் வார்த்தை இறைப்புகள் உண்டு! அர்த்தமாவது ஒன்னாவது! எந்த உறவின்மேலாவது எந்த உடலுறுப்பையாவது ஏத்தி எகனைமொகனையா அடிச்சுவிடறதுதான். நான் டவுனுப்பையங்கறதால என்வாயில கொஞ்சம் சுழுவா இதெல்லாம் ஆரம்பத்துல வரலை. அப்பறம் கத்துக்கொண்டு எடுத்துவிடுகையில் நெஜமாலுமே உடம்புல ஒரு உதாரு வந்துரும். 


                                  இதெல்லாம் பண்டிகை ஆரம்பிக்கறவரைக்கும். போகிக்கு ஏதும் பெருசா செஞ்சதா நினைவில்லை. பழைசை எரிக்கனும்னாலும் எல்லோரிடமும் பழசுமட்டுமே இருந்தா? தென்னை ஓலையையோ பழைய டயரையோ எரித்து புகைகிளப்பிக்கொண்டு பெரியபயக சலம்புகையில் கூடவே வீதில ஓடுனதுண்டு. பண்டிகை அன்னிக்கு குளிச்சு சாமிகும்பிட்டு பொங்கவைச்ச பானை பொங்கையில பொங்கலோபொங்கல்னு சிரிச்சுக்கிட்டே கத்துவோம். ஆனா பெருசுக இடுப்புல வேட்டிமட்டும்னும் தலைல துண்டும்னும் கட்டிக்கொண்டு பயபக்தியாய் கூவுவார்கள். காலைல பொங்குன பொங்கலுடன் கலந்த பருப்பு பழம் சக்கரைச்சோறு கிடைக்கும். மத்தியானத்துக்குதான் பெரிய இலைல சோறு, குழம்பு, ரசம், நாலுவகை காய் (பொதுவாய் மொச்சை, பூசணி, அவரை, வெண்டை... ) உளுந்தவடை, அப்பளம், பாயசம்னு அளவில்லாம கிடைக்கும். நைட்டுக்கு பசங்களுக்கு வயிறு உப்பிருங்கறதால பெரும்பாலும் ரசஞ்சோறும் மோருஞ்சாதமும். பெருசுக அப்பவும் களியுருண்டைய விடமாட்டாய்ங்க! ஊர்ப்பண்டிகையின் கடைசிநாள் மாட்டுப்பொங்கலாக இருக்கும். கம்பிகட்டுன வரிசைல பின்னாடி எங்கயோ பாதுகாப்பா ஒக்கார்ந்திருக்க மைக்குசெட்டு அலற ஓடற மாட்டு கொம்புல முடிஞ்ச துண்டுத்துட்டை அவுத்தெடுக்க நடக்கும் கூத்தை நீங்க பலபடங்கள்ல பார்த்திருக்கக்கூடுமாகையால் நான் புதுசாச்சொல்ல ஒன்னுமில்லை! 

                                  அப்ப குடிப்பது என்பது மிகக்கேவலமான அடாத செயலாகவும் சம்சாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் அது ஆகாத செயலாகவும் இருந்தது. ஊருக்கடங்காத விடலைகளும் பெருசுகளும் ஊருக்கு மறைவாய் குடிப்பதுண்டு. சாராயக்கடைதான். பெரும்பாலும் இருட்டுனப்பறமும் மறைவாயும் வாங்கிக்கொண்டு ஊருக்கு வெளில குடிச்சுட்டு மெதுவா வரும்க. வாழ்ந்துகெட்ட பெருசுக மட்டும் மனசுஆறாம இரவில் வீட்டின்முன்னால் வசையுடன்கூடிய புலம்பலோ சண்டையோ போடும். அதுக்குள்ள படுக்கப்போயிருக்கும் எங்களை ஏதாச்சும் பெரிம்மா “காதை மூடிக்கங்கடா.. இதெல்லாம் கேக்கப்படாது. சாமி கண்ணக்குத்திரும்”னு மெரட்டி விடுவாங்க.

                                  அதன்பிறகு வருசம் வளர வாழ்க்கை தேய பொங்கல் சிலநாள் பண்டிகையாகிருச்சு. பெரியபையனாகி திருப்பூரிலும் ஈரோட்டிலும் கோவையிலும்கூட அந்தந்த ஊர்களின் சிறப்புடன் பொங்கல் கொண்டாடியிருக்கிறேன். காப்புகட்டுதல் தொடங்கி மஞ்சத்தண்ணி வெளையாட்டுல இருந்து தினம் சாயந்தரம் ஏதாச்சும் பாட்டு நடனநிகழ்ச்சின்னு நடந்திருக்கு. போகப்போக பொங்கலின் சிறப்பம்சம் என்பதை கமல்-ரஜினி சினிமா தட்டிவைக்க வைபவசண்டைகளாகவும், பொங்கல் சிறப்பு கிரிக்கெட்டு மேச்சுகளாகவும், முதல்நாள் முதல்காட்சி வாழ்க்கை லட்சியங்களாகவும், சிறந்தது இதுவா அதுவா பட்டிமன்றங்களாகவும், நடிகைகள் கையில் கடிக்கமுடியாத கரும்புடன் பொங்காத பானையை கிண்டும் தொலைக்காட்சி பேட்டி நிகழ்ச்சிகளாகவும் மாற்றி வாழ்க்கையின் தரத்தை முன்னேற்றிக்கொண்டோம். ஆனால் இந்தனை வருடங்களிலும் மாறாமல் இருந்தது எந்த ஊரிலிருந்தாலும் எங்கம்மா காலையில் புதிடுதுத்தி பானையில் பொங்கலிட்டு தனிக்குரலில் பொங்கலோபொங்கல்னு கத்திச்சொல்லி படையலிட்டதுதான். திரும்பி எங்களைப்பார்த்து “சொல்லுங்கடா எருமைகளா..”ம்பாங்க. ஆனால் வளர்ப்பில் உடம்பில் ஏறியிருக்கும் நாகரீகம் எனும் கூச்சம் அம்மாவைப்பார்த்து கிண்டலுடன் சிரிக்கமட்டுமே வைக்கும்.


                                  அந்தக்காலத்துல எல்லாஞ்சூப்பருன்னும் இப்ப என்னத்த வாழ்றோம்னு சலிச்சுக்கறதும் நம்மைநாமே ஏமாற்றிக்கொள்ளும் ஒரு க்ளிஷேவான செயல்தான். இருந்தாலும் சுவைத்ததுமட்டுமே நெஞ்சிலிருப்பதாலும் அதுமீண்டும் கிடைக்காதாங்கற ஏக்கமும் மட்டுமே அந்தக்கால பொங்கலை உயர்த்திச்சொல்லவைக்கிறது. இன்றைய புரிதலிலும் வாழ்க்கை முறையிலும் என்னால் என் பால்யப்பொங்கலை மீட்டெடுக்கமுடியாதுதான். ஆனால் தீபாவளியின் முக்கியத்துவத்தை குறைத்துக்கொண்டு பொங்கலை முடிந்த அளவுக்கு வெகுசிறப்பாக கொண்டாடுவதை வழக்கமாகிக்கொண்டேன். தமிழன் என உரக்கச் சொல்லிக்கொள்வது இனவெறியல்ல. அது கிடைத்துவிட்ட அடையாளத்தின்மீதாக மிஞ்சியிருக்கும் ஆதூரம் மட்டுமே! பண்டிகைகள் ஒரு உந்துசத்தி. மனித உறவுகளுக்குள்ளான பிணைப்பின் தூண்டுதல். எல்லாம் இருந்துவிட்டாலும் இன்றைய வாழ்வில் மட்டும் கவலைகளுக்கா பஞ்சம்? நல்லதோ கெட்டதோ மகிழ்வோ துயரமோ கிட்டியதோ எட்டாததோ எதுவாயினும் வாழ்ந்துதான் தீரவேண்டும். 



                                  பால்யத்தில் பண்டிகைகள் கொண்டாடி ஓய்ந்த ஒரு முன்னிரவில் கிராமத்து வீட்டின் முன்னால் திண்ணையிலும் கயிற்றுக்கட்டிலும் பாயிலும் சொந்தங்களாக படுத்து உறங்கமுயற்சிக்கும் வேளைகளில் எங்களுக்குள் விடுகதைகள் போட்டு விளையாடுவதுண்டு. மொட்டத்தாத்தா குட்டையில விழுந்து ரெண்டுகாலு பதிணெட்டு ஊசியென சொல்லி விளையாடிக்கொண்டிருந்த பொழுதில் பையனை போலியோவுக்கும் பெரியம்மாவை கிணத்துக்கும் காவுகொடுத்த மொட்டப்பெரியப்பா “இறைக்க இறைக்க தீராதது. அது எது?”ன்னு விடுகதை போட்டாரு. பெரியாளுக சிரிப்பை சுருக்கிக்கொண்டார்கள். பதில் தெரிந்த பெரியம்மாக்கள் எதுவும் சொல்லவில்லை. எவ்வளவோ யோசிச்சும் பொடுசுக எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அரையிருட்டின் அமைதியில் பெரியப்பாவே மெதுவாக ஒற்றை வார்த்தையில் சொன்னார். ’கவலை’. அன்றைக்கு விடைகிடைத்தபிறகும் அதன் அர்த்தம் புரியவில்லை. இன்றைக்கு அதன் அர்த்தம் தெரியும். ஆனால் ரத்தமும் சதையுமாய் சுற்றி மனிதர்கள் இருந்தாலும் சொல்லிக்கொள்ள மனதின் அருகாமை உணரும் உறவுகள்தான் இல்லை. 


                                  சில விடுகதைகளுக்கு விடைகள் மாறுவதேயில்லை.

                                  சவுண்டு சிஸ்டம்

                                  $
                                  0
                                  0


                                  அது ஒரு காலம். வீட்டில் ரேடியோ இருந்தாலே வசதிக்காரவுக என இருந்தகாலம். ரெண்டாப்பு மூனாப்பு படிக்கையில எங்க லைன்வீட்டு ஓனரு ஒரு பெரிய மஞ்சாக்கலர் பொட்டிய பங்களா வீட்டு திண்ணைல வைச்சு கேட்டுக்கிட்டு இருப்பாரு. அப்பவே கேட்டுப்போட்ட வீடு. அவரு லாரிபில்டிங் பட்டறையும் வைச்சிருந்ததால அவருபேரு ரேடியோக்காரரா லாரிக்காரரான்னு காலனிமக்கா மாத்திமாத்தி குழப்பி சொல்லிக்குவாங்க. அது ரேடியோவா இல்ல ரிக்கார்டுதட்டு பெட்டியான்னுகூட சரியா தெரியல. வீட்டுகேட்டுக்கு வெளில நின்னு தூரத்துல இருந்து பார்த்தது மஞ்சாபொட்டியாத்தான் தெரிஞ்சது. ஏதாச்சும் பாடிக்கிட்டே இருக்கும். ஆனா அவருக்கு ரெண்டு சம்சாரம்னு மட்டும் இன்னும் நினைவிருக்கு.



                                  அதுக்கப்பறம் வேற ஊருக்கு போயிட்டாலும் பொழுதுபோக்கு எல்லாம் எங்க வீட்டுல எப்பவும் புத்தகங்க மட்டும்தான். வாசிக்கறதுக்குன்னு கோகுலம், பூந்தளிர், தமிழ் மொழிபெயர்ப்பு ரஸ்ய பத்தகங்கள்னு ஏதாச்சும் வீட்டுக்கு வந்துக்கிட்டே இருக்கும். அதுவரைக்கும் கோயில் கல்யாண கூம்பு ஸ்பீக்கரு பாட்டுக மற்றும் திருவிளையாடல் விதி கதைவசனம் சும்மா காது கிழிய கேட்ட நியாபகம் உண்டு. படம்பார்க்க அம்புட்டு கொள்ள ஆசை அன்னைக்கு இருந்தாலும் அதுக்குமேல பாட்டுக்கேக்க பெரிய பிரியமெல்லாம் இல்லை. அதாவது தெரியல. அதுவா காதுல ஏதாச்சும் அப்பப்ப விழுந்தாச்செரி.


                                  மொதமொத தெருசனம் முழுக்க ஒரு ரேடியோவீட்டு முன்னாடி குவிஞ்சதினம் இந்திராகாந்தியை கொலைசெய்த தினம். திருப்பூர்ல கடையெல்லாம் அடைச்சுட்டாங்க. பள்ளிக்கூடத்துல இருந்து வழக்கம்போல நடந்து வீட்டுக்கு வந்தா எங்க தெருவுல ஒரு ஆளையும் காணோம். எங்கவீதி முக்கு வீட்டுல வீட்டுக்கு முன்னயே குடோனுபோட்டு தறியோட்டறவுக. அன்னைக்கு அவங்க ரேடியோவை எடுத்து வீட்டுமுன்னாடி புல்சவுண்டுல வைச்சுவிட்டாங்க. செய்தியும் சோக ஷெனாயும் ( அப்பயுங்கூடி அது பீப்பின்னே நினெச்சேன் ) மாத்திமாத்தி கும்பலோட கும்பலா கேட்ட நியாபகம்.


                                  ஊர் பஞ்சாயத்தையெல்லாம் ஏறக்கட்டிட்டு வீட்டுக்கு வந்த எங்கப்பாரு கும்பல்ல நின்னு நியுசு கேக்கமுடியாத கடுப்புல காண்டாகி நாங்கெல்லாம் இந்திராம்மா போன சோகத்துல மூக்கையுறிஞ்சுக்கிட்டு வர்றயில ச்சே ஒரு ரேடியோ வேணும்டே வீட்டுக்குன்னார். அதுக்கப்பறமும் ரெண்டு வருசமாச்சு எங்க வீட்டுக்குன்னு ஒரு சேனியோ செட்டு வர. செட்டு என்ன பெரிய செட்டு? சேனியோ டப்பாதான். ஒரேயொரு சின்ன மோனோ ஸ்பீக்கரு. பக்கத்துல ஒரு காசெட்டு போட ஒரு இடம். சைடுல ரேடியோ மீட்டரு. அவரு வாங்கியாந்து வைச்ச புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே மொதக்கொண்டு எல்லா சாமிப்பாட்டும் அப்பப்ப தேயும் அதுல. சினிமாப்பாட்டு கேசட்டு அவரு வாங்கறது அபூர்வம். எல்லாம் ரேடியோல வந்தா உண்டு. அதும் காதல் பாட்டுகன்னா பம்பிப்பம்பி கேக்கனும். ஏன்... காதல் என்கிற வார்தையே சொல்லமாட்டோம். அம்புட்டு கட்டுபெட்டி ஆச்சாரம்! ஒரேயொரு வேடிக்கை கேசட்டு பாட்டுன்னா எம்புருசந்தான் எனக்குமட்டும்தாங்கற பாட்டு. அதைக்கேக்கயில நாங்க பயக எல்லாரும் பம்பிப்பம்பி சிரிப்போம். அம்மா கடுகடுன்னு அதை அணைச்சுத்தொலங்கடா எருமைகளாம்பாய்ங்க :))



                                  அதுக்கப்பறம் கோவைக்கு மாத்தலாகி வந்தபொறவுதாம் பயககூட சேர்ந்து பாட்டுக்கேக்க கத்துக்கிட்டதும் காசு சேர்த்து கேசட்டு வாங்குறதும். அப்பயுங்கூடி அதே சேனியோ சிங்கிள்ஸ்பீக்கரு டப்பாதான். ப்ரெண்டு மக்கா ஊட்டுல சோனி ஸ்டீரியோ பெரிய செட்டு இருந்தது. இளையராஜா அஞ்சலியெல்லாம் ஆயிரம்தடவை அவங்கூட்டுல தேய்ச்ச நியாபகம். அதுபோக அவரு முன்னாடி போட்ட பழைய ராசாபாலனை எல்லாம் "தபலாதட்டி ஆரம்பிச்சுட்டாருயா..."நக்கல் தான். ஏன்னா மைக்கேலு பேடும் மடோனா லைக்க பிரேயரும் கேட்டுப்பழகுன கெத்து இருக்காதா என்ன? அந்த பழங்கதையத்தான் பீட்டர் சாங்ஸ்சுன்னு ஒரு பதிவுல கொசுவத்தி சுத்தியிருந்தனே?



                                  ப்ரெண்டு வீட்டுல ஸ்டீரியோ பத்தாம ஒரு எக்ஸ்ட்ரா ஸ்பீக்கரு வயரு இழுத்து அதை காலி கொடத்துமேல கவுத்து அது பாஸ் ஸ்பீக்கரும்பானா... அதெல்லாம் யாரு கண்டா? ஆனா அந்த எக்ஸ்ட்ரா டும்டும்மு நல்லாத்தான் இருந்தது. இன்னொருத்தன் வீட்டுல பிலிப்ஸ் பவர்ஹவுஸ் பார்க்கறவரை!


                                  அதிருந்தது அவிங்க வீட்டு டேபிள்மேல சும்மா பாலீஸ்போட்ட கருங்குதிரை கணக்கா! எங்கபாரு ஸ்விச்சுக. ரெண்டு காசெட்டு. ஈக்குவலைசரு. சைடுல சும்மா புல்லட்டுக்கு சைடுபொட்டி கணக்கா கும்முன்னு ரெண்டு பெரிய ஸ்பீக்கரு பெட்டிக. அதுக்குள்ள மூனு ஸ்பீக்கரு. வாயெல்லாம் பல்லாக அதை தொடக்கூட பயந்து அவம் போட்டுக்காட்டுன மேன்மெசின் டெக்னோ "அயாம் ஆன் ஆபரேட்டர் ஃபார் யுவர் கால்குலேட்ட"ரும் அப்பறம் நேயர் விருப்பம்னு எனிக்மாவின் "வாய்ஸ் ஆஃப் எனிக்மா"வும் கேட்டுட்டு அவங்கூட்டுல கொடுத்த டீய குடிச்சுட்டு அந்த டும்டும்ம பேசிப்பேசி மாய்ஞ்சபடிக்கு வந்தது இன்னமும் நினைவிருக்கு. என்வீட்டுல நுழையறப்ப மொதமொதலா ஒன்னு வாழ்க்கைல நாமளும் வாங்கனும்டேனுட்டு மனசுக்குள்ள கறுவி புதைச்சுவைச்ச ஆசைதான் ஒரு நல்ல மியூசிக் சிஸ்டம். அதுவரை எனக்கு அவையா எதுவும் கிடைச்சதுமட்டுமே வாழ்வு 

                                  :)


                                  அதன்பிறகு பலவருசம் கழிச்சு நானா சம்பாதிச்சு ஒரு நாலு சீடி கென்வுட் வாங்கி வைக்கயில ஏதும் பெரிசா சாதிச்சதா நினைச்ச நினைவில்லை. ஏன்னா அதுக்குள்ள நிறைய அடிவாங்கி அந்த மொட்டை தபலாத்தட்டி பாட்டுக எல்லாம் மனசுக்கு ஒத்தடம் கொடுக்க ஆரம்பிச்ச காலம். பாடும் கருவிய விட பாட்டுக நெஞ்சுநிறைச்ச பருவம்.



                                  செரி அதெல்லாம் விடுங்க. பழங்கதை. கென்வுட்டுக்கு அப்பறம் சோனி ஹோம்தியேட்டரெல்லாம் பார்த்து இங்கவந்து மேலும் துல்லியமா ஒரு செட்டு புடிச்சு வீட்டுல மாட்டலாம்னு தேடித்தேடி வாங்குன கதைய சொல்லறேன்.



                                  இங்க வந்த புதுசுல ப்ளாட்டுல இருந்தோம். வயசாளிக நெறஞ்ச இடம். ச்சும்மா மாடிப்படி தடதடன்னாலே கம்ப்ளைண்ட் கொடுக்கறவங்க. அந்த எடத்துல வேலைப்பளுல இருந்து தப்பிக்க எங்க குடும்ப குலவழக்கமான சினிமா பார்த்து ஆத்திக்கலாம்னு தேடித்தேடி ஸ்பீக்கர்களை வாங்கிவந்து சர்ப்ரைஸா இறக்குனா எங்கூட்டம்மா "அட கூறுகெட்ட கூவை..."ன்னு தலைதலை அடிச்சுக்கிட்டிங். இதேபோலத்தான் அவங்கப்பாரு அங்க ஒரு காலனிக்கு தண்ணி போர் போட்டுக்கொடுத்த செலவுக்கு பள்ளிகரணைல ஒரு கிரவுண்டு வைச்சுக்கன்னு ( இன்னைக்குப்போகுது அம்பது லட்சம்... ) கொடுக்க அவரு அதெல்லாம் வேணாம்னு காசா வாங்கி இருவது ரூவாய்க்கு சோனி வாங்கிட்டுவந்து வாங்கிக்கட்டுன மனுசன்னு எல்லா ஆம்பளையாளுகளும் ஒரே மாதிரியான்னு செம டோஸ்விட்டிங். எல்லா ஸ்பீக்கரு பொட்டிங்களும் அஞ்சடிக்கு ஹாலை நிரப்பிக்கிட்டு நிக்க செம காண்டு. ஒரு வாரம் எடுத்து வீட்டுக்குள்ளயே பம்பிப்பம்பி ஒவ்வொன்னா மாட்டுனா சத்தமே வைக்கமுடியல. ச்சும்மா இருபது வைச்சாலே செவுரெல்லாம் அதிரும். பெர்சுங்க கம்ப்ளைண்ட் கொடுத்துருவாங்கனு பயந்துபயந்து ஊஃபரெல்லாம் அணைச்சு படம்பார்த்த கோராமை. அதுக்கே அப்பறம் ரிமோட்ல ஒரு தனிவீடு பார்த்து எத்தனை சத்தம் வைச்சாலும் அந்த காட்டுக்குள்ள பக்கத்துல ஒரு பயலுக்கும் கேக்காதுங்கறப்ப தான் ஒரு நிம்மதி. குடும்ப சகிதமா வாரம் ரெண்டுபடம் எப்படியாச்சும் ஃபுல் சவுண்டுல பார்த்துருவோம். அது ஒலகப்படமானாலும் செரி பீம்சிங் கருப்புவெள்ளியானாலும் செரி 10 எண்றதுக்குள்ள மெகாமொக்கைகளானாலும் செரி... பார்த்து தீர்க்கறதுதான். இன்னைக்கு போனி டெண்ட்டுகொட்டாயில் வீரபாண்டிய கட்டபொம்மு.:)


                                  வீட்டுக்கு சவுண்டுசிஸ்டம் செய்யறதுல இதுவரைக்கும் நான் தேடி தெரிஞ்சுக்கிட்டதுல சிலது சொல்லறேன்.





                                  * எல்லா எலக்ட்ரானிக் காட்ஜெட்ஸும் ஒரிஜினல் மதிப்பும் பிராண்டிங் ஹைப்பு என இன்னொரு மடங்கு விலையும் கொண்டவை. நமக்குத்தேவை 92% குவாலிடிதான் தான் எனில் அதைத்தேடி தோதானதை வாங்குவது நலம். அதற்கும் மேலே கொடுக்கும் விலையெல்லாம் நமக்கு தேவையில்லாத உபயோகமே செய்யாத வசதிகளுக்கும் ப்ராண்டுக்கும் கொடுக்கும் கைக்காசு. அதற்கென ஒரு 96% குவாலிடி கண்டிப்பாக இருக்கும் தான். ஆனால் நமக்கு அந்த எக்ஸ்ட்ரா 4% குவாலிட்டியை ஆராதிக்கும் மனநிலையோ தேவையோ இல்லையெனில் 92%ல் செட்டிலாவது உத்தமம். இல்லையெனில் வருசத்துக்கு ஒருக்கா வாங்கிய பொருளை சமூக அந்தஸ்த்துக்காவது மாற்றிக்கொண்டே இருக்கனும். "ஆல்வேஸ் டு த பெஸ்ட் அண்ட் லேட்டஸ்ட்"னு இருக்கறது ஒரு ஆட்டிடூட். அதை ரசிக்கும் பாவிக்கும் ஆட்டிடூட் நமக்கில்லை எனில் எவர் என்ன சொன்னாலும் நம்ப ரசனைக்கு மேலாக வாங்கி கைய சுட்டுக்கப்படாது.



                                  * ஒரு நல்ல ரிசீவர் பாதி ஹோம்தியேட்டர். ஒரு ரெகுலர் சைஸ் ஹாலுக்கோ சின்ன மீடியா ரூமுக்கோ 5.1 எதேஸ்டம். இல்லை நான் பக்காவா ஒரு மீடியா ரூம் போடறேனாக்கூட 7.2 மேக்சிமம். அதுக்கும் மேல 9.2 இல்ல ஆரோ 3டி போடறதெல்லாம் அந்த துறைசார் மக்கள் அல்லது நெம்ப பணக்காரவுக வேலை. அது எனக்கு தெரியாது. இப்பத்திக்கு எனது சின்ன ஆபீஸ் கம் மீடியா ரூம்கறதால 5.1ல் பரம திருப்தி :)

                                  * சவுண்ட் என்பது காற்றின் நகர்வு அசைவில் கடத்தப்படுவது. அதை எவ்வளவுக்கு எவ்வளவு மெக்கானிகல் அசைவில் கொண்டுவருகிறோமோ அவ்வளவு சுகம். எலெக்ட்ரானிக் சிமுலேட்டெட் எல்லாம் கேக்க நல்லா இருக்கும். ஆனால் எனக்கென்னவோ ஃபுல்பீல் கிடைத்ததில்லை. ஆகவே எனக்கு பெரிய பெரிய ட்ரைவர்கள் கொண்ட டவர் ஸ்பீக்கர்கள்தான் பிடித்தமானவை. சின்னச்சின்ன பவர்புல் போர்ட்டபிள் போஸ் டைப் ஸ்பீக்கர்கள் எல்லாம் ஒரு நல்ல ரிசீவருக்கு துரோகம் செய்பவை! ஆகவே என் சாய்ஸ்னா அது முன்னாடிக்கு பெரிய டவர் ஸ்பீக்கர்ஸ், செண்டர் ஸ்பீக்கர், பின்னாடி இரண்டு மீடியம் பிக்செஃல்ப் ஸ்பீக்கர்ஸ் அப்பறம் 10 அல்லது 12 இன்ச் ஊஃபர். கேக்கற சவுண்டு ச்சும்மா கனமா இருக்கனும். காத்துல தகரத்தை இழுக்கறது துல்லியம்தான். அதன்கூட நல்ல பாஸ் சேரும்பொழுதுதான் நெசமாவே கனகதாரால இருக்கற பீல் கிட்டும் smile உணர்ச்சிலை 
                                  மத்த சின்ன ஸ்பீக்கர்கள் எல்லாம் ஏனோ வீட்டுக்குன்னே செஞ்சமாதிரி ஒரு குறை லுக்கு. 

                                  * சவுண்ட் ஹோம்தியேட்டர், மத்த ஃபீச்சர்லாம் ஆன்றாய்ட் வைபைல ஆன்லைன்லன்னு ஆகிட்டதால டீவிக்குனு தனியா ஃபீச்சர்லாம் தேடி காசைப்போடாதிங்க. எல்லா ஃபீச்சரும் இப்ப எக்ஸ்டர்னல் தான். இல்லைன்னா டீவிக்குன்னு கொடுக்கற காசு உபயோகப்படுத்தாமலேயே கிடக்கும். ஆகவே பார்க்கத்தோதான பெரியசைஸ் ஸ்கிரீன் ஹோம் தியேட்டருடன் சுகம். சில மக்கள்ஸ் வீட்டுல ப்ரொஜெக்டர் வாங்கி மாட்டியிருக்காங்க. ஆனால் நியூஸ் முதல் பாட்டுவரை எல்லாத்தையும் அதுல பார்க்கறது சிரமங்கறதால பெரிய டீவி திரை இப்பத்திக்கு நல்லது. 

                                  * அவ்வளவுதான். எனக்குத்தெரிஞ்ச பெஸ்ட் அஃபோர்டபில் சவுண்ட் சிஸ்டத்தை http://newegg.comல்ஒரு விஷ்லிஸ்ட்டா போட்டிருக்கேன். எப்படி முயற்சித்தும் நான் சொன்ன 1Kக்கு பதிலா $1150 வந்துருச்சு 
                                  திருட்டுப்பயக ப்ளாக் ப்ரைடேக்கு விலை ஏத்தி விக்கறானுங்க. இதே பொருளை வேற இடத்திலும் ஆன்லைனில் தேடிப்பாருங்க இன்னமும் குறைந்தவிலையில் முடியுதான்னு. ப்ளாக் கலரை விட ச்செர்ரி சிறப்பு, ஆனால் உங்கள் விருப்பம் 

                                  http://secure.newegg.com/WishList/PublicWishDetail.aspx?WishListNumber=21985289 

                                  * பனானா ப்ளக், நல்ல க்வாலிடி ஆக்டிவ் ஸ்பீக்கர் வயரெல்லாம் அத்தியாவசியம். ஆகவே அதிலெல்லாம் நல்ல குவாலிடியே தேடுங்க. கார்பெட் ப்ளோரெனில் எல்லா வயரையும் ஈசியாக நாமே கார்பெட் அடியில் தள்ளி வேலைய முடிச்சிடலாம். 


                                  எல்லாம் வாங்கி மாட்டிட்டீங்களா? எல்லா மேனுவலையும் படிச்சுப்படிச்சு செட் செஞ்சுட்டீங்களா? அவ்வளவுதான். அதுக்கடுத்த ஒரு வாரத்துக்கு டெஸ்டிங்கோ டெஸ்டிங். கை சும்மா இல்லாம எல்லா செட்டிங்கையும் நோண்டிக்கொண்டே இருக்கும். எல்லாம் பழகி ஒரு நிலைக்கு வந்ததும் ரஹ்மான், ஹாரிஸ், சந்தோஷ்சிவன் அப்பறம் அநிருத் என பலப்பல அடிபொலி இசையமைப்பாளர்களை கேட்டு மெட்டு பீட்டுன்னு ரசியுங்கள். இது ஆரவாரம் கொண்டாட்டம் மற்றும் அனுபவித்தல்.


                                  எல்லாம் ஓக்கேன்னு ஆனதுக்கு அப்பறம் யாருமில்லா தனிமைல இருக்கையில ரொம்பப்புடிச்ச மொட்டைபாட்டுக நாலைஞ்சு எடுத்துக்கங்க. கண்ணைமூடி லயுங்க லவ்வுங்க. அதுக்கும் மேல ஒன்றுண்டு. "பறவையே எங்கு இருக்கிறாய்?"போட்டுவிட்டு கண்ணைமூடி உங்க பழைய காதலியை தேடிக்கிளம்பி அலைகையில் பாட்டு நடுவில் மொட்டராசா "முதன்முறை வாழ்ப்பிடிக்குதே..."ன்னு நம்ப ஆன்மாவைத் தொடுகையில் அப்படியே உணர்ந்து கரைந்து கண்களில் நீர் மல்க காற்றோடு போனால் நம்ப ஸ்பீக்கர்செட்டு ப்ராஜெக்ட்டு சக்சஸு.



                                  இது வாழ்வை உணர்தல் :))


                                  அப்துல்கலாம் எனும் மாபெரும் நடிகர்

                                  $
                                  0
                                  0


                                  இன்று மணப்பாறையில் ஆதவன் கலை அறிவியல் கல்லூரி நடத்திய அமைதி ஊர்வலம் நடைபெற்றது. நேற்றைக்கு கல்லூரி விடுமுறை. இன்று கல்லூரி பேருந்துகள் காலை ஒன்பதுமணிக்கு வந்துசேரும்வரை மாணவர்களுக்கு இந்த தகவல் தெரியாது. காலாமுக்கு கண்ணீர் அஞ்சலி எனும் ஏழெட்டு பதாகைகள் மட்டுமே. காவல்துறை ஒரு கிலோமீட்டருக்கு மட்டுமே அனுமதி அளித்ததால் எண்ணூறு மாணவர்களும் பேருந்துநிலையம் அருகில் இறக்கிவிடப்பட்டு ஒரு மணிநேரத்தில் திரும்ப ஏற்பாடு.


                                  கோஷமோ மாணாக்கரின் விளையாட்டுத்தனமோ அதிசோக பம்மாத்தோ எதுவும் காணோம். மாணவர்களும் ஆசிரியர்களும் அமைதியாக பதாகையை ஏந்தியபடி நடக்க மற்ற மாணவர்கள் அமைதியாக ஒரேவரிசையில் தொடர்ந்தனர். ஒழுக்குசெய்யவோ கண்காணிக்கவோ யாரும் இல்லை. எல்லாம் அவர்களுக்குள்ளாகவே உணர்ந்தபடிக்கு.


                                  என் ஆச்சரியம் அதுவல்ல. ஊரின் நெரிசலாக வழியில் செல்லச்செல்ல இருமருகிலும் உள்ள கடைகளில் இருப்போரும் பேருந்துக்கு காத்திருப்போரும் கடைக்குள் வியாபாரம் செய்வோரும் யாரும் சொல்லாமலேயே எழுந்துவந்து இரண்டு பக்கமும் அமைதியாக வரிசையில் நின்றார்கள். எண்ணுறு மாணவர்களின் ஊர்வலம் அவர்களை தாண்டிச்சென்றவரை தன்னிச்சையாக அமைதியாக பங்கேற்றது மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது. ஊர்நிறைய தன்னிச்சையாய் வைத்த தட்டிகள் மற்றும் ப்ளக்ஸ் போர்டுகள். கட்சிக்காரர்கள் வைத்ததுபோக பள்ளிகள் கல்லூரிகள் ரோட்டரிகள் மற்றும் சின்னச்சின்ன பழக்கடை முடிதிருத்தகம் உட்பட. அவர்கள் எல்லாம் இந்த விளம்பர உத்தியில் எத்தனை ஆட்களைபிடித்து வியாபாரம் பெருக்குவார்கள் என்பது ஆச்சரியமாக இருந்தது.


                                  எளிய கிராமத்து மாணவர்கள்தான். நேற்றுவரையும் நாளையிலிருந்தும் மீண்டும் தல தளபதி ரசிகர்மன்ற குஞ்சுகளாக ஆகிவிடுபவர்கள்தான். இருபக்கமும் தன்னிச்சையாக ஒருமித்து நின்றவர்களும் அதே இலவசத்தில் அடித்துவீழ்த்திய சோற்றாலடித்த பிண்டங்கள்தான். நாளைமுதல் ஏன் இன்றைக்கே டாஸ்மாக்கில் கவிழப்போகிறவர்கள்தான்.இவர்கள் அத்துணைபேரையும் தான் இத்தனைநாள் இந்த அப்துல்கலாம் வான்வெளி விஞ்ஞானி என ஏமாற்றியிருக்கிறார். பலவருடமாக அணுசக்தி நிபுணராக நடித்திருக்கிறார். இந்தியாவை வல்லரசாக்கும் சிந்தனையாளர் என புளுகியிருக்கிறார். எந்தவித உயரிய சிந்தனைக்கூறுகளும் இல்லாமல் ச்சும்மா கனவுகாணுங்கள் என்று எளிய அருள்வாக்கு சொல்லும் காலிப்பெருங்காய டப்பாவாக வாழ்ந்திருக்கிறார். தமிழருக்கு எந்தவித நலனும் செய்யாத கள்ள ஊமையாக வாழ்நாளெல்லாம் மக்களை ஏமாற்றியிருக்கிறார். நாடுமுழுவதும் உள்ள உயர்தர காண்வெண்ட் பள்ளிகளுக்கும் மேன்மக்கள் கல்லூரிகளுக்கும் மட்டும் தேடித்தேடி அவராகவே சென்று எதையாச்சும் அர்த்தமில்லாமல் பேசி ரிடையரானபின்பும் பணவெறியில் சம்பாதித்து இருக்கிறார். குண்டுவைக்கும் இஸ்லாமியர்களை அவர்கள் தீவிரவாதிகள் மட்டுமே என அழுத்திச்சொல்லும் ஒரு சில இஸ்லாமியர்கள் திடீரென இறந்த இந்தியர் கலாம் ஒரு இஸ்லாமியர் என கண்டுபிடிக்கும்படி தந்திரமாக நடந்துகொண்டிருக்கிறார். மொத்தத்தில் வாழ்நாளெல்லாம் எவ்வளவு கடின மனதுடன் அளவிளா திறமையுடன் அவர் நடித்திருந்தால் இத்தனை எளிய மக்களை அவர் வாழ்நாள் முழுதும் ஏமாற்றியிருக்கவேண்டும். நல்லவேளை! இன்றைக்கு இந்த நடிப்பையெல்லாம் அவர் இறந்த வேளையில் மிகச்சரியாக கண்டறிந்துசொன்ன நம் அறிவுசார் ஜேம்ஸ்பாண்டுகள் மட்டும் இல்லையெனில் நாமெல்லாம் கலாமின் அற்புத நடிப்பில் இன்னமும் ஏமாந்து வாழ்விழந்து ஊக்கம் சிதைந்து மொத்தமாய் சீரழிந்துபோயிருப்போம்!


                                  அமைதியான பேரணிமுடிவில் இப்பவெல்லாம் எந்த தலைவருக்கும் இதுமாதிரி மக்களே இறங்கி செய்யமாட்டாங்க என்றேன். ஒரு பெருசு பதினைஞ்சுவருடம் முன்ன இதேபோல் நடந்திருக்கிறது என்றார். மருத்துவம் பார்க்க ரெண்டுரூபாயும் மூனுநாள்வைச்சு பிரசவம் பார்க்க பதிநாலு ரூவாயும் கட்டணமாக பெற்ற லட்சுமிநாராயணன் என்றொரு தேர்ந்த நடிகர் மருத்துவராக செம்மையாக நடித்துக்கொண்டு இருந்தாராம். அவர் மறைவுக்கு பாவம் இந்த மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார ஏமாளிமக்கள் முழுவதும் அவர்களாகவே ஒரு நாள் கடையடைத்து மவுன ஊர்வலம் சென்று அவருக்கு சிலையும் வைத்துவிட்டார்கள் என்றார்.




                                  இன்றைக்கு இறப்பை இத்தனை ஆராய்ச்சி செய்யும் அறிவுசார் சுடர்களே, கடனேன்னு இரங்கல்செய்தி கொடுக்கும் மக்கள் தலைவர்களே, நீங்களும் உங்கள் நம்பிக்கைகளையும் கொள்கைகளையும் உண்மைகளையும் அரிய கண்டுபிடிப்புகளையும் இதே எளிய பொதுப்புத்தி மக்களிடம் தானே சேர்ப்பிக்க ஏற்றுக்கொள்ளவைக்க உணரச்செய்ய போராடுகிறீர்கள்? இந்த ஏமாளிமக்கள் இந்த சின்ன உணர்வுப்பிரட்டலில்தானே ஒருபக்கமாய் மாக்கள்போல சாய்கிறார்கள். இந்த சாய்வுதானே தேர்தலில் ஓட்டுகளாக மாறுகிறது? வாக்களிப்புமுறையில் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள்பிரதிநிதிகள் மட்டுமே அரசியல் அதிகாரம் பெறும் வழிமுறை கொண்ட நம் நாட்டில் மக்களை உங்களுக்கும் இப்படி உணர்வுபூர்வமாக நடித்து ஏமாற்றமுடியுமெனில் உங்களுக்கு உங்கள் இலக்கை அடைவது எவ்வளவு எளிது? நீங்களெல்லாம் ஏன் கலாமின் ஏமாற்று நடிப்பை காப்பியடித்து அவர் இப்பொழுது பெற்றிருக்கும் பலனை பெறக்கூடாது? இதுவரை உங்களுக்கு கிடைக்கப்பெறாத எளிய ஏமாளிமக்களின் ஆதரவை மொத்தமாய் அள்ளிக்கொள்ள கலாம் இதுவரை செய்த ஏமாத்து சித்துவிளையாட்டு நடிப்பை கொஞ்சநாளைக்கு செய்துபார்க்கக்கூடாது? வாழ்நாளெல்லாம் அந்த ராமேஸ்வரத்து கிராமத்தானால் விஞ்ஞானியாக ஜனாதிபதியாக கல்வியாளராக மாணவர்களை விரும்பும் நேயராக வெற்றிகரமாக நடித்து ஏமாற்றமுடியுமெனில் பலதளங்களில் அறிவுகொண்ட பல அரசியல்களம் கண்ட உங்களால் ஏன் இதேபோல் நடித்து நீங்கள் விரும்புவனவற்றை அடைய முடியாது? நாம்தான் இறப்பிலும் கூட ஆதாயம் தேடும் மேன்மக்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே? அந்த ஆளின் நடிப்பு இவ்வளவு பெரிய ஆதாயத்தை தருமெனில் ஏன் பாய்ந்து அந்த வித்தையை நீங்கள் கைப்பற்றக்கூடாது?


                                  தமிழகம் மட்டுமல்ல... அறிவுசார் மேன்மக்களின் பார்வையில் தெரியும் பொதுப்புத்தி மக்களெல்லாம் வெள்ளிப்பாத்திரம் போன்றவர்கள். தினப்படி சூழலும் கிடைக்கும் வழிகாட்டிகளும் தலைவர்களும் ஊடகங்களும் அவர்கள்மீது கருமையை படரவிடுகின்றன. கார்கில் பூகம்பம் நிலநடுக்கம் மற்றும் கலாம் போன்றவர்கள் மறைவு விபூதிபோட்டு தேய்ச்சாப்படி வெள்ளிப்பாத்திரங்களை பளிச்சுன்னு ஆக்கிருது. அதுவும் கொஞ்சகாலத்துக்குதானே நிற்கும்? அப்பறம் அதே மாசுபட்ட வியாபார ஊடக அரசியல் சூழலில்தானே வாழ்கிறோம். 


                                  நல்லதோ கெட்டதோ நம்மை கிளப்பிவிட அடுத்த விபூதிப்பூச்சுக்கு காத்திருக்கவேண்டியதுதான்.


                                  அந்த விபூதிப்பூச்சு வித்தையையாவது இந்த வாய்ப்பில் கற்றுக்கொண்டு அடிக்கடி செயல்படுத்தி பொதுமக்களை வளைத்தெடுத்து உடனடி பலன்பெறுங்கள், இன்றைக்கு கலாம் பலதுறைகளில் ஒரு தேர்ந்த நடிகர் என கண்டறிந்து எங்களுக்கு அறிவித்த அறிவுசார் கண்திறப்பாளர்களே!

                                  வண்ணத்திரை - வாசிப்பனுபவம்

                                  $
                                  0
                                  0

                                  ஒவ்வொரு பத்திரிக்கைக்கும் ஒரு நோக்கம் இருக்கும். தன் வாசகர்கள் யார்? அவர்களுக்கு என்ன கொடுக்கவேண்டும்? அவர்கள் எதிர்பார்ப்பு என்ன? என்கிற தெளிவு. இதில் தெளிவாக இல்லையெனில் பத்திரிக்கை அதுவாகவே பொல்லையாகிரும். சிறுபத்திரிக்கையாக இருந்தாலும். இலக்கியப்பத்திரிக்கையில் நடுப்பக்க கவர்ச்சிப்படம் போடுவதோ அல்லது சினிமா எக்ஸ்ப்ரெசில் சமூக அவலங்களை சாடுவதோ நேர்மையான செயலாக கருதலாம்தான். ஆனால் வாங்கிப்படிக்கும் வாசகனுக்கு அது நேர்மையாக விற்கப்பட்ட பொருளல்ல.

                                  இந்த தெளிவு குழப்பதின் உச்சியில்தான் பெரிய பெரிய பத்திரிக்கைகளே இன்றைக்கு திணறிக்கொண்டு இருக்கின்றன. விகடனைப்படித்தால் சினிமா எக்ஸ்பிரஸ் படித்த கடுப்பு. குமுதத்தை புரட்டி முடிக்கையில் விளம்பர கேட்டலாக் படிக்கும் வெறுமை. இவையிரண்டுக்கும் நடுவில் இருக்கும் கேப்புல கல்லா கட்டிறமுடியுமான்னு ரெண்டுசைடு கண்டெட்டுகளை ஒப்பேத்தி இரண்டுங்கெட்டான் நகலாக நிற்கும் குங்குமம். பெரிய பத்திரிக்கைகளே இப்படி தனக்கென இருந்த அடையாளங்களை இழந்து தமக்கும் வாசகர்களுக்கும் இருந்த பிணைப்பை அலட்சியப்படுத்தி எப்படியாவது விற்பனை ஏத்தறதுக்கு சினிமா விட்டா கதியில்லைன்னு உங்க எல்லோருக்கும் தேவை சினிமாதானேன்னு கரைச்சுக்கரைச்சு எனிமா கணக்கா வாராவாரம் ஊத்திக்கிட்டே இருக்காங்க. இலக்கிய பத்திரிக்கைகளே தவறாமல் கோடம்பாக்க சினிமா ஆய்வுக்கட்டுரை வெளியிடும் காலம் இது.

                                  ஒரு எடுத்துக்காட்டுக்கு கல்கண்டு இப்படித்தான் இருக்கும்னு யாரும் முதன்முதலில் முடிவெடுத்து வாங்கி படிச்சிருக்க மாட்டோம். ஆனால் வாராவாரம் படிக்கையில் அதில் நாம் என்ன எதிர்பார்க்கிறோம் நமக்கு என்ன கிடைக்கும் அது தோதுப்படுமா என்கிற புரிதல் செட்டாகிரும். அதுகொண்டே தொடர்ந்து வாங்குவதா இல்லையாங்கற முடிவு. இப்படி முடிவெடுக்கும் வாசகர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் முயற்சியில் அந்த பத்திரிக்கை ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் குணநலன்களின் எல்லையை உயர்த்துவதிலேயே வெற்றி கிட்டக்கூடும். வேறொரு ஜானரில் நன்கு விற்கும் பத்திரிக்கை செய்யும் வேலையை காப்பியடித்து இங்கு திணிப்பது அல்ல. இன்னைக்கு நாலு பத்திரிக்கையை ஒரு வாரம் வாங்கிப்படித்தால் அந்த நாலுமே இந்த திணறலில் இருப்பதை எந்த எளிய வாசகனும் சிரமின்றி கண்டுபிடித்துவிட முடியும். அதுவே அந்த நாட்பட்ட வாசகனுக்கு திருப்தியின்மையை கொடுக்கிறது.

                                  அன்றைக்கு வாசனுக்கும் எஸ்.ஏ.பிக்கும் தமிழ்வாணனுக்கும் எதற்காக யாருக்காக பத்திரிக்கை நடத்தனும் என்ற தெளிவு இருந்திருக்கும். அதில் கிடைத்த உறுதியில்தான் பத்திரிக்கை அதன் வாசகர்கள் இரண்டுபேருமே பலன் பெற்றார்கள். அவர்களுக்கு என்ன கொடுக்கவேண்டுமென்ற தெளிவு இருந்தது. வாசகர்களுக்கு என்ன கேட்கவேண்டும் எங்கு வாசிப்பு ரசனை லெவலை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்கிற முனைப்பு இருந்தது. அதனால்தான் இன்னமும் நினைவில் வைத்திருக்கும் தொடர்கதைகளையும் சித்திரங்களையும் ஓவியங்களையும் பேட்டிகளையும் சிறுகதைகளையும் நகைச்சுவை கட்டுரைகளையும் நாம் பெற்றோம்.

                                  இன்றைக்கு அவசர வியாபார உலகில் பத்திரிக்கைக்கு படிக்கும் வாசகர் பற்றிய அக்கறையும் அவர்கள் வேண்டுவன சிறப்பாக கொடுக்கும் பொறுமையும் இல்லை. காசுகொடுத்து வாங்கும் நமக்கும் என்ன எதிர்பார்க்கிறோம் எங்கிற தெளிவில்லை. இதில் வாசகர்கள் என்றைக்குமே வழிநடத்தப்படும் ஆட்கள்தான். ஆகவே நான் பழியை அன்றைய ஜாம்பவான்களின் இன்றைய வாரிசு ஆசிரியர்கள் மீதுதான் போடுவேன். அவர்களுக்கு அவர்கள் முன்னோர் கட்டிவைத்த கோட்டையை எப்படியாவது விற்பனையில் கட்டிக்காத்தால் போதுங்கறதே உயரிய லட்சியமா இருக்கும்போல. முன்னோர் எந்த அளவுக்கு வாசிக்கும் அளவில் பழக்கத்தில் தாக்கத்தையும் உயர்வையும் ஏற்படுத்தினார்கள் என்பதெல்லாம் ஒரு பொருட்டோ கவலையோ அல்ல. விற்பனை பிரதிநிதிகளும் ஆராய்ச்சி எம்பியே குழுவும் மார்க்கெட் அனாலிசிஸ் முடிவுகளுமே இன்றைக்கு ஒவ்வொரு பக்கத்தின் கண்டெண்ட்டை தீர்மானிக்கின்றன. ஆசிரியரின் நம்பிக்கையும் திறனும் அல்ல. அதனால்தான் எல்லா பத்திரிக்கைகளும் நடிகநடிகைகளின் கலர்ப்படங்களையும் பேத்தல் பேட்டி கட்டுரைகளையும் சினித்துணுக்குகளையும் பக்கம்பக்கமாக நிரப்பி சினிமா எக்ஸ்பிரஸ்களின் நகலாக தொங்கிக்கொண்டுள்ளன. அதற்குள் கழுகாரும் சுவாமியானந்தாவும் வாரம் இருமுறை கரைச்சதையே கழுவியூத்தி பல்லிளித்து உங்களுக்கு இதுபோதுண்டேன்னு கடுப்படிக்கிறார்கள்.இவ்வளவு ஏன், திருமாவேலனே அம்மாவுக்கு "சர்க்கரைசத்து"ன்னு பம்பி இதுவரை சுயமாக கொண்டுவந்த நம்பகத்தன்மையை ஒருவரியில் இழந்து பத்தோடு பதினொன்றாகிறார். நாம் வாசிப்பில் திருப்தியுறாத வெறுப்பாளியாகி அடுத்தவார பிரதிக்கு வழக்கம்போல காத்திருக்கிறோம். பத்திரிக்கைக்கு ஆசிரியர் என்பது ஒரு ஆளுமை. இப்பொழுது பெரும்பாண்மை வியாபார மேலாண்மையாளர்கள் மட்டுமே.

                                  ஏன் இப்படி தலைப்புக்கு சம்பந்தமில்லாம பெனாத்துறேன்னா வண்ணத்திரையை எப்படி அனுகுகிறேன் என புரிந்துகொள்ளத்தான். வண்ணத்திரையில் எனக்கு என்ன வேண்டும் என்பதோ என் எதிர்பார்ப்புகள் என்ன என்பதோ மிக குழப்பத்திற்குரிய விடயமெல்லாம் இல்லை. ஜஸ்ட் அரைமணிநேர சினிசெய்திகள் மீதான இலகுவாசிப்பு மற்றும் கவர்ச்சிப்படங்கள். அதை எவ்வாறு சுவாரசியப்படுத்திக்கொடுக்கிறோம் என்பதில்தான் சினிமா எக்ஸ்பிரசும் வண்ணத்திரையும் சினிக்கூத்தும் விஜய்ரசிகனும் வேறுபடுகின்றன.

                                  ** சீசனுக்கான எம்மெஸ்வி நினைவுகூறல் கட்டுரை நன்றாக இருந்தது. விசயங்களில் முழுநிறைவுவில்லையெனினும்.

                                  ** பாகுபலியின் விமர்சனம் சரிவிகித கலவை. எந்த பில்டப்புமில்லா பத்தி. நன்று

                                  ** நெல்லைபாரதியின் பாட்டுச்சாலை மிக நிறைவான கட்டுரை. புத்தகத்தின் முக்கிய கண்டெண்ட்.

                                  ** லட்சுமிமேனனின் மூன்று புகைப்படங்களுடனான பேட்டி. கோடிரூவாய் கொடுத்தாலும் கவர்ச்சி காட்டமாட்டேன் என சொல்லியிருந்தார். செய்யும் தொழில் மீதான அவர் சுயகட்டுப்பாடுகள் வாழ்க. புகைப்படங்கள் ஹோம்லியாக இருந்தன. ஆனால் எடுக்கப்பட்ட கோணங்கள் அவர் சிறுபெண் என்பதையும் அவர் ப்ளஸ் பாயிண்ட்டுகளான கண்களின் சிறப்பையும் வெளிப்படுத்த தவறிவிட்டன. பெரியபெண் போல தோன்றுகிறார். புகைப்படக்காரர் கவனிக்கவேண்டும்

                                  ** நிறைய ஒருபக்க புகைப்படங்கள் மற்றும் அதுசார்ந்த துணுக்குகள். துணுக்குகளில் அவ்வளவு சாரமில்லையாதலால் பக்கத்தை நிரப்பும் முயற்சியாகவே தெரிகின்றன. புகைப்படங்கள் பெரிதாக இருப்பது அழகுதான். ஆனால் கூடச்சொல்லும் சேதிகளின் சுவாரசியம் மேலும் அழகூட்டும்

                                  ** கவர்ச்சி காப்ஷன்கள் கொண்ட ஒருபக்க வண்ணப்படங்கள். ப்ரிண்ட் துல்லியம் அழகு. ஆனால் படங்களில் கில்மா மிகக்குறைவு. ஏப்பைசாப்பையான படங்கள் காணும் சுவாரசியத்தைக்கூட குறைக்கின்றன. 'வெறி'த்து பகபகன்னு அடுப்பு இடுப்பெல்லாம் முழுசா எடுபடலை. நெட்டுக்குத்தல் மறைக்கும் நிலவு பேனைப்போடாதிங்க போன்ற காப்சன்கள் படங்களோடு இணையாக கவர்ச்சியை வெளிப்படுத்த திணறுகின்றன. புகைப்படத்தை மேம்படுத்தத்தான் காப்ஷன்கள். பெரும்பான்மை தலைகீழான வேலையை செய்வதால் கிடைக்கும் கில்மா கிடைக்கவில்லை. வருங்காலத்தில் நல்ல படங்களை தேர்வுசெய்து பார்த்து ஆவன செய்யவும்.

                                  ** சரோஜாதேவி பதில்கள் - மிகச்சிறப்பான பிராண்டிங் முயற்சி. ஆனால் ஒரு நுணுக்கம் மிஸ்சாவதாக சம்சயம். குருவியாரின் பதில்கள் பார்க்க மிக இலகுவான சொல்லிச்செல்வதாக இருப்பதாக இருப்பவை. ஆனால் கேள்வி கேட்டவருக்கு அவர் கற்பனைக்கான இடத்தை மறக்காமல் கொடுத்து பட்டும்படாமல் சொல்பவை. "என் உயரம் ஐந்தடிதான் நான் லட்சுமிமேனனை பெண் கேட்கலாமா குருவியாரே? சுரேஷ், கரம்பைப்பட்டி - எட்டாக்கனிக்கு கொட்டாவி விடாதீர் கரம்பையாரே! "இந்த கேள்விபதிலில் இருக்கும் சுவாரசியமே படிக்கையில் சுரேஷை வெக்கப்படவைக்கும் முயற்சியில் வெற்றிதான். ஆனால் சரோஜாதேவி பச்சையாக போட்டுடைக்கிறார். சட்டென வாசகரின் ஒட்டாமை சரோஜாதேவியின் திறமையை மட்டுமே வெளிச்சத்தில் காட்டி நம்மை விலக்கிவைக்கிறது. அதுவும் ராமராஜன் ஷகிலா கேள்விக்கான பதில் வெறுப்பின் உச்சத்துக்கே கொண்டுசென்றது. அதில் வெளிப்பட்டது சரோஜாதேவியின் ஆபாசம் மட்டுமே. அதில் வேறெந்த சுவாரசியமும் கிட்டவில்லை. ஆரம்பகால அதிர்ச்சிமதிப்பீடு கவன ஈர்ப்பு முயற்சி. பலனுக்குப்பதில் தவறான முத்திரையை ஆரம்பத்திலேயே பெற்றுவிட்டதுதான் குறை. நாட்பட செம்மைப்பட்டால் நிச்சயம் அரசு குருவியார் ரேஞ்சில் பிராண்டாகும். கேள்விபதில் விளையாட்டு சமாச்சாரமில்லை. நுணுக்கங்கள் நிறைந்தது. வாத்தியாரே சோபிக்காத ஏரியா!

                                  ** வாசகர் கடிதம் ஒரு பிணைப்பு ஏரியா. சின்ன தவறுகளும் பெரிதான விலகல் கொடுக்கும். ரீடர்ஸ் க்ளாப்ஸ்சில் படப்பெயர் "நேற்று இன்று நாளை"என தவறாக வெளியாகியுள்ளது. திருப்பூர் சங்கரே தவறாக எழுதியிருந்தாலும் ஆசிரியர் சுட்டிக்காட்டியிருந்தால் சங்கர் வண்ணத்திரையோடு வாழ்நாளெல்லாம் பச்சக்கென ஒட்டியிருப்பாப்ல 
                                  smile உணர்ச்சிலை


                                  மற்றபடி, யுவகிருஷ்ணாவின் டச் ஆங்காங்கே தெரிகின்றன. ஆனால் லக்கிக்கு என ஒரு தொனி உண்டு. மிக எளிமையான சினேக நக்கல். வண்ணத்திரை ஜானர் பத்திரிக்கைகளுக்கு மிகத்தோதான குணம். அது முதன்மை ஆசிரியர் யுவகிருஷ்ணாவுக்கும் வாய்க்குமானால் வாசக நமக்கு லக்கு. ஆரம்ப நிர்வாக அழுத்தங்கள் சமனப்பட்டு சீக்கிரம் லக்கியின் முத்திரையை அழுத்தமாக வண்ணத்திரை பெறட்டும் :))

                                  டயட்டு அட்ராசிடிஸ்!

                                  $
                                  0
                                  0

                                  அடல்ட் வாழ்வில் உடம்புக்கு திருப்தியா செய்யவேண்டியது உணவும் உடலுறவும்.


                                  இதில் இரண்டாவது ஏற்கனவே நம்ப நாட்டுல கடும் வறட்சில ஓடிக்கிட்டு இருக்கு. கிடைச்சதையெல்லாம் இல்வாழ்க்கை சமூகசூழல் ஒழுக்கவிதி பொருளாதாரம் சாதிமத கட்டுப்பாடுகள்னு ஆயிரத்தெட்டு கொடைச்சல்ல கிடைச்சும் கிடைக்காத குற்றவுணர்வுல பொதுப்புத்தி ( அதாங்... பெரும்பான்மை )வாழ்க்கைய ஏற்கனவே மருகலில் ஓட்டிக்கிட்டு இருக்கோம்.

                                  இதுல முதலாவது உணவையும் குற்றவுணர்ச்சி தூண்டப்பட்டேதான் செஞ்சு அழியனுமா? சாப்பாட்டை சந்தோசமா அனுபவிச்சு சாப்பிடறதுல அப்படி என்னய்யா குற்றம்? வீகன் பேலியோ ஆர்கானிக்குன்னு விதவிதமா கெளப்பிக்கெளப்பி சும்மா இருக்கறவங்களை மருகிமருகி சாப்பிடவைச்சு அய்யோ முடியலயே தப்புசெய்யறோமோன்னு குற்றவுணர்ச்சிக்கு ஆட்பட்டு தவிக்கனுமாங்கறேன்?

                                  நம்முடைய மனோபாவத்துக்கு ( Attitude ) பொருந்தாத தேவையில்லாத அவசியமில்லாத செயல்களை எல்லோரும் செய்யறாங்களேன்னு கடமையாய் செய்வது பின்பு செய்ய இயலாமல் போவது குற்றவுணர்வை மட்டுமே கொடுக்கும். ஸ்போர்ட்ஸ்மேனாக இருப்பதும் குறிப்பிட்ட டயட்டை கட்டுக்கோப்பாய் செய்வதும் அவரவர் தேர்வு. சுயதேர்வாக இருந்தால் மட்டுமே கிடைக்கும் பலன்கள் மகிழ்சியை அளிக்கும். இல்லைன்னா இருக்கறதையும் அழிக்கும்.


                                  பருமனாக இருப்பது என் உடல்வாகு. உடலை பிட்டாக வைத்திருப்பது விருப்பம் எனில் அதற்கான சரியான முயற்சிகளே நன்மை தரும். ஒருவாரத்தில் 10கிலோ குறைப்போம், குகைமனுசனாட்டம் சாப்புடுவோம் இலைதழைய தின்னு இடுப்பை குமிட்டி அடுப்பாக்குவோங்கறதெல்லாம் நோவாம நோம்பிகும்பிட நினைக்கும் விருந்தும் மருந்தும் மூனுநாள் கேட்டகிரி. அதை சரியாகப்புரிந்துகொண்டு செய்பவருக்கு பலன் கிடைத்துவிட்டுப்போகட்டும். கோடிவீட்டு கோமலா செய்யறா எதுத்தூட்டு இஞ்சினியரு ஜிஎம் டையட்டறாரு மேனேஜர் ஆயிர்வேதிக்ல பாஞ்சேநாள்ள 20கிலோ கரைச்சாருன்னெல்லாம் கதகேட்டு அப்டியே செய்யப்போகி உடல்நலம் மனநலம் ரெண்டும் கெடுத்துக்காதிங்க.

                                  வெற்றிக்கு குறுக்குவழி கிடையாது. அதேபோல் இன்றைய அவசர பொருளாதாரவழி வாழ்வியலில் ஓசிச்சோறு என்பது இல்லை எல்லாத்துக்கும் விலையுண்டு. நல்லதோ கெட்டதோ அதை மக்களிடம் விற்கவைக்கும் எளிய வியாபார தந்திரம் குற்றவுணர்ச்சியை தூண்டிவிடுதல்.


                                  கருப்பா இருந்தா மாப்ள வேலை கிடைக்காது அந்த பீக்கீரீம் அப்பிக்கிட்டா ஒடனே கிடைக்கும், மண்டைல முடியில்லன்னா வாழ்வே போச்சு திங்க வாயிந்தொறக்காது குஞ்சுல மூச்சா பிரியாது அகவே அமேசான் காட்டில உம்ம மண்டைக்குன்னே ஆர்டர் செஞ்சு எடுத்தாந்த மருந்து, குண்டா இருந்தா இல்வாழ்க்கை உட்பட மொத்தவாழ்க்கையே நாசமாகிரும்னு பயமுறுத்தற விளம்பரங்கமேல மொதல்ல காறித்துப்புங்க. நம் உடல் பற்றி நம்மை நாமே கூனிக்குறுகச்செய்யும் எந்த கேடுகெட்ட வியாபாரதந்திரங்களுக்கும் அனுமதி அளிக்கல்கூடாது. எர்வாமாட்டின்ல முடிவந்துதான் அந்த முடியழகை பார்த்துத்தான் ஒரு பொண்ணு கட்டிக்குவான்னா அப்படியொரு மயிருகல்யாணம் எத்தனைநாளைக்கு நிலைக்கும்? நாளைக்கு குர்வாமாட்டின்ல இன்னும் நாளடி அதிகம் முளைக்கும்னா ஆளை மாத்திக்கனுமா? என் உடல் என் அளவு என் நிறம் என் மண்டை இதுல மசுரில்லன்னா மசுரே போச்சுன்னு இருக்கவானாமா? பத்தாயிரம் கட்டி யோகா போறேங்கறது நாப்பதாயிரம் கட்டி டிரெல்மில் வாங்கி துணிகாயப்போடறது குகைமனுசனாவறேன்னுட்டு வவுத்தை நாக்கை காயப்போட்டு வெம்பறது எல்லாம் ஏன் சொந்தக்காசுல சூனியங்கறேன்?

                                  நமக்கு திருப்திதரும் வாழ்க்கைமுறைக்கு சிறப்புசேர்க்கும் அம்சங்களை மட்டும் எடுத்துக்கொண்டு மேம்படுவோம். பேலியோவின் நன்மை நம் சர்க்கரைவியாதிக்கு நல்லதெனில் கார்போஹைறேட் அளவைக்குறைத்து காய்கறிகளை டபுளாக்குங்கள். அவ்வளவுதான் நான் எடுத்துக்கொள்ளவேண்டியது. அதைவிட்டு தடால்னு வாங்கய்யா எல்லாரும் குகைக்கு போவோம்னுட்டு இலைதலையும் கறியுமா ரெண்டுவாரம் தின்னு முடியாம பம்பிப்பம்பி இட்லிக்கு வரனுமாங்கறேன்? என் உணவு என் உரிமை. அதுல நீயென்ன என் குற்றவுணர்வைக்கெளப்பி கொழப்பறது? உம்முடைய ஆட்டிடூட் பேலியோவெனில் செஞ்சு சந்தோசமா இருங்கய்யா. ஆனால் இந்த தகுதி அடுத்தவங்களை தப்புத்தப்பா வாழறங்கன்னு சொல்லும் தகுதியா மாறிடக்கூடாதுங்கறேன். ருசியே வாழ்வல்ல. "ருசி"யும் வாழ்வு.


                                  புடிச்சதை செஞ்சு சாப்டு மகிழ்வாக இருப்பம்யா. உணவு என்பது கலாச்சாரம் பழக்கம் மற்றும் வாழ்வுமுறை. அதுல வியாபார அரசியலெல்ல நுழைச்சு அடிபடாதிங்க.


                                  உணவாயினும் செய்யும் செயலாயினும் நமக்கு பிடிச்சதை பிடித்தால் மட்டுமே செய்வோம். அடுத்தவரை ஒப்புநோக்கி குற்றவுணர்வடையாமல் நம் எல்லை அறிந்து சுயம் தெளிந்து மகிழ்வாய் வாழ்வோம். சாப்பாடும் சம்பாத்தியமும் நாம் வாழ்வதற்கு இருக்கனும். நம் "வாழ்வு"எதுவென்ற தெளிவு நம்மிடமே இருக்கட்டும். அதை விளம்பர உலகுக்கு போலி வாழ்க்கைக்கு அடுத்தவர் விழைவுக்கு அடகுவைச்சுறாம உயிர்த்தலே நம் முன் இருக்கும் சவால்.


                                  ஆகவே எதுக்கும் மடங்கீறாதீக! நாளைக்கு ஞாயிற்றுகெழம கோழியடிச்சு பிரியாணி போடறோம். ஒரு கட்டு கட்டிட்டு குடும்பத்தோட டிவில மொக்கபடம் பார்க்கறோம் :)smile உணர்ச்சிலை

                                  Aftershock - 2010

                                  $
                                  0
                                  0


                                  "மாஸ்டர் டீச்மி குங்க்பூ"

                                  "நோ மை சன்!"

                                  "மாஸ்டர், ப்ளீஸ் டீச்மீ குங்பூ!!

                                  "நோமைசன்... நோ..."

                                  "வை மாஸ்டர் வை???"

                                  "பிகாஸ் ஐ டோண்ட் நோ குங்பூ!!"


                                  இந்தக்காமெடிக்கு தலைகீழா டைவடிச்சு சிரிக்கற அளவுக்குத்தான் எனக்கெல்லாம் சீனப்படங்களை பத்தி தெரியும். ஏன்னா பார்த்துவைச்ச படங்க எல்லாம் எண்டர்த டிராகன்ல இருந்து க்ரோச்சிங் டைகர் ஜெட்லி ஒன் தானே! ஜாக்கிபடங்கள் ஒருவகைன்னா இந்த பழங்கால அரசர் துரோகம் வெண்தாடி குரு மொட்டைல புள்ளிவைச்ச சிஷ்யனுங்க அப்பறம் பறந்துபறந்து அடிச்சும் வேலைக்காவாம கடைசில துணிய கத்தியாக்கி ஏமாந்த ஒருநொடில சொருவி வில்லனைக்கொல்லும் யாஹூசூ படங்கதானே.


                                  அதனாலதான் ஆரம்பத்துல இது சீனப்படம்னு தெரிஞ்சதும் ஒரு அசூயையா பார்க்க ஆரம்பிச்சோம். ச்சோம்னா வீட்டுல பொண்டுபுள்ளைங்க எல்லாமும். பார்த்துமுடிக்கையில் எவ்வளவு மனக்கிளர்ச்சி மற்றும் மனஅமைதி ஆனோம்னு சுருக்க சொல்லிமுடியாது! சீனப்படங்கள் பற்றிய தவறான மாயையை சுத்தமா தொடைச்செடுத்தது நிச்சயம் பலன் தான்.


                                  கதையை சொல்வதில் ஒன்னும் பாதகமில்லை. ஆண் பெண் குழந்தைகள் இருவர் என குடும்பமாக வாழும் தம்பதியர் ஒரு பெரும் நிலநடுக்கத்தில் சிதருண்டு போகின்றனர். கணவனைப்பறொகொடுத்த அந்த தாய்க்கு இடிபாடுகளைத்தோண்டி மக்களை தேடியெடுக்கும் நேரத்தில் ஒரு காங்கிரீட் தூணின் இருபக்கங்களில் அழுத்தப்பட்டிருக்கும் மகன் அல்லது மகள் இருவரில் ஒருவரை மட்டுமே விரைவாக முடிவெடுத்தால் காப்பாற்றமுடி நிர்ப்பந்தம். ஏற்கனவே கணவனை இழந்து ஊரே அழிவின் பிடியில் இருக்கும் நிலையில் அவசரத்தில் அவள் மகனை காப்பாற்றும் முடிவை எடுக்கிறாள். காங்க்ரீட்டுக்கு அடியில் மாட்டிக்கிடக்கும் மகள் இதைக்கேட்டுவிடுகிறாள். மீட்புக்குழுவின் கணிப்புத்தவறாக அவள் பாதிக்கப்படாமல் பிழைத்துக்கொள்கிறாள். மீட்கப்பட்ட மகனுடன் பாதி உயிராக தாய் ஒருபுறம் செல்ல பிழைத்துக்கொண்ட மகள் வேறொருபுறம் அழைக்கிழிக்கப்பட்டு பின்பு ஒரு தம்பதியரால் தத்தெடுக்கப்படுகிறாள்.


                                  இந்த மூன்றுபேரும் அடுத்த முப்பத்தைந்து வருடங்களுக்கு பிறகு எப்படி சேர்கிறார்கள் என்பதுதான் கதை. இதன்பிறகாக நடக்கும் நிகழ்வுகள் சம்பவங்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு உணர்வுபூர்வமானவை. மகளை காவுகொடுத்துவிட்டேனே என மருகிமருகி வாழும் தாய் ஒருபக்கம். அம்மாவே தன்னை கைவிட்டு தம்பியை மட்டும் காப்பாற்றிசென்றாளே என அபலையுணர்வில் வாழ்வை குறுக்கி குறுகிக்கொள்ளும் மகள் ஒருபுறம். இந்த ஊசலாட்டத்துக்குள் நிச்சயம் நாலைந்துமுறையாவது பொங்கிவரும் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் கதறிவிட்டேன். விட்டோம். கண்களில் நீர் வழிந்தோட உணர்வுச்சுழியில் தத்தளித்தபடி ஒரு சீனை சொல்லியே ஆகமும்னுதான் இந்த பத்தி. அந்த டைரக்டரை நேரில் கண்டால் நிச்சயம் காலில் விழுந்துவிடுவேன். இழப்பை உணர்வதை நம் கட்டுக்குமீறி வெளிப்படுத்துகையில் எந்தவித புறகாரணிகளும் கருத்தில் கொள்ளாமல் காட்டாற்றுவெள்ளமென அதை கொட்டித்தீர்க்கும் வாய்ப்பு எத்தனைமுறை அமையும்? எதற்கு இந்த பில்டப்பு? நேராக்கேக்கறேன். கடைசியா எப்ப மனசுவிட்டு அழுதீங்கன்னு நினைவிருக்கா?


                                  கனடாவில் மருத்துவ செவிலியாக கணவன் குழந்தைகளோடு வாழ்ந்துவரும் அந்தப்பெண் முப்பத்தைந்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் சீனாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அறிந்து மீட்புக்குழுவில் சேர்ந்து உதவிபுரிய விரைகிறாள். பலவருடங்களுக்கு முன்பு இதேபோன்ற ஒரு நிகழ்வில் தான் தன் தாயால் கைவிடப்பட்ட ஆறாக்கோபம் இன்னமும் இருக்கிறது. அந்த குழுவில் ஒருவன் முன்னர் நடந்த பழங்கதையை விளக்கிக்கொண்டிருக்கிறான். மெல்ல விசாரித்தறிகையில் அது ஊனமான அவன் தம்பி. அவளால் நம்ப முடியவில்லை. ஆனாலும் அவன்மேல் பெரிய ஒட்டுதல் வரவில்லை. அவனோ காணாமல்போன அக்கா கிடைத்ததில் உருகிப்போய் அவளை தொலைதூரத்தில் இருக்கும் அம்மா வீட்டுக்கு பிடிவாதமாக அழைத்துச்செல்கிறான். பிடிப்பின்றி ஆறாக்கோவத்தில் அவள். அந்த ஒரு சீன் முடிகையில் நெஞ்சைப்பிசைந்துவிட்ட வலியில் மனம்கரைந்த அழுகை.


                                  இத்தனை வருடங்கள் கழித்து பார்க்கும் அவர்கள் எப்படி நடந்துகொள்வார்கள் என்கிற பதைப்பு நமக்கு.


                                  அம்மா வீட்டிற்கு வெளியே பாத்திரங்கள் துலக்கிக்கொண்டிருக்கிறாள். இவள் தம்பியோடு தயங்கித்தயங்கி வர அம்மாவோ பார்வையை மாற்றாமல் உள்ளே சென்று அமரும்படி வேண்டிக்கொள்கிறார். வீட்டினுள் சென்ற பெண் சுவறில் தன் சிறுவயது புகைப்படத்தை பார்க்கிறாள். அதன்முன் ஒரு நீர் நிரம்பிய ஒரு சிறு பாத்திரத்தில் தக்காளிகள். இது அவள் சிறியவளாக இருக்கும்பொழுது சமையலுக்கு வைத்திருக்கும் தக்காளியை ஆசையாகத்தின்ன தூக்கிக்கொண்டு ஓடும் தினப்படி செயலை நினைவுபடுத்துகிறது. பின்னாலிருந்து அம்மாவின் குரல். உன்னை பறிகொடுத்தநாளில் இருந்து தவறாமல் உன் நினைவாய் தினமும் உன் படத்தின்முன் தக்காளிகளை வைப்பதுவழக்கம் என. மகளுக்குள் சட்டென எதுவோ ஒன்று உடைகிறது. அம்மாவிம் குற்றவுணர்வை இதுவரையிலான அலைக்கழிப்பை ஒரு நிமிடத்தில் புரிந்துகொள்கிறாள். இதுவரை கரையவிடாமல் ஊதியூதி வளர்த்த கோவக்கணலும் நாளும் மறுகிமறுகி வளர்த்துவந்த குற்றவுணர்வும் இருவருக்கும் ஒரு நிமிடத்தில் உடைந்து நொறுங்குகிறது.


                                  எவ்வளவு எளிய சீன். எந்தவித ஆரவார தம்பட்ட நடிப்பும் இன்றி மிக எளிய வசனங்களால் உடல்மொழியால் அழியாக்காட்சி ஆகிவிட்டது. நடிப்பு என்பது தோடா நாம் எப்படி தெறமையா நடிக்கறேன்னு நொடிக்குநொடி பார்வையாளனுக்கு காட்டிக்கொண்டே இருப்பதல்ல. எந்த நொடியில் அந்த நடிகர் காணாமல்போய் அந்த கதாபாத்திரம் நம்மை நம்மையறியாமல் அவர்கள் திரைக்குள்காட்டும் வாழ்க்கைக்குள் இழுத்துக்கொள்வது. இந்த ஒரு சீன் போதும். இனி ஜென்மத்துக்கும் சீனாப்படம்னா சடையனுங்க காத்துல கத்திக்கிட்டு சண்டைபோடற படம்னு சொல்லமாட்டேன்.


                                  நானெல்லாம் சும்மா சிக்ப்ளிக்ஸ்குக்கே க்ளைமாக்ஸ்ல கண்ணுல தண்ணி வச்சுக்கறவந்தான். இந்த படத்தின் இயக்குனருகூட சீனாவின் சேரனாக இருக்கக்கூடும். ஆனால் உன்னதம் என்கிறவகையில் இந்தக்காட்சியை நம்பாளு யாரால செஞ்சிருக்க முடியும் யோசிச்சதுல அது ராதிகாவா ஊர்வசியான்னு இன்னமும் தெளிவா சொல்ல ஏலலை. எளியகாட்சிகளை எளிமைகெடாமல் செய்துகாட்டத்தான் இமாலயதிறமை இயல்பாய் தேவைப்படுகிறது.


                                  முழுப்படம் யூடியூப்லயே நல்ல குவாலிடில இருக்கு. நீங்க சேரனின் தவமாய்த்தவமிருந்து படத்தை உணர்ந்துபார்த்தவரெனில் இப்படத்தை ஒருமுறை பார்த்து பொம்பள ராஜ்கிரனின் உணர்வுக்கடத்தல்களை அனுபவியுங்கள்.


                                  Viewing all 27 articles
                                  Browse latest View live